ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

பிரகாஷ்ராஜ் நடித்த விளம்பரம் தவறா?!...

படம் இணையம்.

பிரகாஷ் ராஜ், சமீபத்தில் நடித்த ஒரு நகைக்கடை விளம்பரத்தின் உபயத்தில் பரபரப்பாகி சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியிருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். பெண்களை இழிவுபடுத்துவதாகச் சொல்லப்பட்ட விமர்சனம். எதிர்ப்பு விளம்பரத்திற்கல்ல அதில் நடித்த பிரகாஷ்ராஜிற்கு என்பதை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது.

அந்த விளம்பரத்தில் சொல்லப்படும் வசனம்/கருத்து பிரகாஷ்ராஜ் அவர்களின் தனிப்பட்டக் கருத்தாக இருந்திருந்தால் விமர்சிக்கலாம். ஆனால், அதுவும் கூட அவர் பொது இடத்தில் முன்வைத்தால். விளக்கம் கீழே. ஆனால், அவர் தனது வருமானத்திற்காக நடித்த ஒரு விளம்பரத்தில், அதன் இயக்குனர் அவரை இயக்கியதை அவர் செய்திருக்கின்றார். அவ்வளவே. இதனை இத்தனை உணர்வு பூர்வமாக அணுக வேண்டுமா? அணுகுவதில் அர்த்தம் உள்ளதா?  நடைமுறை அந்த விளம்பரத்தில் வருவது போலத்தானே உள்ளது.  

பிரகாஷ் ராஜ் அந்த வர்த்தக விளம்பரத்தில் நடித்திருக்கக் கூடாது என்றால் அதை ஒரு கோணத்தில் சரி என்றாலும், மற்றொரு கோணத்தில் பார்த்தால், வர்த்தகம்/வணிகம் என்று வந்து விட்டால், பெரும்பான்மையான வர்த்தகங்களில்/வணிகங்களில் நெறி முறைகள்(எதிக்ஸ்) புறம்தள்ளப்பட்டு லாபம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். அதுதான் வர்த்தக உலகம். பிசினஸ் இஸ் பிசினஸ்.  நோ செண்டிமென்ட்ஸ்.

திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இல்லையா? வசனங்கள் உட்பட. நம் தமிழ் திரைப்படங்களில் பெண்கள் மிகவும் அநாகரீகமான உடைகள் அணிந்தும், சில விரும்பத் தகாத கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லையா? கல்லூரிக்கு, நடைமுறையில் இல்லாத உடைகளை அணிந்து வருவது போல்,  காட்சிகள் திரைப்படத்தில் இல்லையா? ஒரு திரைப்படத்தில் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியையே அப்படி உடை அணிந்து வருவது போலத்தானே காட்சிப்படுத்தப்பட்டது? .அப்போது அந்த நடிகைகளை, நடிகர்களை நோக்கி ஏன் கேள்விகள் எழுப்பப்படவில்லை? 

இந்தக் கோணத்தை எடுத்துக் கொண்டால், சரி, அந்தத் திரைப்படத்தில் இயக்குனரின் சீன் அது அதனால் அப்படிப்பட்ட உடை என்று நியாயப்படுத்தினாலும் அந்த நடிகைகள், பெண்களை இழிவுபடுத்தும், ஆசிரியர்களை இழிவுபடுத்தும் கதாபாத்திரம் என்று சொல்லி அது போன்ற காட்சிகளில் நடித்திருக்கக் கூடாதுதானே? நாம் ஏன் கேள்விகள் எழுப்பவில்லை? அவர்கள் அதை வெறும் நடிப்பு, வருமானம் என்ற கோணத்தில்தானே செய்தார்கள் என்றால் பிரகாஷ்ராஜும் அதைத்தான் செய்திருக்கின்றார்.

இங்குஎங்கள் ப்ளாகில்http://engalblog.blogspot.com/2015/08/blog-post_26.html  பல்சுவைக் கதம்பம் பகுதியில் வாலியைப் பற்றிப் பகிரப்பட்டதிலிருந்து…..

கவியரங்கம் முடிந்ததும் ஒரு முதுபெரும் தமிழ்ப்புலவர் வாலியிடம் "ஐயா.. இவ்வளவு அற்புதமாக் கவியரங்கத்துல பாடுற நீங்க, சினிமாலப் பாட்டுல மட்டும் வர்த்தக நோக்கோடு செயல்படற மாதிரித் தெரியுதே.."  என்றாராம்.


அதற்கு வாலி,
"இங்கே நான் 
வண்ணமொழிப் பிள்ளைக்குத் 
தாலாட்டும் தாய்;
அங்கே நான் விட்டெறியும் 
எலும்புக்கு வாலாட்டும் நாய்"


என்றாராம்.
(நன்றி ஸ்ரீராம்)

இது திரைப்பட நடிகர்களுக்கும், விளம்பரங்களில் வருபவர்களுக்கும் பொருந்தும்.  அதனால்தானே நாம் அவர்களை நடிகர்கள் என்கின்றோம்.

விளம்பரங்கள் நொடிக்கு ஒருதடவை வருவதால் அவை மக்களின் மனதில் பதியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டால்.... விளம்பரங்கள் ஒரு சில மாதங்கள்தான்....ஆனால், தினமும், நாள் முழுவதும் வீட்டு வரவேற்பரையில் வந்து, பெரும்பான்மையான பெண்களை வசீகரித்துக் கட்டிப் போட்டிருக்கும், பெண்களை வில்லிகளாகச் சித்தரித்துக் கீழ்தரமான வசனங்கள் பேசப்படும் தொடர்களை எந்த வகையில் சேர்க்கலாம்? ஏன் எதிர்ப்புகள் இல்லை? அதிலும் வரதட்சணைக் கொடுமைகள் காட்சிப்படுத்தப்படுகின்றனதானே!

