சனி, 31 அக்டோபர், 2015

வருமுன் காவாத அரசு

நமது அரசுகள், மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி படு சுறு சுறுப்பு, எள் என்றால் எண்ணையாக நிற்பார்கள், அதுவும் மக்களின் நலன் என்றால், என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன!?

இப்போது இங்கு வடகிழக்குப் பருவமழை பெய்யும் காலம் என்பது அரசிற்குத் தெரியாதா என்ன? ஒரு வேளை ஆட்சியாளர்கள் பூகோளப் பாடம் சரியாகப் படிக்கவில்லை போலும்.  சரி போனால் போகிறது. நமது வானிலை மையம் சொல்லும் வானிலை அறிக்கை கூடவா தெரியாமல் போகும்? அரசிற்கே வானிலை மையத்தின் அறிக்கையின் மீது நம்பிக்கை இல்லையோ?  மக்கள் கிண்டலடிப்பது போல்! 

சரி, அதான் இந்த முறை வானிலை அறிக்கை பலித்துவிட்டதே. பருவமழை பெய்து கொண்டிருக்கின்றதே என்று நீங்கள் சொல்லுவது கேட்காமல் இல்லை. மழையல்ல பிரச்சனை.  தோண்டப்படும் குழிகள் தான் பிரச்சனை. சென்னைவாசிகள் என்றில்லை, தமிழ்நாட்டில் உள்ள பெருநகர் மக்களுக்கு ஏற்படும் சங்கடங்கள்தான் இது. இதோ கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.



மழை பெய்யும் காலங்களில் பெருங்காற்று அடித்தால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட வேண்டும். ஆனால், பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்படாமல், மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தோ அல்லது தென்னை ஓலைகள் விழுந்தோ கம்பிகள் அறுந்து கீழே விழுந்து கிடக்கும். தேங்கியிருக்கும் தண்ணீரில், அந்தக் கம்பியில், அறியாமல் கால் வைப்பவர்கள், அதுவும் இரவு நேரங்களில், பலியாவதும், நாலுகால் செல்லங்களும் அதற்குப் பலியாகி தீனக் குரல் எழுப்பி மனதை நோகடிப்பதும் நிகழத்தான் செய்கின்றது.

அப்படித்தான், இரு தினம் முன்பு மேலே செல்லும் மின் கம்பி அறுந்து விழுந்து, மழைத் தண்ணீரில் கிடக்க, நாலுகால் செல்லம் அதில் நடந்து இறக்க நேரிட்டது. வீடுகளில் வோல்டேஜ் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. பொதுமக்கள் விழிப்படைந்து மின்சாரவாரிய அலுவலகத்தை அழைத்துச் சொல்ல, இதோ நல்ல மழையில், எங்கள் தெருவில், எலெக்ட்ரிக் கேபிள் போடுவதற்கு, எங்கள் வீடுகளின் முன்பு நீளமாகப் பெரிய குழி தோண்டி இருக்கின்றார்கள். நல்ல விஷயம்தான். ஏம்பா உங்களுக்கு இந்தப் பருவம் தான் கிடைச்சுச்சா? இது வருடா வருடம் நடக்கறதுதானே. அழகாய் திட்டமிட்டுச் செய்யலாமே. இப்பணி எல்லாம் வெயில் காலத்தில் மின்வெட்டு இருக்கும் நேரங்களில் செய்யப்பட வேண்டியவை.  அப்போது அரசிற்கும் நட்டம் ஏற்படாது.  இப்போது இப்பணிக்காக மின்வெட்டு செய்து பொதுமக்களுக்கும் இடையூறு, அரசிற்கும் நட்டம்.

தார் ரோடில் நோண்டி இருக்கின்றார்கள். மீண்டும் தார் உடனடியாகப் போடமாட்டார்கள். தாமதிப்பார்கள். மண்ணால் மூடிவிடுவார்கள். மழைக்காலம். மண் அரிப்பெடுத்துக் குழிகளாகும். வண்டிகளை வெளியில் எடுப்பதும் சிரமமாகும்.  