அது நடிப்பு என்றால் பிரகாஷ்ராஜ் பேசியதும் விளம்பரத்திற்கான நடிப்பே.
நிற்க. மற்றொரு பார்வை. இப்போது விளம்பரத்தின் கருத்தை ஒத்த சமூகப் பார்வை.  ஒரு வேளை, பரந்த எண்ணங்கள் உள்ள ஒரு சில பெற்றோர்களுக்கு இந்த விளம்பரம் “டென்ஷனை” ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், பொதுவாக, விளம்பரத்தில் சொல்லப்பட்டது போல், பெரும்பான்மையான பெற்றோர்கள், குறிப்பாக நடுத்தரவர்கத்தைச் சேர்ந்தவர்களும், அதற்குக் கீழே உள்ள கோட்டில் உள்ளவர்களும், பெண் குழந்தைகள் உள்ளவர்கள், வேலைக்குப் போகும் பெண் குழந்தைகள் உள்ளவர்களும் பேசுவதுதான். பெண் குழந்தைகள் உள்ள எனது உறவினர்கள் பலரும் அவ்வப்போது நகைகள் வாங்கிச் சேமிக்கும் போதும் நான் கேட்டதுண்டு.

“ஏன் இப்படி நகைகளை வாங்கிச் சேமிக்கின்றீர்கள்? அவர்களுக்கு நல்ல கல்வி கொடுத்து, நல்ல வேலைக்கு அனுப்பி, அந்தக் குழந்தையை தன் காலில் நிற்கச் செய்து, எந்தவிதச் சூழலிலும் வாழ்க்கையைத் தைரியமாக, தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் இந்தச் சமூகத்தில் வாழக் கற்றுக் கொடுக்கலாமே என்றால், அவர்களின் பதில் இதுதான்.

“ஆமாமா நீ சொல்லுவ...உனக்கு ஒரே குழந்தை அதுவும் ஆம்பளப் புள்ளை.  பொம்பளப் புள்ள உனக்கு இருந்திருந்தா, என்னதான் பெரிய படிப்பு படிச்சு, வேலைக்குப் போனாலும், அப்ப தெரிஞ்சுருக்கும் டென்ஷன்....நீ இப்படிச் சொல்லியிருக்கமாட்ட.”

எனது மகன் எனக்குப் பெண்ணாகப் பிறந்திருந்தால்.....மேலே சொன்னதுதான்.  அது எனது தனிப்பட்டக் கருத்து....அதை இங்குச் சொல்லிப் பயனில்லை. நடைமுறையில் சாத்தியமில்லாது போனதால், எனக்கு மகனாகிப் போனதால், நிரூபிக்க வழியில்லை. எனவே, நான் அவர்களின் வாதம் சரிதான் என்பேன்.

தரக் குடும்பமானாலும், திருமணம் என்பது சமூக அந்தஸ்து அடையாளமாக மாறியிருப்பது வேதனைக்குரியதே.  திருமணத்திற்கு ஆகும் செலவு 20 லட்சம். திருமணத்திற்கு மட்டுமல்ல, ஒரு சில சமூகங்களில் பெண் குழந்தைகள் வயதிற்கு வரும் போது கொண்டாடும் சடங்கு என்பதற்கும் செலவுகள் செய்யப்படுகின்றதுதான். இது மக்களே உருவாக்கிக் கொண்டதுதான்.

அடுத்து நல்ல கணவன், குடும்பம் அமைவது என்பன போன்ற பல கவலைகள், இருக்கத்தானே செய்கின்றது? என்னதான் சமுதாயம் முன்னேறி இருக்கின்றது என்றாலும், திருமணங்களில் நகைகள், பட்டுப் புடவைகள், வர்த்தகப் பரிமாற்றம் (சொத்து, பணம் முதலியவை), வரதட்சணை, அந்தஸ்து, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் என்பன இன்னும் மறைந்ததாகத் தெரியவில்லை. தங்க நகைகள் இல்லாமல் திருமணம் நடக்கின்றதா? இப்போது அது விற்கும் விலையில் எத்தனைக் குடும்பங்களால் ஒரு குந்துமணி அளவேனும் வாங்க முடிகின்றது?

ஆண் பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தினரோ, ஆண் பிள்ளைகளோ தனக்கு வரப் போகும் பெண் வீட்டிலிருந்து எந்த நகையும் வேண்டாம், பணமும் வேண்டாம், பெண்ணை அப்படியே ஏற்றுக் கொள்கின்றேன்.  திருமணமும் சிம்பிளாக இருக்கட்டும் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? ஏன் செய்தித் தாள்களில் கூட இன்னும் வரதட்சணைக் கொடுமைகள், கொலைகள், தற்கொலைகள் என்று வரத்தானே செய்கின்றது!

(ஒரு சில விதிவிலக்குகள் இருக்கின்றார்கள் நிச்சயமாக. அதே போன்று பெண்கள் வீட்டார், கணவனின் வீட்டிலிருந்து பணம் பிடுங்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கின்றன. அதையும் நான் அறிவேன். இங்கு நான் சொல்லி இருப்பது பெரும்பான்மை சமூகத்தையே)

திருமண வயதில் பெண் இருந்து திருமணம் தாமதித்தாலோ, நிகழவில்லை என்றாலோ பெற்றோர்கள் பெரும் கவலைக்கு உள்ளாவதை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் எனது குடும்பத்திலும், நட்பு வட்டத்திலும்.

திருமணக் கவலை ஒரு புறம் இருக்க, பெண் குழந்தைகள் வெளியில் தனியாகச் செல்ல முடிகின்றதா? பெண் குழந்தைகள் வீடு திரும்பும் வரை கலவரப்படாமல் நீங்கள் இருக்கின்றீர்களா? தாமதமானால் நிம்மதியாக இருக்க முடிகின்றதா உங்களால்? இப்போது நிகழும் நிகழ்வுகள் உங்கள் மனதில் நிழலாடத்தானே செய்கின்றது? ஒரு சில பெற்றோர் வேண்டுமானால் தைரியமாக, நிம்மதியாக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான பெற்றோர் நிம்மதியாக இருக்க முடிவதில்லைதானே? அதையும் நாம் டென்ஷன் என்று எடுத்துக் கொள்ளலாம் தானே? நண்பர் விசுAwesome அவர்கள் இதை அழகாகச் சொல்லி இருந்தார். http://vishcornelius.blogspot.com/2015/08/blog-post_22.html. ஆம்! அவருக்கும் இரு பெண்-ராசாத்திகள் – முதல் டென்ஷன், இரண்டாம் டென்ஷன் என்று!

எனவே, நம் சமுதாயம் இப்படி இருக்கும் வரை, மாறாத வரையில், பெண்கள், திருமணம் போன்றவற்றின் மீதான சமுதாயப் பார்வை மாறாத வரையில், நமது பார்வையும், எண்ணங்களும் மாறாத வரையில் டென்ஷன் என்ற வார்த்தை நிலவத்தான் செய்யும். விளம்பர வசனம் தவறே இல்லை! உண்மையைத்தான் சொல்லி இருக்கின்றது!

----கீதா

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவர்கள் சந்திப்பு மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது என்பதும் அதற்கான ஏற்பாடுகள் நம் புதுகை அன்பர்களால் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது என்றும் அவ்வப்போது புதுகையிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. சந்திப்போம! இதைப்பற்றிய பதிவு, விரிவாக அடுத்து வருகின்றது... 

 , 

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

தகர்க்கப்பட்ட பால்ஷாமினும் பாதாளத்தில் தள்ளப்பட்ட மஹாபலியும்


     கடந்த வாரம் வெடிகுண்டு வைத்து தகர்த்தெறியப்பட்ட பால்மிரா பால்ஷாமின் கோவில் அழிக்கப்படுவதை சிரியா கடந்த ஞாயிறன்று காணொளியில் காண்பித்ததைக் கண்டதும் மனது பதைத்தது. IS (Islamic State militants) தீவிரவாதிகளின் அக்கரமத்தால் தவிடு பொடியாக்கப்பட்ட பண்டைக்காலக் கோவில்.  


சிரியாவில் கிறித்தவ மதம் பரவும் முன் அங்கு வாழ்ந்த அன்றைய மக்கள் அவர்களது தெய்வமான பேல் (Bel) வேதனை வழிபட்டிருந்த கோயில். இது போன்ற பண்டைய மக்களின், அவர்களது கலாச்சாரத்தின் சின்னங்களை யுனெஸ்கோ உலகில் பல பகுதிகளில் பாதுகாத்து வருகிறது.

அவற்றிற்கெல்லாம் இப்போது IS (Islamic State militants ) போன்ற தீவிர வாத இயக்கங்களிலிருந்து இது போன்ற ஆபத்து எற்படுகின்றது.  இப்படி இதற்கு முன்பும் உலகெங்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்று, பணம், படை மற்றும் ஆயுதபலமுள்ளவர்கள், அவர்களுக்குப் பிடிக்காதவற்றை, அவர்களுக்கு மட்டும் புரிகின்ற, மற்றவர்களுக்கு எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்தாலும் புரியாத, புரிந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத காரணங்களுக்காகத் தகர்த்தெறிந்திருக்கின்றார்கள்.

அப்படித் தகர்த்தெறியப்பட்ட அந்த சம்பவங்கள் நடந்த நாட்கள் எல்லாம் காலப்போக்கில், அக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் உழைப்பாலும், விருப்பப்படியும் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடப்படுவதுண்டு.  காலம் செல்லச் செல்ல அதை எதிர்ப்போரது எண்ணிக்கை குறைந்து, அதிகாரத்தில் இருப்போர் சொல்லுவதை ஆமோதிப்பவர்களின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டேதான் இருக்கும். 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை புனைந்து எலியைப் புலியாகவும், புலியை எலியாகவும், நடக்காததை நடந்ததாகவும், நடந்ததை நடக்காததாகவும் சொல்லி, வரலாற்றையே மாற்றி எழுதிவிடுவதுண்டு. யார் சொல்லுவதை நம்புவது என்ற குழப்பம் காலப்போக்கில் அடுத்த தலைமுறையினருக்கு இது போன்றவற்றைக் கேட்கும் போது உண்டாவது இயற்கையே.


      அப்படி ஒரு கதையல்ல பல கதைகள் உலகெங்கிலும் உள்ள மலையாளிகள் அனைவரும் கொண்டாடும் ஓணத்தைப் பற்றியும் சொல்லப்படுகிறது. 