முன்பெல்லாம் 300, 400 வாட்ஸ் உபயோகமே ஒரு வீட்டிற்கு சராசரியாக. ஆனால் தேவைகள் பெருகப் பெருக இப்போது 1000 வாட்ஸிற்கும் மேலாக ஒரு வீட்டிற்குத் தேவைப்படும் போது, அப்பகுதியில் எத்தனை வீடுகள் இருக்கின்றன, அவர்கள் எவ்வளவு மின் சக்தி உபயோகிக்கின்றனர், எதிர்காலத்தில் இன்னும் எவ்வளவு தேவைப்படலாம் என்றும், அந்தப் பகுதியில் இருக்கும் ட்ரான்ஸ்ஃபார்மர் எவ்வளவு மின் இணைப்புகளைத்தாங்கும் என்றும் கணக்கிட்டு, மின் இணைப்புகளைப் பாதுகாப்பாக ஏன் கொடுப்பதில்லை? சரி அப்படித்தான் செய்யவில்லை.  போகட்டும். இதை எல்லாம் மழை பெய்யாத காலத்தில், முன் கூட்டியே செய்திருக்கலாமே. 

காலம் காலமாய் நடந்து வருவது மட்டுமல்ல, சில பல உயிரிழப்புகளும், பின்னர் குழிகள் மூடப்படாமல் அப்படியே விடப்படுவதும், தண்ணீர் தேங்குவதும், யாரேனும் அதில் விழுவதும், நடக்கும் ஒன்றே. அனுபவம் என்பது நல்ல பாடம் என்பார்கள். ஆனால் நமது அரசுகளுக்கு இந்த அனுபவங்கள் எதுவுமே எந்தப் பாடமும் புகட்டுவதாகத் தெரியவில்லை. சொந்த அனுபவம் இல்லாததாலோ?

படம் - நன்றி - இணையம்

பலரையும் தாக்கி வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்காக, சமீபத்தில் அம்மாவின் படம் தாங்கிய அறிவிப்பு “உங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்”, என்ற அறிவிப்புப் பலகை ஒன்றை அன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பார்த்த போது எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 

பின்னே என்னங்க, அம்மா தனது அறிவிப்புப் பலகையின் கீழ், குப்பையுடன் குட்டையாகத் தேங்கியிருந்த மழைத் தண்ணீரில், கொசு முட்டைகள் குமிழிகளாக மிதந்திட, கொசுவை வளர்த்துக் கொண்டிருக்கின்றார் என்றால் சிரிக்காமல் என்ன செய்வது? சரி நாங்கள் வீட்டையும், சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம்.

ஆனால், பொது இடங்களில் உள்ள குப்பைக் கூளங்கள் நீக்கப்படாமல் அப்படியே இருந்தால், அதுவும் மழை பெய்யும் காலத்தில் கொசுக்கள் தங்கள் இனத்தை வளர்க்காமல் என்ன செய்யும்.  ஹும் இந்தச் சுத்தம் பற்றிய அறிக்கை டெங்கு வரும் போது மட்டும்தான். அதுவும் ஊர் சுத்தம், பொதுநல சுகாதாரம் பற்றி அக்கறை இல்லாத அரசு. அரசு எவ்வழி அவ்வழி மக்கள் என்பது போல் மக்களும் பொதுசுகாதாரத்தைப் பேண ஒத்துழைப்பதில்லை. எல்லாவற்றிற்கும் சிங்கப்பூரைப் போல அபராதம் விதித்தால்தான் பொறுப்புணர்வார்கள் போலும். 4.30 மணிநேரப் பயணத்தில் இருக்கும் அந்த அண்டை நாட்டினைப் பார்த்து அரசும், மக்களும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

டெங்கு பரவுவதையும், அதன் தீவிரத்தையும் தடுக்க, அம்மா உணவகத்தில் நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச் சாறு இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்கெட்டபின் சூரியநமஸ்காரம் என்பதைப் போல். பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவது போல் என்றும் சொல்லலாமோ?