“மாவேலி நாடு வானீடும் காலம்,
மானூச்சரெல்லாம் ஒந்நு போலே

மாவேலி என்றும் மகாபலி என்றும் (பாகுபலி அல்ல) அழைக்கப்பட்ட மாமன்னர் இப்போதைய கேரளத்தின் மத்திய பாகத்தை ஆண்ட போது எல்லா மனிதர்களும் எந்தவித சாதிமத வேறுபாடுகள் இல்லாமல் சமமாக வாழ்ந்திருந்தனர் என்பதுதான் இவ்விரு வரிகள் பறை சாற்றுவது. எந்தவிதக் குற்றங்களும் இல்லாத அமைதியான நாடாக இருந்த காலம். அவரது ஆட்சி கேரளத்தின் பொற்காலம் எனலாம். 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவ்வோணப்பாட்டிலுள்ள வார்த்தைகளையும் அதைப்பாடும் விதத்தையும் வைத்துப் பார்க்கும் போது 17, 18, 19 நூற்றாண்டுகளில் பாணர்களால் பாடப்பட்ட வடக்கன் வீரகதை பாடல்களைப் போல்தான் உள்ளது.  அதற்கு முன் இப்பாடல், இவ் உண்மையை விளக்கும் பாடல், ஒரு தலை முறையினின்றும் அடுத்த தலைமுறைக்கு செவி வழியாகப் பரப்பப்பட்டிருக்கலாம்.

மகாபலியின் ஆட்சி தேவலோகத்தில் வாழ்ந்த தேவர்களைக் கூடப் பொறாமைப்படுத்தும் அளவிற்குச் சிறப்பாக இருந்ததாம். அதனால், தேவேந்திரனுக்கு இது பயத்தையும் ஏற்படுத்தியதாம்.  அசுர அரசன் என்று சொல்லப்பட்ட மகாபலி இந்திரனை வென்று இந்திரலோகத்தைக் கைப்பற்ற முயல்கிறான் என்று யாரோ சொல்ல பயத்தில் இந்திரன் மகாவிட்ணுவைக் கண்டு வருந்த, மகாவிட்ணுவும் அசுரர்கள் என்று சொல்லப்படும் தன்னை வணங்காதோர் அவ்வளவு நல்லவர்களும் வல்லவர்களும் ஆவது உலகிற்கு நன்றன்று என்று நினைத்து (விட்ணுவுக்கு தேவர்கள், அசுர்ர்கள் என்ற பாகுபாடு மட்டுமல்ல, மனிதர்களுக்கு இடையே பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர வேறுபாடுகளும் உண்டாம்! கூடுதலாக) அதிதியின் வயிற்றில் வாமனனாக திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தாராம். 

விஸ்வஜித் யாகம் நடத்திக் கொண்டிருந்த மகாபலியிடம் 3 அடி மண் தானம் கேட்க மகாபலியும் சம்மதிக்க விஸ்வரூபம் எடுத்த வாமனன், முதலடியால் பூமியையும், இரண்டாவது அடியால் ஆகாயத்தையும் அளந்து, மூன்றாம் அடி எங்கு வைக்க என்று கேட்க, மகாபலி தன் தலையைக் காண்பிக்க, வாமனன் அப்படி மகாபலியின் தலையில் மூன்றாம் அடியை வைத்து பாதாளத்திற்குள் மிதித்துத் தள்ளினாராம். அசுர அரசர் என்று சொல்லப்பட்ட ஒரே காரணத்தால் நல்ல அரசன் ஒருவனை இப்படிச் செய்திருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

தள்ளப்படும் முன் மகாபலி தன் மக்களைக் காண வாமநனின் பிறந்த நாளான ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளில் வர அனுமதி கேட்க வாமநன் அதற்கு அனுமதித்தும் விட்டாராம்.  அப்படி எல்லா வருடமும் தன் மக்களைக் காணவரும் மகாபலியை வரவேற்கத்தான் இவ் ஓணப்பண்டிகை. 10 நாட்களும் பூக்கோலமிட்டு 10 ஆம் நாள் குடும்பத்தினர் அனைவரும் மகாபலியை நினைவு கூர்ந்து விருந்துண்ணும் பழக்கம் இருந்து வருகின்றது. இத்துடன் வேறு சில ஓணப் பின்னணிக் கதைகளும் இல்லாமல் இல்லை. 

விஜயநகர மன்னர்கள் ஆட்சியில் வளர்ந்த வைணவப் ப்ரோகிதர்கள் சோழ, பாண்டிய நாடுகளில் தாங்கள் நினைத்த வண்ணம் வைணவத்தை வளரச் செய்ய முடியாமல் போகவே, கேரளாவில் மகோதயபுரத்தில் (இன்றைய இரிஞாலக் குடா) வேரூன்றி, அருகே உள்ள திருக்காக்கரையை (எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதி) ஆண்ட மாவேலியை சதியால் அரியணை துறந்திட வைத்தார்களாம். சைவ மன்னரான மாவேலி கொல்லப்பட்டது (நாடுகடத்தப்பட்ட்து) சோழ, பாண்டிய நாட்டு சைவர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தவும் செய்தது.