நம் அரசிடம், வரும் முன் காக்கும் எந்தத் திட்டமும், செயலும் ஏன் இல்லை? என்பது மிகவும் வேதனைக்குரியது. வரும் முன் காப்பதுதானே ஒரு அரசின் வேலை.  வந்த பின் உயிர் போனபின் என்ன செய்ய முடியும்? ஒப்பாரி வைத்து, அரசை நாலு கெட்ட வார்த்தைகள் போட்டு, இரண்டு நாட்கள் திட்டிவிட்டு மீண்டும் மக்களாகிய நாம் எதுவுமே நடக்காதது போல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதுதான் நடந்து வருகின்றது. அரசிற்குச் சாதகம்தான்.

தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குறுதிகள் பேசி, குடிசைகள் பக்கம் சென்று, பின்னர் மறக்கும் அலட்சியப் போக்கு.  மக்கள் நாம் முட்டாள்கள் மட்டுமல்ல பொறுப்பற்றவர்களும் கூட. அரசு பேருந்துகளிலும், அரசு அலுவகங்களிலும் திருக்குறள் பதியத் தெரிந்த அரசிற்கு “வருமுன் காவாதார் வாழ்க்கை” எனும் திருக்குறள் தெரியாமல் போனது ஏனோ?!  

பதிவர் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.  இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் நம் வலைச்சித்தர் டிடி அவர்களின் வலைத்தளத்திற்குச் சென்று வேண்டுகோளை நிறைவேற்ற முயற்சி செய்யலாமே...http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/World-Tamil-Bloggers-Guide-Book.html

--கீதா


50 கருத்துகள்:

  1. வணக்கம்

    தேர்தல் வந்தால்தான் ஆட்சியை பிடிக்க படாத படும் அரசியல் வாதிகள் பொதுச்சேவையில் கவனம் செலுத்துவதில்லை.பிச்சை கேட்பது போல வக்கு சேகரிக்க வீடு வீடாக வரும் அரசியல் வாதிகள் ஊரை கவனப்பதில்லை.

    அத்தோடு மக்களுக்கும் அக்கறை இல்லை... பொது பணியில் ஈடுபட... மக்கள் நினைத்தாலும் ஊரை சுத்தமக வைக்கலாம்

    ஒவ்வொன்றையும் பற்றி மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வாங்க தம்பி ரூபன் பதிவு வந்ததும் உடன் வந்து சூடாக பதிலிட்டு வாக்கும் அளித்தமைக்கு மிக்க நன்றி ரூபன். ஆமாம், மக்களும் ஒத்துழைத்து, அரசும் ஆவன செய்தால் நன்றாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  4. நம் அரசியல்வியாதிகளுக்கு பணம் சம்பாரித்தால் போதும். நாடு எக்கேடோ கெட்டுப் போகட்டும். நல்ல பதிவு. அரசு செவி சாய்த்தால் நன்றாக இருக்கும்.
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் செந்தில்...அரசும் சரி மக்களும் சரி பொறுப்பற்றவர்கள்தான்...என்ன செய்ய...

      நீக்கு
  5. விழிப்புணர்வுப் பதிவு. ஆதங்கப் பதிவு. கவலைப் பதிவு. கவலைப்படவைக்கும் பதிவு. என்ன செய்ய? நமக்கு வாய்க்கும் ஆட்சியாளர்கள் அப்படி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜமாகவே ஸ்ரீராம். ஆதங்கம் தான்...வாய்க்கும் ஆட்சியாளர்கள்...தேர்ந்தெடுக்கும் நாம்...ம்ம்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
    2. நிஜமாகவே ஸ்ரீராம். ஆதங்கம் தான்...வாய்க்கும் ஆட்சியாளர்கள்...தேர்ந்தெடுக்கும் நாம்...ம்ம்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  6. பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தையாரே தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  7. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ,இது அரசியல்வாதிக்கும் பொருந்தும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  8. சிந்தனைக்கு வித்திட்ட சிறப்பான பதிவு
    வருமுன் காக்க வேணும்
    1. அரசியல்வாதிக்கு - நாடாளுமன்ற நாற்காலி
    2. நமக்கு - நமது சூழல்
    3. அரசுக்கு - நாட்டவர் நலன்
    இதில் அரசியல்வாதி வெல்ல வாக்குப்போட்டவர் தோற்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் ஜீவலிங்கம் யாழ்பாவாணன்..தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  9. எங்கும் காணப்படும் நிலை இதுதான். அவரவர்களாக உணர்ந்தால்தான் அனைத்தும் சரியாகும். எங்குமே அரசியலின் தாக்கம் இருக்கும்போது இதனைச் சரிசெய்வது என்பது சற்று சிரமமே.
    வாய்ப்பு கிடைக்கும்போது விக்ரமம் என்னும் இடத்தில் நாங்கள் பார்த்த புத்தர் சிலையைப் பற்றிய அனுபவப்பகிர்வைக் காண வருக. http://ponnibuddha.blogspot.com/2015/11/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா..தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      தங்கள் வலைப்பூவைப் பார்க்கின்றோம் ஐயா..

      நீக்கு
  10. பொட்டில் அடித்தது போல் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. இது வருமானத்தில் குறியாக உள்ள அரசு! மதுக்கடைகளை ஆறாக திறந்து விட்டுள்ளதே அதற்கு சிறந்த உதாரணம். நன்றாக இருக்கும் சாலைகளில் குழி தோண்டுவதே மின்சார வாரியத்தின் வேலையாக போய்விட்டது. என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். சரியான பாயின்ட் மதுக்கடை...ஆம் சிறந்த உதாரணம்..அலட்சியமான அரசு என்பதற்கு...

      நீக்கு
  12. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கொடும் (435)
    நன்றி
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி புதுவை வேலு ஐயா தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  13. வணக்கம் இந்த கொடுமை இன்று, நேற்றா ? நடக்கிறது காலம் காலமாக நடப்பதுதானே... தேர்தல் வருகிறது... இதோ வரப்போகிறது மக்கள் தீர்ப்பளிக்கும் நாள் ஏன் ? யாரும் உணர்ந்து பார்ப்பதில்லை அரசியல்வாதிகளை குற்றம் சொல்வது என்னைப் பொருத்தவரை அறியாமை என்றே சொல்வேன்.

    அவர்கள் கோடிக்கணக்கில் தேர்தலுக்கு செலவு செய்தின்றார்களே அதை பன்மடங்காக எடுக்கத்தானே என்ற சிற்றறிவுகூட மக்களுக்கு இல்லாமல் போய் விட்டது இந்த லட்சணத்தில் இவர்களுக்கு ஆறறிவாம் இது நிச்சயமாக பொய்க்கணிப்புதான்

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும் (இதற்க்குள் நானும் உண்டு)
    -பி.எஸ்.வீரப்பா
    தமிழ் மணம் 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதச் சொல்லுங்க கில்லர்ஜி....ஹஹ பி எஸ் வீரப்பா ஸ்டைலில் வசனமா..

      நன்றி உங்கள் விரிவான கருத்திற்கு..

      நீக்கு
  14. என்ன செய்வது நம்மால் ஆதங்கப் படத் தானே முடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் முரளிதரன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...ம்ம் நம் இயலாமை..

      நீக்கு
  15. அரசின் இலட்சணம் நம்மைப்போல இருக்கிறது. நம் இலட்சணம் அரசைப் போலவே இருக்கிறது. ஒரு பொட்டலம் பிரிட்டானியா பிஸ்கட் வாங்கினால் கூட ஞெகிழிப் பையைக் கேட்டு வாங்கி அதில் போட்டுக் கொண்டு செல்கிறார்கள் மக்கள். அரசியல் வாதிகள் தாம் வருகிற இடம் என்றால் சாலையில் கூட மண் இல்லாமல் கூட்டி சுத்தமாக்கி வைப்பார்கள். நமக்கெல்லாம் எப்போதுதான் விடிவோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தமிழானவன்...நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரியே...எப்போது விடிவோ? நல்ல ஆட்சியை மக்களாகிய நாம் தேர்ந்தெடுக்காவிட்டால் விடிவு வராது...

      மிக்க நன்றி தங்களின் அழகான கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  16. >>> ஒரு வேளை பூகோளப் பாடம் சரியாகப் படிக்கவில்லை போலும் <<<

    பூகோளப் பாடத்தை மட்டுமா!.. எதையுமே சரியாகப் படிக்கவில்லை!..