சைவர்கள் பிரித்த ஒரு கதைதான் சீர்காழி சட்டநாதன் கதை. சிவபக்தனான மகாபலியைக் கொன்றதால் செருக்குற்றுத் திரிந்த விஷ்ணுவை சிவபக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்கி சிவபகவான் கொன்று, அவரது தோலை உரித்து அதை ஆடையாக உடுத்தி சீர்காழியில் “சட்டை”நாதனாக கோபுரமேறி அமர்ந்துவிட்டாராம்.  விட்ணுவின் மனைவி இலக்குமி கணவனின் பிரிவால் அழுது கதற மனமிரங்கி விட்ணுவை உயிர்ப்பித்தாராம்.  இதுதான் சீர்காழியில் வாழும் சட்டநாதரான சிவபெருமானின் கதை.

மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் தேவைக்கதிகமான வைணவ, சைவ பக்தியால் விளைந்தது என்று சொன்னால் மிகையல்ல.

வேறு ஒரு கதை! This is only legal matter. பரசுராமன் தன் கோடாலியை எறிந்து கேரளக்கரையை அடிக்கடலில் இருந்து மீட்டபின் பிராமணர்களுக்கு அப்பகுதியை தானம் செய்தாராம். எப்போதாவது தனது உதவி தேவை எனில் அப்பிராமணர்களோ, அவர்களது வாரிசுகளோ நினைத்த மாத்திரத்தில் அவர்களுக்கு முன் தோன்றுவேன் என்று உறுதி அளித்தும் போனாராம்.  அதைப் பரிசோதிக்க அப்பிராமணர்கள் தேவை இல்லாமல் பரசுராமனை நினைத்திருக்கின்றார்கள்.

அப்போது பரசுராமனுக்குப் பதிலாக ராமன் அவர்கள் முன் தோன்றி அவர்களைக் கடிந்து கொண்டாராம்.  சபிக்கவும் செய்தாராம். வருடம் ஒரு முறை இச் சம்பவம் நடந்த திருக்காக்கரைக்கு தான் வருவேன் என்றும் அப்படி வரும் தினத்தை விழாவாக எல்லா வருடமும் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம்.  அப்படித்தான் ஓணம் கொண்டாடப்படுகிறது என்றும் ஒரு கதை.

இதன்றி இஸ்லாம் மதம் மாறி மெக்காவுக்குச் சென்ற சேரமன் பெருமானை நினைவு கூரவே இவ்வோணப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது என்றும் ஒரு கதை சொல்லப்படுகின்றது. 


                                                வில்லியம் லோகன்(1841–1914)** 
       ஆனால், மலபார் மேனுவெல் எழுதிய வில்லியம் லோகன்(1841–1914)** புதுவருடப் பிறப்பைக் கொண்டாடத்தான் மலபாரில் ஓணப்பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று அவர் எழுதியபோது, தான் கண்டறிந்ததை உள்ளபடி எழுதி இருக்கிறார். 

உண்மை என்ன என்று அறிய தமிழகத்தில் உள்ளது போல் பழைய ஓலைச்சுவடிகள் கேரளத்தில் பாதுகாக்கப்படவில்லை.  பால்ஷாமினுக்கு நேர்ந்த கதி கேரளத்தில், ஓலைச்சுவடிகளுக்கும் நேர்ந்துவிட்டது. கிபி 1750 ல் திருவிதாங்கூரை ஆண்ட முதல் வைணவ மன்னரான மார்த்தாண்ட வர்மா கேரளா எங்கிலுமுள்ள சிற்றரசர்கள் மற்றும் கோவில்களில் இருந்த ஓலைச் சுவடிகள், விலை உயர்ந்த ரத்தின்ங்கள், நகைகள் போன்ற எல்லாவற்றையும் “படையோட்டம்” நடத்தி, அவர் கைப்பற்றிய நகைகள் மற்றும் ரத்தினங்களை திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சுவாமியின் காலடியில் காணிக்கையாக்கி பதுக்கியும் வைத்துவிட்டார்.  பாதுகாக்கப்பட வேண்டிய அரிய ஓலைகளை எல்லாம் தீக்கிரையாக்கி, புதிதாக ஒரு கேரளச் வரலாறு அவருக்குப் பிடித்தமான வித்த்திலும் வைணவத்தை வளர்க்கும் வித்த்திலும் எழுதியும் விட்டார். அதுதான் இப்போது எல்லாவற்றிற்கும் கேரளத்தில் ஆதாரமாக்க் கருதப்படுகிறது.

இப்படி இறைவனை ஏதோ ஒரு கட்சித்தலைவரது நிலைக்குக் கொண்டுவந்து பிற்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோரையும் கோயிலுக்குள் வரவேண்டாம் என்று தடுத்ததால் கேரளத்திலுள்ள மக்களில் ஏறக்குறைய 45% இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்திற்குப் போய்விட்டார்கள். அப்படி அதிகாரவர்கத்தினால் மீட்கப்பட்டாலும், மகாபலியை நினைக்க அவர் நல்லாட்சியில் வாழ்ந்த எல்லா மக்களும் அவர்களது பின் தலைமுறையினரும்(மதம் பாராமல்) இருக்கிறார்கள். ஆனால், பேல் தேவனையோ, பால்ஷாமின் கோயிலையோ மறக்காமலிருக்க இனி வரலாற்றுத் தாள்களில் சில வரிகள் மட்டும்தான் இருக்கும்.  என்ன செய்ய? வருந்தத்தான் முடியும். இப்படி வருந்தி உங்களிடம் புலம்பத்தான் முடியும்!

சுதந்திர இந்தியாவில் வாழ்வதால் இப்படிப் புலம்பவாவது முடிகின்றது. பக்கத்து நாடான பங்களாதேஷில் இப்படிப் புலம்பும் பதிவர்களை கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்கின்றார்களே.