    ஏதோ தலையெழுத்து... ஓடிக் கொண்டிருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஹஹஹ் அதுவும் சரிதான் எதையுமே சரியாகப் படிக்கவில்லைதான்...ம்ம் மக்கள் நாமும் அப்படியே ...தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா..

      நீக்கு
  17. என்ன நீங்கள் இதைச் செய்யவில்லையே, அதைச் செய்யவில்லையே, இப்படிச் செய்கிறார்களே, அப்படிச் செய்கிறார்களே என உங்கள் பாட்டுக்கு எழுதிக் கொண்டே போகிறீர்களே? நீங்கள் கூறும் இவற்றையெல்லாம் அரசு செய்து விட்டால் இந்த நாடும் மக்களும் உருப்பட்டு விட மாட்டார்களா? மேலும் "உயிர் போனபின் என்ன செய்ய முடியும்?" என்று வேறு கேட்டிருக்கிறீர்கள். ஏன், அதற்குத்தான் இழப்பீடு தருகிறார்களே? அதுவன்றோ அரசுக்குப் பீடு? கடைசியாகச் சொன்னீர்களே, "சொந்த அனுபவம் இல்லாததாலோ?" என்று, சரியான போடு!

    துணிச்சலான பதிவு! அதுவும் மக்கள் கலை இலக்கியப் பாடகர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கும் இந்த நேரத்தில்! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இபுஞா சகோ! ஹ்ஹ ஓ அதுவும் சரிதான். இழப்பீடை விட்டுவிட்டேனே...ஆம் அது அரசிற்கு எவ்வளவு பெருமை.

      ஆம் சகோ ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வேன், குழிகள் நிறைந்த சாலையில் குலுங்கிக் குலுங்கிப் பயணிக்கும் போது இவர்கள் எல்லோரும் எப்படிச் செல்லுகின்றார்கள் என்று! மின்வெட்டு ஏற்பட்ட போது இவர்களுக்கு எல்லாம் மின்வெட்டு என்பதே இருக்காதோ என்று. ஏழை மக்கள் கொசுக்களின் குடும்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே இவர்கள் வீட்டிலெல்லாம் ஒரு கொசு கூட உள்ளே நுழையமுடியாதே என்று...இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

      மிக்க நன்றி சகோ தங்களின் நல்ல நக்கலான பின்னூட்டத்திற்கு. ஓ கோவன் அவர்கள் கைதா!. ம்ம்ம் எதிர்பார்த்ததுதான்...பின்னே டாஸ்மாக்கிற்கு எதிராக என்றால்...என்னவோ போங்க....

      நீக்கு
    2. மிக்க நன்றி இபுஞா சகோ! ஹ்ஹ ஓ அதுவும் சரிதான். இழப்பீடை விட்டுவிட்டேனே...ஆம் அது அரசிற்கு எவ்வளவு பெருமை.

      ஆம் சகோ ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வேன், குழிகள் நிறைந்த சாலையில் குலுங்கிக் குலுங்கிப் பயணிக்கும் போது இவர்கள் எல்லோரும் எப்படிச் செல்லுகின்றார்கள் என்று! மின்வெட்டு ஏற்பட்ட போது இவர்களுக்கு எல்லாம் மின்வெட்டு என்பதே இருக்காதோ என்று. ஏழை மக்கள் கொசுக்களின் குடும்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே இவர்கள் வீட்டிலெல்லாம் ஒரு கொசு கூட உள்ளே நுழையமுடியாதே என்று...இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

      மிக்க நன்றி சகோ தங்களின் நல்ல நக்கலான பின்னூட்டத்திற்கு. ஓ கோவன் அவர்கள் கைதா!. ம்ம்ம் எதிர்பார்த்ததுதான்...பின்னே டாஸ்மாக்கிற்கு எதிராக என்றால்...என்னவோ போங்க....

      நீக்கு
  18. எல்லா ஊர்களிலும் இதே கதைதான். எங்கள் ஊரில் இப்போது மேம்பாலம் கட்டும் வேலைகள் நடந்து வருகின்றன - போக்குவரத்து நெரிசலை சமாளிக்க. எல்லா தெருக்களையும், முக்கிய சாலைகளையும் தோண்டிப் போட்டிருக்கிறார்கள். இருக்கும் இடத்தில் அத்தனை வண்டிகள் செல்ல வேண்டும். புழுதியும், தூசியும் தாங்க முடியவில்லை. மழைக்காலம் தொடங்கிவிட்டது - சாதாரணமாகவே வீதிகளின் நடுவே இருக்கும் பள்ளங்களில் மனிதர்களும், விலங்குகளும் விழுந்து எழுந்து போய்க் கொண்டிருக்கின்றனர். இப்போது மேம்பாலம் காட்டுவதற்காகத் தோண்டும் பள்ளங்களில் மழைநீர் வேறு தேங்கி நிற்கிறது. எப்போது மேம்பாலம் கட்டி முடித்து எப்போது இந்தப் பள்ளங்கள் மறையும்? வருமுன் காக்கும் திட்டங்களும் இல்லை; வந்தபின் காப்பதும் இல்லை.
    சரியாகத் திட்டமிடாமல் பெங்களூரு விரிந்து கொண்டே போகிறது. குப்பைகூளங்கள், கொசுத் தொல்லை எல்லாம் இங்கும் உண்டு. யார் சரி செய்யப் போகிறார்கள்? ஒவ்வொரு அரசும் தனக்கு முன்னிருந்த அரசைக் குற்றம் சொல்லிகொண்டிருக்கும். நாமும் இப்படியே வாழ்ந்து கொண்டிருப்போம்.

    பதிலளிநீக்கு
  19. மிக மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரி. அத்த்னையும் நறுக். எல்லா பெருநகர்களும் அப்படித்தான் இந்தியாவில். தலைநகரும் அப்படித்தான் இருக்கின்றது...குப்பையும் நாற்றமுமாய்...நாமும் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு மூக்கைப் பொத்திக் கொண்டு, காதைப் பொத்திக் கொண்டு, வாயையும் மூடிக் கொண்டு மௌனமாய் புலம்பிக் கொண்டு...அப்புறம் மறந்து இரு கோடுகள் தத்துவத்தில் வாழ்ந்து கொண்டிருப்போம்..

    மிக்க நன்றி சகோ விரிவான அழகான க்ருத்துக்களுடன் கூடிய பின்னூட்டத்திற்கு

    பதிலளிநீக்கு
  20. மக்கள் பணத்தை ஏப்பம் விடத்தெரிந்த அளவுக்கு எந்த ஆட்சிபீட அதிகாரமட்டத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் நிதர்சனநிலை புரிவது இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

      நீக்கு
  21. அன்புள்ள சகோதரி,

    யார் மக்களைப் பற்றி சிந்திக்கிறார்கள்? வரும் தேர்தல் பற்றிச் சிந்திக்கத்தானே அவர்களுக்கு நேரம். ஆட்சியாளர்களையோ... அரசியல்வாதிகளையோ எந்த டெங்கும் தாக்கப்போறதில்லை. பாமரர்கள் பாட்டாளிகள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

    ஓட்டுக்கு ஒருநாள் மட்டும் ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுத்தால்... சில இலவசங்களைக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தால் போதும் அவர்களின் காலடியில் அய்ந்து வருடத்திற்கு அடிமையாகளாகக் காத்திருக்கிறார்கள் செம்மறியாடுகளாய்!

    மக்களின் அடிப்படைத் தேவைகளை முதலில் மக்களே உணர்ந்து திருந்த வேண்டும்.
    ‘திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?’

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மணவையாரே ஆம் உண்மைதான் தங்களின் விரிவான கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  22. பதில்கள்
    1. மிக்க நன்றி செல்வா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  23. தெலுங்கில் இண்டிக்கி இண்டி ராமாயணா என்பார்கள். தமிழில் வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதை. எங்களூரில் இதே செய்திதான் கூடுதலாக ஒரு ஏரியில் சாக்கடைத் தண்ணீர் விடுதலால் அந்தஏரியே நுரை தள்ளி போவோர் வருவோர் மீது அள்ளி வீசுகிறதாம் இதோ இப்போ என்று சொல்வார்கள் மீண்டும் மெத்தனம் வந்துவிடும் இந்த அலுவலகங்களில் பணி ஆற்றுவோர் எங்கே போகிறார்கள் இல்லை அவர்கள்தான் அரசோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். எல்லா இடங்களிலும் இதே கதைதான்...