படங்கள் :இணையத்திலிருந்து
(பின் குறிப்பு: ** William Logan (18411914) was a Scottish officer of the Madras Civil Service under the British Government. Before his appointment as Collector of Malabar, he had served in the area for about twenty years in the capacity of Magistrate and Judge. He was conversant in Malayalam, Tamil and Telugu. He is remembered for his 1887 guide to the Malabar District, popularly known as the Malabar Manual.  Malabar by William Logan (popularly known as the Malabar Manual) is an 1887 publication commissioned by the Government of Madras, and originally published in two volumes.[1] It is a guide to the Malabar District under the Presidency of Madras in British India, compiled during Logan's tenure as Collector of Malabar. It is an exhaustive volume giving the details of the geography, people, their religion and castes, language and culture. It depicts the life and style of the vernacular people of Malabar District.  நன்றி விக்கி.   

புதன், 26 ஆகஸ்ட், 2015

தலைவாரிப் பூச்சூடி உன்னை - ஆவியின் குறும்படம்

     நண்பர் ஆவியின் தனிப்பட்ட கன்னி முயற்சி அதாவது, கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம், தயாரிப்பு என்று குருவி தலையில் பனம்பழம் போல - ஒன் மென் ஷோ வாக எல்லா பொறுப்புகளையும் சுமந்து இயக்கிய படம் "தலைவாரிப் பூச்சூடி உன்னை"

       ஸ்க்ரிப்ட் என்று எதுவும் இல்லாமல், மனதிலேயே எல்லாம் வடிவமைத்து இயக்கியது எனலாம். அவர் இதற்கு முன் இயக்கிய காதல் போயின் காதல் ஸ்க்ரிப் எழுதி அதை எங்களுடன் விவாதித்து, மெருகேற்றி, பல நாட்கள் எடுத்துக் கொண்டு, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு எல்லாம் அதற்கானவர்கள் செய்து இயக்கியதற்கும், இரண்டே நாட்களில் முடிவு செய்து, அதுவும் எல்லாவற்றையும் தானே சுமந்து ஒரு பரீட்சார்த்த வடிவில் இயக்குவதற்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்! என்பதால் சில குறைகள் இருக்கலாம்.   என்றாலும், படத்தைப் பார்த்து தங்களது மேலான கருத்துக்களை, விமர்சனங்களை பதியலாம்.  வரவேற்கின்றோம்.  அது ஆவியின் அடுத்த முயற்சிக்கு உதவியாக இருக்கும்.

           இப்படம் இபோதைய பள்ளிக் கல்வியால் பெற்றோர்கள் படும் டென்ஷனும், அதனால் குழந்தைகள் படும் அவஸ்தையையும் மிக மிகச் சுருக்கமாகப் பதிய வைக்கும் முயற்சி எனலாம்.

   இதில் அம்மாவாக நடித்திருப்பவர் தோழி அனன்யா மகாதேவன். ப்ரின்சிபாலாக நடித்திருப்பவர் ரமேஷ்.  அவருக்குக் குரல் கொடுத்திருப்பவர் நம் நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்.  மிக்க நன்றி எல்லோருக்கும்!

        காணொளியும் அதன் சுட்டியும்..


https://www.youtube.com/watch?v=1HgDhF0ci80

நன்றி!


ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

அந்த நாளும் வந்திடாதோ!!!...

படம் இணையத்திலிருந்து

“குடியைக் கெடுக்கும் குடி” இவ்வுண்மை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும், குடியால் சீரழிவோர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதான் இருக்கின்றது. குடிப்பவர்கள் ஓட்டும் வாகனங்கள் ஏற்படுத்தும் விபத்துக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதான் இருக்கின்றது. குடிப்பவர்களால் ஏற்படுத்தப்படும் விபத்துக்களில், குடிக்காமல் உயிரழப்போர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதான் இருக்கின்றது.

கடந்த வியாழன், திருவனந்தபுரத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் ஓணப்பண்டிகையின் கொண்டாட்டத்தின் பாகமாக அனுமதியின்றி கல்லூரிக்குள் நடத்திய வாகன ஊர்வலத்தில் பங்கெடுத்த, 20 பேருக்கும் மேலான மாணவர்களைச் சுமந்து கொண்டு கண்மண் தெரியாமல் பாய்ந்த ஒரு ஜீப் மோதி சிவில் இஞ்சினியரிங்க் 6 வது பருவம் படிக்கும் மாணவி தெஸ்னி பஷீர் உயிரிழந்தார். இந்த ஜீப்பை ஓட்டிய மாணவரும், உடனிருந்த மாணவர்களும் குடி மற்றும் மயக்க மருந்து போதையில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இதில் வேதனை என்னவென்றால், அந்த ஜீப் கல்லூரி விடுதியை ஒட்டிய புதர் காடுகளுக்கிடையே கடந்த 13 வருடங்களாக, அதன் பதிவு கூட புதிப்பிக்கப்படாமல் கிடக்கிறதாம். அரசியல்வாதிகள், மாணவர்கள் இயக்கங்களை வளர்க்கச் செய்ய உதவி!?, கல்லூரியில் கலவரம் ஏற்படும் போது ஆய்தங்கள் கடத்தப் பயன்படுத்தப்படும் ஜீப்பாம் அது! சில வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு போலீஸ் அதிகாரி அதைக் கஸ்டடியில் எடுத்து பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றாராம். உடனே அரசியல் தலைவர்கள் தலையிட்டு அதைத் திரும்ப எடுத்துச் செல்ல வைத்துவிட்டார்களாம்!

இது போல் இரண்டுமாதங்களுக்கு முன்பு மும்பையில் குடித்துக் காரோட்டிய ஜான் ஹவி கட்கர் எனும் பெண் வழக்கறிஞரின் கார் ஒரு டாக்சியில் மோதி, அந்த டாக்சியின் ஓட்டுநரான 55 வயதான முகம்மது அப்துல் சையதும், அதில் பயணித்த பயணியான 50 வயதுள்ள சலீம் பாபுவும் இறந்துவிட்டார்கள். இதையொட்டிக் கைது செய்யப்பட்ட ஜான் ஹவி கட்கர் கடந்த 5 ஆம் தேதி இரண்டு மாத சிறைவாசத்திற்குப் பின் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.  இனி விசாரணை நடக்கும்.  இறுதியில் பெண் வழக்கறிஞரான ஜான் ஹவி தண்டனையிலிருந்து தப்பி விடுவார். அது உறுதி.  

மாணவர்களுக்குக் குடிக்க ஓணப் பண்டிகைக் கொண்டாட்டம் ஒரு காரணமாக இருந்தது போல், ஜான் ஹவிக்கு அன்று குடிக்க ஏதேனும் ஒரு காரணம் இருந்திருக்கலாம்.  குடித்த அவர் காரோட்டாமல் இருந்திருந்தால் அந்த விபத்தையே தவிர்த்திருக்கலாம்.  விபத்தில் உயிரிழந்த அவ்விருவரும் இப்போதும் அவர்களது குடும்பத்தினருடன் வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள்.  பாவம் அவர்களுக்குத் தெரியாது மூக்குமுட்டக் குடித்த ஒரு பெண் அவர்கள் வரும் வழியில் வருகிறாள் என்று.

ஆனால், அந்த ஜான் ஹவிக்குத் தெரியும் தான் கூடுதலாகக் குடித்திருப்பதால் கார் ஓட்டக் கூடாது என்று. இருந்தும் ஓட்டியிருக்கிறார் என்றால் என்ன நேர்ந்தாலும் அதை நீதி மன்றத்தில் சமாளித்துவிடலாம் என்ற துணிவு இருந்திருக்க வேண்டும்.  அது போல் கல்லூரிக்குள் ஜீப் ஓட்டிச் சென்ற மாணவர்களுக்கும் தாங்கள் செய்யும் தவறுகளுக்கானத் தண்டனையிலிருந்து தங்களை மீட்க அரசியல்வாதிகள் வருவார்கள் என்ற அசட்டுத் தைரியம் இருந்திருக்க வேண்டும்.

இது போல் ஒரு அசட்டுத் தைரியம் தானே 2002ல் மும்பையில் குடித்துக் காரோட்டிய இந்தி நடிகர் சல்மான்கானுக்கும் இருந்தது. அன்று அவரால் நேர்ந்த விபத்தில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் உயிரிழக்க நேர்ந்தது. 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. உரிமம் போலுமின்றி குடித்துக் காரோட்டினார் என்று அவருடன் இருந்த, அவருக்குப் பாதுகாப்பு அளிக்க நியமிக்கப்பட்ட மஹாராஷ்ட்டிர காவல்துறையைச் சேர்ந்த ரவீந்திர பாட்டில் நீதிமன்றத்தில் சொன்னது அன்று எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியது. 

பலமுறை தடுத்தும் கேளாமல் விரைவாக கார் ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டது என்று அந்தப் பாவம் காவலர் சொன்னது அவரது உயிருக்கே வினையாகிவிட்டது.  சொன்னதை மாற்றிச் சொல்ல பலராலும் பலமுறை கட்டாயப்படுத்தபட்ட அவர், திடீரென விசாரணைக்கிடையே ஒரு நாள் காணாமலும் போக, முதலில் சஸ்பென்ஷனும் பிறகு டிஸ்மிசலும் கிடைத்தது அவருக்கு.  நீதி மன்றத்திற்குச் சாட்சி சொல்ல வராததால் அவரைக் கைது செய்ய நீதி மன்றம் உத்தரவும் இட்டுவிட்டது.

வருடங்களுக்குப் பிறகு மஹாபலேஷ்வரில் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்த ரவீந்திர பாட்டிலை போலீசார் எப்படியோ கண்டுபிடித்து கைது செய்து சிறையிலும் அடைத்துவிட்டார்கள். தன் உயிருக்கு ஆபத்து என்று அவர் இட்ட கூக்குரலை யாருமே கவனிக்கவில்லை.  தண்டனைக்குப் பின் சிறையிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் எங்கோ ஓடிப்போய் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்திருக்கிறார். 2007ல் காச நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரழந்த போதுதான் அவர் யாரென்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. 

கடந்த மே மாதம், விபத்து நடந்து 13 வருடங்களுக்குப் பிறகு, முக்கியமான சாட்சியான ரவீந்திர பாட்டில் இறந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சல்மான் கான் உடனேயே ஜாமீன் கிடைக்கப் பெற்று சிறையினின்றும் வெளியேறி, மீண்டும் தன் வழக்கை உயர் நீதி மன்றத்தில் தொடர முடிவு செய்துவிட்டார்.  அவரது குடியால் ஏற்பட்ட விபத்தில் பலியானது இருவர். நடை பாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரும், சல்மானுக்குப் பாதுகாவலுக்குச் சென்ற காவலரும்.  இறந்தவருக்கும், காயமடைந்தவர்களுக்கும் சல்மான் கான் 10 லட்சம் ரூபாய் கொடுத்தாராம்.

ஆனால், என்ன பயன்? விபத்து நடக்கும் போது சல்மானுடன் பயணித்த, விபத்தை நேரில் கண்ட சாட்சியான (சிந்திக்காமல் உண்மையைச் சொன்ன) ரவீந்திர பாட்டிலின் வாழ்க்கையே சீரழிந்து போனது.  இதற்கெல்லாம் காரணம், 2002 செப்டெம்பர் 27 ஆம் தேதி நள்ளிரவு வரை சல்மான்கான் குடிக்கக் காரணம், ஐஸ்வர்யா ராய் அவரது காதலை ஏற்றுக் கொள்ளாததால்தானாம்.  இப்படிக் காதல் தோல்வியைத் தாங்க முடியாமல் குடித்த குடி இருவரது உயிரைக் குடித்து விட்டது.  குடித்திருந்த அவர் அன்று காரோட்டாமல் இருந்திருந்தால் அவ்விபத்தைத் தவிர்த்து இரண்டு உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம். 

இதே போல் கடந்த மாதம் பிரபல நடிகையும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி குடித்துக் காரோட்டி எதிரே வந்த காருடன் மோதி அக்காரிலிருந்த ஒரு குழந்தை இறந்ததாக செய்தித் தாளில் படித்தோம் அல்லவா?  மறுநாளே ஹேமமாலினியின் ஓட்டுநர் முன் வந்து ஹேமமாலினி காரோட்டவில்லை, தான் தான் காரோட்டினேன் என்று சொன்னதாகச் செய்தியும் வெளியானது.

குடித்துக் காரோட்டிய இவர்களெல்லாம் தங்கள் பணம் மற்றும் பதவி பலத்தால், தாங்கள் குடிக்கவே இல்லை என்றோ, குடித்திருந்தோம் ஆனால் காரோட்டவில்லை என்றோ, தாங்கள் ஓட்டிய வாகனத்தின் ப்ரேக் வேலை செய்யவில்லை என்றோ சொல்லி எப்படியும் தண்டனையிலிருந்து தப்பித்தே விடுவார்கள். அப்படி அவர்களுக்குத் தப்பிக்க உதவ எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள்.

அப்படிக் காத்திருப்பவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து தாங்கள் எப்படிப்பட்டக் குற்றத்தைச் செய்தலும் எத்தனை பேர்களைக் கொன்றாலும், அதற்கானத் தண்டனையிலிருந்து சுலபமாகத் தப்பிவிடலாம் என்ற தைரியம் குற்றம் செய்பவர்களுக்கும் இருக்கின்றது. அப்படிப்பட்ட தைரியத்தில் கண்மண் தெரியாமல் குடித்து காரோ, ஜீப்போ, லாரியோ ஓட்டி வரும் மரண தூதர்களுக்கு பலியாடாக பாவம் மனிதர்கள் அவர்கள் வரும் வழியில் காத்திருக்கிறார்கள். அப்படி உயிரை விடும் அப்பாவியான மனிதர்களை எண்ணும் போது மனது பதைக்கிறது. அப்படிப்பட்ட அப்பாவி மனிதர்களுக்காக வருந்தத்தான் முடிகின்றது.

குடியைக் கெடுக்கும் இக்குடி இவ்வளவு சுலபமாகக் கிடைக்காமல் இருந்தால் இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க முடியும்தானே.  அத்தகையவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது எனும் நிலை ஏற்பட்டால் இது போன்ற விபத்துக்களின் எண்ணிக்கையையேனும் குறைக்கவாவது முடியுமே.

குடியைப் பற்றி மட்டும்தான் இங்கு சொல்லப்பட்டுள்ளது. ஆனால், குடி மட்டுமல்ல எல்லா துறைகளிலும் ஊடுருவிப் பாயும் ஊழல்கள் சட்டத்தையே புரட்டும் அளவு இருக்கின்றதே அதை எதிர்த்து மக்கள் நாம் போராடுவதில்லை. குடியை ஒழிக்க போராடுவது ஒரு புறம் இருக்கட்டும், நமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான, நமது வாழ்க்கைத் தரம் உயரத் தேவையானவற்றிற்கான உரிமையை விட்டுக் கொடுத்து, அந்த உரிமைகளுக்காக, அந்த உரிமைகளைப் பல சமயங்களில் பெறமுடியாமல் இருக்கும் ஊழல்களை எதிர்த்து  நாம் என்றேனும் போராடுகின்றோமா?  இல்லை.  வேதனைதான்.

சட்டமும் சட்டக்காவலர்களும், பணத்திற்கும் பதவிக்கும் அடிபணியாமல் தங்கள் பணியைச் செவ்வனே ஆற்றும் ஒரு நன்னாள் நம் நாட்டிற்கு வராதா என்ற ஏக்கம் வருகின்றது. கூடவே சட்ட விரோதச் செயல்களைச் செய்யாமல் சட்டத்தை மதித்து வாழும் மக்கள், தங்கள் வாழ்க்கைத் தரம் உயர வேண்டி உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் மக்கள் அதிகமாக வாழும் நாடாக நம் நாடு மாறாதா, அந்த நாளும் வந்திடாதா என்ற ஏக்கமும் வருகின்றது.