      நீக்கு
  24. மக்களையும் அவர்கள் நலனையும் பற்றிச் சிறிதும் கவலையில்லாத அரசு!

    இன்று துணுக்கொன்றில் பார்த்தது,

    கள்ளுண்ணாமை என்கிற அதிகாரத்தில் மது அருந்தாதீர்கள் என்று சொன்னதற்காகத் திருவள்ளுவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்!

    “தற்பாடு பறவை பசிப்பப் பசையற
    நீர்சூல் கொள்ளாது மாறிக் கால்பொரச்
    சீரை வெண்டலைச் சிறுபுன் கொண்மூ
    மழைகா லூன்றா வளவயல் விளையா
    வாய்மையுஞ் சேட்சென்று கரக்குந் தீதுதரப்
    பிறவு மெல்லாம் நெறிமாறு படுமே
    கடுஞ்சினங் கவைஇயக் காட்சி
    கொடுங்கோல் வேந்தன் காக்கு நாடே“

    என்றொரு பழஞ்செய்யுள் உண்டு.

    இன்றைய அரசும் ஆட்சியும் காண மனதுள் ஒலிக்கிறது இப்பாடல்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ. அழகான பழஞ்செய்யுளுடன் ஒரு பின்னூட்டத்திற்கு. தங்களின் ஆழ்ந்த கருத்து மிகுந்தப் பின்னூட்டம் எங்களுக்கு நிறைய தெரிந்து கொள்ள உதவுகின்றது சகோ. எப்படி இப்படித் தேடித்தேடித் தருகின்றீர்கள். உங்கள் ஆர்வமும், ஈடுபாடும் வியக்க வைப்பது மட்டுமல்ல, உங்களை மெச்சவும் வைக்கின்றது. மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  25. ஏதோ பதிய வேன்டும் என்று பதிந்ததுபோல் தெரிகிறது.

    உங்கள் வீட்டுக்குள் இருக்கும் 'மின் இணைப்புக்கு' ஆங்கிலத்தில் மின்சார அலுவலகத்தில் என்ன பெயர் தெரியுமா?..
    இதுபற்றி தெரிந்தால் பகிருங்கள்..

    அங்கு பணிபுரிபவர்களும் மாணுடர்களே தமிழகத்தின் செல்லப் பிள்ளையாம் சென்னை தவிர்த்து மற்ற வசிப்பிடங்களில் வாழும் எளியோர் வலி பற்றி அரை சில வாதிகளுக்குத்தான் தெரியவில்லை.. ஆனால் உங்களுக்குமா...?

    பதிலளிநீக்கு
  26. பிரச்சனைகள் எல்லா இடங்களிலும் உண்டும். ஒவ்வொரு மனிதரும் மாற வேண்டும். சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. என் வீடு சுத்தமானால் போதும் என வீட்டுக்குப்பையை பொது இடங்களில் எங்கே வேண்டுமானாலும் போடும் மனப்பாங்கு மாற வேண்டும். தில்லியில் எங்கள் பகுதியில் காலை நேரத்தில் ஒரு வாகனம் அறிவிப்புடன் வரும். குப்பைகளை கண்ட இடங்களில் போடாதீர்கள், இது உங்கள் நகரம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தாலும், வீட்டிலிருந்து கீழே இறங்கி வண்டிக்காரரிடம் கொடுக்கும் நபர்கள் மிக மிகக் குறைவு. வெளியே போகும்போது குப்பைத்தோட்டியை நோக்கி, காரிலிருந்தபடியே வீசி விட்டு செல்பவர்கள் ஏராளம். நல்ல மாற்றம் வர வேண்டும் - ஒவ்வொரு மனிதனின் மனதிலும்.....

    பதிலளிநீக்கு
  27. அரசாள வருவபவர்கள் சேவை செய்யவா வருவதில்லை.... தங்கள் வருமானத்தையும் சொத்தையும் பெருக்கவே வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு