ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

சாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா? அம்மா

       எங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இடுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்திருந்தன. சாதி ஒழிய வேண்டும் என்று எண்ணினாலும், நினைத்தாலும், பலர் பல பக்கங்கள் எழுதினாலும், மேடை போட்டுக் குரல் கொடுத்துப் பேசினாலும், அது ஒழிவதாகத் தெரியவில்லை.  ஒழியப்போவதும் இல்லை,  அரசியல்வாதிகளும், அரசாங்கமும் தங்கள் சுயலாபத்திற்கு வேண்டி, இந்தச் சாதிப் பிரிவுகளை ஆதரித்துப் பிரிவினையைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும்வரை.  இந்தச் சாதி எப்படி விளையாடியது என் மகனின் வாழ்வில் என்ற அனுபவம் தான் இந்த இடுகை. நண்பர் மூங்கில் காற்று முரளிதரன் இட்டப் பின்னூட்டக் கருத்தைப் பார்த்தவுடன் நான் என்ன எழுதி வைத்திருந்தேனோ அதே கருத்து, அதில் என் மகனின் அனுபவம் பிரதிபலித்ததால் அதை இங்கு பகிர்கின்றேன்.

       பொருளாதாரப் பின்னணியின் அடிப்படையில் தான் கல்வியிலும் சரி, வேலை வாய்ப்பிலும் சரி இட ஒதுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டது. முற்பட்டோர், பிற்பட்டோர் என்று. இந்த ஒதுக்கீடு நியாயமானதே. ஆனால், அது சாதி சார்ந்ததாகிப் போனதுதான் மிகவும் வேதனை.  பிற்பட்டோர் என்பதிலேயே பல பிளவுகள் ஏற்பட்டு தாழ்த்தப்பட்டோர் என்றெல்லாம் சாதி அடிப்படையில் பிரிவுகள் ஏற்பட்டன. மலைவாழ் மக்களுக்கு என்று ஒரு பிரிவும் உண்டு.  மிகவும் நியாயமானது. சாதி அடிப்படையில் மாறிப் போனபின், முற்பட்டோரிலும் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியோர் உண்டு. அதே போன்று பிற்பட்டோரிலும்  செல்வந்தர்கள் உண்டு. ஆயினும், நடைமுறையில் நடப்பது என்னவென்றால், இந்த ஒதுக்கீட்டால் பல ஏழைகள், திறமை மிக்கவர்களாக இருந்தாலும், எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பயன் பெற முடியாமல் போவதுதான்.
 
       பல பணக்காரர்களும், அரசியல்வாதிகளும், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மருத்துவப் படிப்பிலும், பொறியியல் படிப்பிலும், தங்கள் பதவியையும், சாதியையும் காட்டி பல சலுகைகள் பெற்றுவிடுகின்றனர்.  இறுதியில் எஞ்சுபவர்கள் முற்பட்டோர் பிரிவினைச் சேர்ந்தவர்கள்.  இந்த முற்பட்டோரில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர ஏனையோரில் பலர், தங்களுக்குள் இருக்கின்ற உப பிரிவுகளில் எது பிற்பட்டோர் பட்டியலில் வருகின்றதோ அதைத் தேர்ந்தெடுத்து அந்தச் சாதிப் பிரிவு சான்றிதழ் பெற்றுவிடுகின்றனர். சான்றிதழில் இருப்பது ஒரு சாதி-கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு உதவும் ஒன்று.  வேறு தருணங்களில், திருமணம் என்று வரும் போது சொல்லப்படுவது அவர்களது உண்மையான சாதி.

என் மகன் 12 ஆம் வகுப்பு முடித்து, கால் நடை மருத்துவத்திற்கு விண்ணப்பித்த போது, தேசிய அளவிலானச் சேர்க்கைக்கு வாங்கிய விண்ணப்பத்திலும் சரி, தமிழ்நாட்டில்  உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தில் வாங்கிய விண்ணப்பத்திலும் சரி, இணைக்கப்பட்டிருந்த சாதிப் பட்டியலைப் பார்த்து மலைத்து தலை சுற்ற ஆரம்பித்தது. அன்றுதான் முதல் தடவை இத்தனை சாதிகள் இருந்தப் பட்டியலைப் பார்க்க நேர்ந்தது. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் அவனுக்குக் கிடைக்கவில்லை.  அது மிகவும் கடினமான ஒன்று.  மகனுக்கோ அதற்குத் தயார் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது ஒரு வருடமேனும் தேவை.

       தமிழ்நாடு கால்நடை மருத்துவத்திற்கு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கவுன்சலிங்க் அழைப்பு வந்தது. கற்றல் குறைபாடு இருந்தும் அவன் 87% வாங்கியிருந்தான். அதுவும் இயற்பியல், வேதியியல், உயிரியல் மூன்றும் சேர்ந்து. கவுன்சலிங்க் சென்றோம். 40 இடங்கள் ஓசி கேட்டகிரி. அது ஓபன் காம்பெட்டிஷன். யார் வேண்டுமானலும் அதில் சேர்க்கப்படலாம். அப்படியான பட்டியலில் என் மகனின் தரம் 41.  எனவே காத்திருப்பு பட்டியலில் 1 ஆம் தரத்தில் இருந்தான்.  நாங்கள் நினைத்தோம் வெயிட்டிங்க் லிஸ்ட் 1 என்பதால் யாரேனும் – நிச்சயமாக 40 பேரில் 30 பேருக்கும் மேல் விட்டுவிட்டு, பொறியியல் இல்லை மருத்துவம் சென்று விடுவார்கள். எனவே கிடைத்து விடும் என்பது உறுதி என்று.  அங்கு குழுமி இருந்த மாணவ, மாணவிகள் அதைத்தான் பேசிக் கொண்டனர்.  பெரும்பாலோரது விருப்பம் கால்நடை மருத்துவம் அல்ல.  ஆனால், எனது மகனின் விருப்பம் அது மட்டுமே.  படித்தால் கால் நடை மருத்துவம்.  நோ காம்ப்ரமைஸ்.  இல்லையேல் ஜூவாலஜி பிரிவு எடுத்துப் படித்துவிட்டு 3 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கால்நடை மருத்துவம் விண்ணப்பிப்பதில் உறுதியாக இருந்தான். ஆனால், அதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது, இந்த சாதி முட்டுக்கட்டையாக இருப்பதால்.

       நாங்கள் அங்கிருந்த கவுன்சலிங்க் குழுவினரிடம் சென்று கேட்டோம்.  அவர்கள் சொன்ன பதில் இதுதான். “வெயிட்டின்க் லிஸ்டில் 1 ஆம் தரத்தில் இருந்தாலும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.  40 க்குள் யாரேனும் ஒருவர் விட்டாலும், பிஸி பட்டியலில் முதலில் யார் உள்ளாரோ அந்த மாணவர்/வி உள்ளே செல்வார்.  பிஸி பட்டியல் முன்னேறும்.  அப்போது அங்கு ஒன்று காலியாகும் அதில் பிசி யிலிருந்து ஒன்று ஏறும்...இப்படி ஏணிகள் ஏறுவது போல மற்ற பிரிவுகளும் ஏறும்.  இறுதியில் சீட் வேகன்சி இருந்தால் உங்கள் மகனுக்குக் கிடைக்கலாம்.  இதில் “லாம்” என்பதுதான் சொல்லப்பட்டதே அல்லாமல் “க்கும்” என்று சொல்லப்படவில்லை.

மகனுக்கு, சென்னையில் நல்ல கலைக் கல்லூரிகள் என்று பட்டியலிடப்பட்ட எல்லா கல்லூரிகளிலிருந்தும் (விண்ணப்பத்திருந்ததால்) சேர்வதற்கான கடிதம் வந்தது. சென்னை கிறித்தவக் கல்லூரியில் ஜூவாலஜி பிரிவில் சேர்ந்தான். 2 ஆம் வகுப்பிலிருந்து கனவு கண்டு வந்த கால்நடை மருத்துவம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம்.  ஆனால், எந்த தகவலும் வரவில்லை.  இதற்கிடையில், எங்கள் நலம் விரும்பி, அனிமல் ஆக்டிவிஸ்ட் ஒருவர், மகனின் கனவு பற்றியும், திறமை பற்றியும் அறிபவர் என்பதால், அவர் என் ஆர் ஐ கோட்டாவில் முயற்சி செய்யச் சொன்னார்.  தமிழ் நாட்டில் இதே கோட்டாவில் முயற்சி செய்யலாம், ஆனால், ஃபீஸும் அதிகம், அதற்கான வழி முறைகளும் மிகவும் கடினம்.  அவர், பாண்டிச்சேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மத்திய அரசின் கீழ் வருவதால், ஆனால் வேறு மாநிலமானதால், அங்கு என் ஆர் ஐ கோட்டாவில் முயற்சி செய்யலாமே, தமிழ்நாட்டை விட ஃபீஸ் கொஞ்சம் குறைவுதான், மகனது விருப்பம் நிறைவேறுமே என்றார்.  ஆனால், மகன் அதற்கான ஃபீஸும் மிகவும் அதிகம் என்பதால் தன் அப்பா கஷ்டப்படுவார் என்று அதற்கான நுழைவுத் தேர்வு எழுத மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான். 

       இதற்கிடையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் இருக்கும் மாதவரத்திற்கு, மகனின் நிலைமை என்ன என்று விசாரிக்கச் சென்றோம்.  அங்கும், அதே பதில்தான், There is a chance for a chance”  என்று.  உறுதியில்லை என்றனர். மகன் அழத் தொடங்கிவிட்டான். “நான் ஆர்வத்துடன் படித்து நல்ல ஒரு மருத்துவனாக வர முடியும் ஆனால் இந்த சாதி என்பது என்னை ஏன் இப்படிப் பாடாய் படுத்துகின்றது” என்று.  பாண்டிச்சேரியில் விண்ணப்பிக்க அவனைச் சமாதானப்படுத்தி, அதற்கு இறுதித் தேதி அன்று, விண்ணப்பிக்கும் நேரம் முடியும் தருவாயில், விண்ணப்பித்தோம்.  நுழைவுத்தேர்வு எழுதினான்.  இரண்டாம் இடம்.  சீட் கிடைத்தது என் ஆர் ஐ ஸ்பான்சார்ட் கோட்டாவில் (NRI)  வெளிநாட்டில் இருப்பவர் மகனைப் படிக்கவைத்துப் பணம் கட்டுவது போன்று, ஆனால் ஃபீஸ் கட்டுவது நாம்தான். வருடம் 2 லட்சம் ஃபீஸ்.  டொனேஷன் அல்ல. அது தவிர புத்தகங்கள், ஹாஸ்டல், மெஸ், இதரச் செலவுகள். மகனுக்கு ஹாஸ்டல் கிடைக்கவில்லை. மேலும் மகனுக்குக் கற்றல் குறைபாடு இருந்தமையால், படிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்வான் என்பதாலும், சிறியதாக ஒரு அறை, சமையல் அறை இருக்கும் வீடு எடுத்துத் தங்கினோம்,  நானும், மகனும். ஃபீஸ் முதல் வருடம் மட்டுமே கட்ட முடிந்தது. பின்னர் லோன்தான். அங்கு ஃபீஸ் கட்டுவதற்கு முன்னும் கூட, தமிழ் நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் உறுதியாகச் சொல்லவில்லை.  பாண்டிச்சேரி வாசம். 5 வருடப் படிப்பு. நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைத்தோம்.  மகனுக்குத் திறமை மிகவும் உண்டு. இதை நான் இங்கு பெருமையாகச் சொல்லவில்லை. என் ஆதங்கம். கவுன்சலிங்கில் கிடைத்திருந்தால், வருடத்திற்கு ரூ 15,000 மட்டுமே ஃபீஸ் + இதரச் செலவுகள் + சென்னையிலேயே. 

       பாண்டிச்சேரியில், கல்லூரியில் சேர்ந்த  புதிதில், இவன் மிகவும் வெள்ளை நிறத்தவனாக இருந்ததாலும், பெயர் வட இந்தியப் பெயர் (அவனது அப்பா உபயம்) போல இருந்ததாலும், இவன் தமிழனல்ல என்று நினைத்துத் தமிழ் மாணவர்கள் பேசவில்லை.  பின்னர் இவன் தமிழன் என்று தெரிந்த பிறகும், இவன் வொயிட் க்ராஸ் சமூகமோ என்று பேசாமல் இருந்தனர். மகன் என்னிடம் வந்து கேட்டான், “ஏன் என்னுடன் யாரும் பேசுவதில்லை? நான் இன்ன சமூகம் என்று எப்படி, நான் சொல்லாமல் இவர்களுக்குத் தெரிகின்றது?” என்று. நான் என் மகனை சிறு வயதிலிருந்தே, எங்குமே சாதி பேசக்கூடாது, அரசியல் பேசக்கூடாது, யாராவது அசைவ உணவைக் கொண்டு வந்து உன் முன் சாப்பிட நேர்ந்தாலும், முகம் சுளிக்காமல், அவர்கள் மனம் நோகும்படி நடந்து கொள்ளாமல், அவன் கொண்டு செல்லும் உணவை உண்ண வேண்டும் என்றும் அவனுக்குச் சொல்லி வளர்த்தேன்.     

      சென்னையில் இருந்தவரை தெரியவில்லை. அதனால், அவனுக்கு வியப்பாக இருந்தது. பின்னர் இவன் நடந்து கொள்ளும் முறை, இவனது குணம், திறமை, வகுப்பில் பதிலளிக்கும் புத்திசாலித்தனம், அறிவு, செமினார் நடத்தும் திறமை எல்லாம் வகுப்பு முழுவதையும் இவனுடன் இணைத்தது.  பின்னர், தினமும் நண்பர்கள் கூட்டம்தான் வீட்டில். சாப்பாடு, டிஃபன் என்று களை கட்டும். ஆனால் பாண்டியிலும் சரி, சென்னையில் வேலை பார்த்த கிளினிக்கிற்கு வரும் க்ளையன்ட்ஸும் சரி, மகனின் நிறத்தை வைத்து, தோளின் மீது கை போடுவது போல போட்டுப் பார்த்து இவனது சமூகத்தை அறிய முற்படுவார்கள். ஏனென்றால் இவனிடம் சாதி கேட்டால், இவன் சொல்லும் பதில், “நான் மனித சாதி” என்பது மட்டுமே அல்லாமல், தன் சாதியை சொல்லவே மாட்டான். அதனால் அவன் தனது வொயிட் க்ராசை எடுத்தே விட்டான். எனக்கு சாதி இல்லை என்று சொல்லி.  என் முழு ஆதரவுடன்.  வீட்டில் மிகுந்த எதிர்ப்புகள். இன்னும் தொடரத்தான் செய்கின்றது. எங்களைப் புரிந்து கொண்டு அன்பாக இருப்பவர்களைத் தவிர. எங்கள் இருவருக்கும் அதைப் பற்றிக் கவலையுமில்லை.

சரி, 5 வருடம் முடித்தாயிற்று.  மிகவும் நல்ல பெயர் எல்லா பேராசிரியர்களிடம் இருந்தும்.  “நல்ல திறமையான டாக்டர்” என்ற பெயர்.  எழுதுவது கடினம் அவனுக்கு.  படிப்பதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்வான்.  அவ்வளவே.  ஆனால் அறுவை சிகிச்சை என்றால் பெர்ஃபெக்ட். தொழில் சம்பந்தமான செமினாரில் இவனது பேப்பர் மெச்சப்பட்டு முதல் பரிசு இப்படிப் பல + கள். அவன் விரும்பியதும் அறுவை சிகிச்சையில் மேற்படிப்பு.  மீண்டும் தேசிய அளவிலான மேற்படிப்பிற்கு பரீட்சை எழுதி தேசிய அளவில் 80 வது தரம். எல்லோரும், அவனது பேராசிரியர்கள் உட்படச் சொன்னது அவனுக்குக் கிடைத்துவிடும் என்று.  அவன் படிக்க விரும்பியது பஞ்சாப் கால்நடை மருத்துவக் கல்லூரியில்.  டெல்லிக்குப் பயணம் கவுன்சலிங்கிற்காக.  அப்போது, 36 கல்லூரிகளில் ஒரு சில, அறுவை சிகிச்சை பாடம் அந்த வருடம் கொடுக்கவில்லை. ஒரு சில, இவர்களது பட்டப்படிப்புச் சான்றிதழ் வரும் தேதிக்கு முன்னரேயே வகுப்புகள் தொடங்கப்பட இருந்ததால் சேர முடியாத நிலை. எல்லா கல்லூரிகளிலும் சரி, எஞ்சியிருந்த கல்லூரிகளிலும் சரி, தமிழ்நாடு உட்பட, ஒவ்வொரு கல்லூரியிலும் 2 இடங்களே. அதுவும் ஒன்று ஒதுக்கப்பட்ட இடம்.  மற்றொன்று ஓசி பிரிவு. 

பொதுவாக அறுவை சிகிச்சைப் பிரிவு எடுப்பவர்கள் மிகவும் குறைவு. காலையில் கவுசலிங்க் ஹாலுக்குச் சென்று பார்த்த போது அறிவிக்கப்பட்ட இடங்கள்தான் மேலே சொன்னது. முதலில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு உரியவர்கள், தரத்தின் அடிப்படையில் அழைக்கப்பட்டார்கள். அண்டர் டெவலப்ட் மாநிலத்தவர்க்கும் – வட கிழக்கு மாநிலத்தவர்க்கும், கோவா வைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை உண்டு. இது நியாயமானதே. இறுதியில்தான் ஓசி பிரிவு தரத்தின் அடிப்படையில், அதிலும் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு உரியவர்கள், அண்டர் டெவ்லப்ட் மாநிலத்தவர்கள், தங்களுக்கான பிரிவில் கிடைக்கவில்லை என்றால், ஓசி கேட்டகிரியுடன் போட்டி போடலாம். கவுன்சலிங்க் ரிசல்ட் வெளியாகும் போர்டை பார்த்தால் அதிர்ச்சி. காலையில், எஞ்சியிருந்த கல்லூரிகள் காட்டிய தங்களது 2 சீட்களையும் கேன்சல் செய்திருந்தது/நிரப்பப்பட்டுவிட்டது என்று காட்டியது. சென்னைக் கல்லூரியில் ஒரு இடமே காட்டப்பட்டது. மாணவர்களிடையே சலசலப்பு. என் மகன் அடிக்கடிச் சொல்லி நகைப்பது “அம்மா நாம ஓசி கேட்டகிரிதான் ஆனா நமக்கு எதுவுமே “ஓசி” கிடையாது” என்று. மகன் வெளியில் வந்த போதுதான், நாங்கள் அறிந்தது அந்த 2 சீட்களும் வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டுவிட்டது என்று. இத்தனைக்கும் அவர்களின் தரம், 400 க்கும் மேல். அறுவை சிகிச்சை இல்லை என்றாலும், காம்ப்ரமைஸ் செய்து கொண்டு, மெடிசின் கிடைக்குமா என்று பார்த்திருந்திருக்கின்றான்.  அதுவும் இல்லை என்றாகியது. 

என் மகன் அன்று அழுத அழுகை அங்குக் கூடியிருந்த அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.  நான் என்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டேன்.  “நான் என்னம்மா தப்பு பண்ணினேன்? இந்தச் சாதியில பிறந்தது என் தப்பா?  நீயும், நானும் ஒரு நாள் கூட சாதி பார்த்ததே இல்லையேமா. எனக்குப் படிக்கத் தகுதி இல்லையா? திறமை இல்லையா? இந்த வொயிட் க்ராஸ்தான் (பூணூல்) எனக்கு சீட் கிடைக்கத் தடைனா இந்த வொயிட் க்ராஸை இங்கயே அறுத்து எறியறேன்மா. எனக்கு சீட் தரச் சொல்லுமா” என்று.  என்னிடம் பதில் இல்லை. மகனின் நண்பர்களும் மிகவும் வருத்தப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே சொல்லிக் கொண்டுதான் இருந்தனர், இவன் தாங்கிக் கொள்ள மாட்டான் என்று. 22 வயது பையன் அழுதது ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா?  அவனுக்கு அவனது படிப்பும், கனவும் அத்தனை மனதில் வேரூன்றிய ஒன்று. பின்னர் அவனைச் சமாதானப் படுத்தி அழைத்துவந்தோம். 10 நாட்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தான். கிடைக்கவில்லை என்பதைவிட, சாதியினால் தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தம். அரசு வேலைக்கான விளம்பரம் வந்தது. ஆனால், அங்கும் இதே சாதிப் பிரச்சினை. அவன் படிக்கும் போது கிராமங்களுக்குச் சென்றதால், அவன் விரும்பியது, கிராமங்களில் உழவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் மாட்டிற்கு நல்ல மருத்துவர்கள் இல்லாமல் எனவே அதில்தான் ஸ்பெஷலைஸ் செய்ய வேண்டும் என்றும், பல ஆர்வமுள்ள கால்நடை மருத்துவ மாணவர்களுக்குச் சாதி பாராமல் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும். ஆனால், அதை மேற்கொள்ள வழியில்லாமல் போயிற்றே என்று.

பின்னர், சென்னையில் மிகவும் அருமையான கிளினிக்கில், மிகவும் நல்ல மருத்துவரிடம் 1 1/2 வருடம் அசிஸ்டெண்டாகப் பணியாற்றிவிட்டு, அங்கும் டாக்டரிடமும், மக்களிடமும் மிகவும் நல்ல பெயர் எடுத்துவிட்டு, என் முன்னேற்றத்திற்குத் தடையான இந்தச் சாதியுள்ள நாடு எனக்கு வேண்டாம் என்று, நார்த் அமெரிக்கன் வெட்னரி லைசன்ஸ் பெற வேண்டி, அம்மாவாகிய என்னை ஒரு தோழியாகக் கருதி, மிகுந்த பாசத்துடனும், நேசத்துடனும் இருந்த எனது ஒரே மகன், என்னைப் பிரிய மனமின்றி, இருந்தாலும், அவனும் இந்த சமூதாயத்தில் ஒரு நல்ல மருத்துவனாகப் பணியாற்ற வேண்டும் என்றும், மேற்படிப்பில் ஸ்பெஷலைசேஷன் செய்துவிட்டு, தனித் தன்மையுடன் இங்கு மீண்டும் வந்து, கிராமங்களுக்கும், உழவர்களுக்கும் தன்னால் இயன்றவரை மாடுகளுக்குக் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனும், பல இன்னல்களுக்கிடையில் அனுப்பியுள்ளோம். இந்தப் பரீட்சை 4 நிலைகள் கொண்டது,  முதலில் இந்தியாவிலிருந்தே ரெஜிஸ்ட்ரேஷன் முடித்து, இரண்டாவது, மூன்றாவது பரீட்சைகளை - ப்ரோமெட்ரிக் -  Basic clinical exam, North American Veterinary License Examஇங்கேயே எழுதி கிளியர் செய்துவிட்டு, இறுதிக் கட்டமான Clinical Proficiency Exam ற்காக, கானடா சென்று அதற்கான படிப்பையும், அங்கு கால்நடை மருத்துவத்தில்  மேற்கொள்ளப்படும் முறைகளைக் கற்று, அங்கும் மிகவும் நல்ல பெயர் எடுத்து, இந்த மிகவும் கடினமான இறுதிக்கட்ட பரீட்சையை பாஸ் செய்துவிட்டான். - 3 நாட்கள் – காலை 6 மணிக்கே அந்த செண்டருக்குள் சென்றால், மாலை 6 மணிக்குத்தான் வெளியில் வர முடியும்.  யாருடனும் பேசக் கூடாது.  எல்லாமே கேமராவில் பதிவாகும் - (எல்லாமே செய்முறை. டயக்னாசிஸ், சர்ஜரி, அனஸ்தீசியா, ஸ்கானிங்க் அண்ட் எக்ஸ்ரே, குதிரை, மாடு, ஆடு, நாய்/பூனை, இப்படி எல்லாம் கடந்து,).

இப்போது ஸ்பெஷலைசேஷன் செய்வதற்காக, இன்டெர்ன்ஷிப் கிடைப்பதற்காகக் காத்திருக்கின்றான். கிடைக்க வேண்டும்.  அதுவும் அதிர்ஷடம் என்ற ஒன்று இருந்தால்தான். இப்போது அமெரிக்காவில் விசிட்டர் விசாவில் இருந்து கொண்டு “சாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வரவேண்டுமா அம்மா” என்று கேட்டுக் கொண்டு, இன்டெர்ன்ஷிப்பிற்குக் காத்திருந்தாலும், அவன் முன் இருக்கும் தற்போதைய பிரச்சினை வொர்க் பெர்மிட் – H1B visa கிடைப்பது! காத்திருக்கின்றான் இன்டெர்ன்ஷிப் ரிசல்ட் அறிய. நானும் காத்திருக்கின்றேன்!  அவன் பலவற்றைக் கற்றுக் கொண்டு, அவனது கனவான, மிகவும் உயர்வாகக் கருதப்படும் டிப்ளமேட் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் வெட்னரி சர்ஜரி (DACVS) மற்றும், டிப்ளமேட் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் வெட்னரி அனஸ்தீசியா அண்ட் அனல்ஜீசியா (DACVAA) பட்டங்களைப் பெற்று, இங்குள்ள மாடுகளுக்குச் சிசிச்சை செய்வான் என்றும், பல மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பான் என்ற நம்பிக்கையிலும்!

சாதி அன்றும், இன்றும், பொதுவாகத் துன்பத்தை மட்டுமே தருகின்றது. அன்று திறமையுள்ளவர்கள் பலரையும் பிற்பட்டவர்கள் என்று முத்திரை குத்தி அவர்களைத் தள்ளி வைத்தது. இன்றும், தொழில் நுட்ப வளர்ச்சிகள் விண்ணை எட்டினாலும், அதே சாதி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பல திறமை மிக்கவர்களைத் தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சாதி நம் இந்தியாவில் மட்டும்தான் உயிர் வாழ்ந்து பலரது உயிரையும் எடுத்துக் கொண்டிருக்கின்றது. இது எங்கள் அனுபவம் மட்டுமல்ல.  பலருக்கும். திறமைக்கு மதிப்பில்லாத காரணத்தினாலும், சாதியினாலும் தான் பல மாணவர்கள் வெளிநாடு செல்ல முற்படுவது. என்று தணியும் இந்தச் சாதிக் கொடுமை? 

- கீதா (மன்னித்து விடுங்கள்.  இடுகை நீ......ளமாகிப் போனதற்கு.)


பின் குறிப்பு : நண்பர்களே! என்னை மன்னித்து விடுங்கள்! தங்கள் மனதை, நான் எந்த விதத்திலேனும் புண்படுத்தியிருந்தால், வருத்தியிருந்தால். நான் எந்த சாதீயத்தின் அடிப்படையிலும் எழுதவில்லை.  சில பின்னூட்டங்கள் என் மனதை மிக மிக மிக வேதனைக்குள்ளாக்கியது என்பது உண்மை. ஏனென்றால், என் எண்ணம், செயல்கள் சாதீயம் சார்ந்ததல்ல என்பதாலும், இட ஒதுக்கீடினால் எத்தனை நன்மைகள் விளைந்துள்ளன என்பதையும் நான் அறிந்திருந்ததாலும், சாதியே வேண்டாம் என்று சொல்லும் நாங்கள், விவாதத்திற்கு எங்கள் தளம் மாறிவிட என் இடுகை வழிவகுத்து விட்டதோ என்ற காரணத்தினால் அதை நீக்கி விட்டேன் எங்கள் தளத்திலிருந்து. பின்னர், எங்கள் மதிப்பிற்குரிய கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்கள் அன்புடன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, எல்லோருடைய கருத்துக்களையும் மதிக்க வேண்டும் என்றும் இதை வெளியிடுகின்றேன். இடுகை யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் வருந்துகின்றோம். முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்

89 கருத்துகள்:

  1. மிக விரிவான அனுபவக்கூறுகள். வாழ்த்துக்கள்.
    ஆமாங்க சாதிகளால் நாம் படும்பாடு அனேகம்.
    தம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கிங் ராஜ் அவர்களே ! தங்கள் கருத்திற்கு.

      நீக்கு
  2. உங்கள் வருத்தம் வேதனை ஆதங்கம் அனைத்தும் என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. முதல் வரி முதல் கடைசி வரைக்கும் நிதானமாக படிக்கும் அளவுக்கு எழுதியிருக்கீங்க. நீளம் என்கிற ரீதியில் இது போன்ற விசயங்களை சுருக்கி விடாதீங்க.

    சாதி குறித்து, அதன் தாக்கம் விளைவுகள் குறித்து நானும் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். திறமைகள் புறக்கணிக்கப்படும் போது அந்த மாணவன் படும் வேதனைகளை எந்த எழுத்திலும் எழுதி விட முடியாது. ஆனால் இந்தியா போன்ற நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் உள்ள இந்த நாட்டில் இன்னும் பல ஆண்டுகள் நாம் சகித்துத் கொள்ளத்தான் வேண்டும். காரணம் நான் இருக்கும் கொங்கு மண்டலம் என்றழைக்கப்படும் நான்கு மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகம். தொழிற்வாய்ப்புகள் மூலம் படிப்படியாக இந்த சாதியின் தாக்கத்தை சமானிய மக்கள் உடைத்துக் கொண்டே வந்தாலும் இன்னமும் சாதியின் கோர முகம் ஏதோவொரு வழியில் வெளியே துருத்திக் கொண்டே தெரிகின்றது.

    நீண்ட நாளைக்குப் பிறகு மிக அற்புதமான அனுபவ பகிர்வை தந்தமைக்கு நன்றி. உங்கள் இருவரின் நல்ல உள்ளத்தை எண்ணம் போல வாழ்வு என்பதற்கேற்ப வாழ்வின் உச்சத்தை தொடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜோதிஜி அவர்களே! தங்களின் பாராட்டிற்கும், கருத்திற்கும். எனக்கு, ஒரு தாயாக என் மகனின் உணர்வுகளை உ ணர்ந்ததால் தான் இப்படி ஒரு பதிவு. இட ஒதுக்கீடால் விளைந்த நன்மைகளை நாம் மறக்கவில்லை. அது மிகவும் அவசியமானதே. இந்த இடுகை ஒரு தனிப்பட்ட அனுபவம்தானே அல்லாமல் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது அல்ல .

      நீக்கு
  3. வணக்கம்
    அண்ணா.

    தாங்கள் சொல்வது உண்மைதான் இந்தியாவில் மட்டுமல்ல தமிழர்கள் எங்கு வாழ்கின்றார்கள் அங்கு சாதிப்பிரிவினை ஒன்றை வகுத்து விடுவார்கள்.. உலகத்தில் இறைவன் படைத்தது 2 சாதிதான் அவை ஆண்சாதி பெண்சாதி. எல்லா மனிதர்களின் உடம்பில் ஓடும் குருதியின் நிறம் சிகப்புத்தான்..இதை உணர்ந்தால் சாதி என்ற பிரி வினை வராது..
    அருமையாக கருத்து மிக்க வார்த்தையால் அழகாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி.த.ம

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்களின் கருத்திற்கும், ஓட்டிற்கும்!

      நீக்கு
  4. வணக்கம்
    அண்ணா
    தமிழ் மண வாக்கு பட்டையை காணவில்லை எங்கே.????

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    அண்ணா.
    தமிழ் மணம் என்ற வலைத்தளம் முடக்கப்பட்டுள்ளது.... தற்கலிகமாக.. இயங்கவில்லை..அதனால் ஓட்டுப்பட்டடை வரவில்லை..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. உங்கள் சாதி அனுபவத்தைப் படித்து அசந்து போனேன் ,வோட்டு பொறுக்கி கட்சிகள் நாட்டில் இருக்கும் வரை இந்த பிரச்சினை தீராது !
    த ம 2

    பதிலளிநீக்கு
  7. கருத்தின் கனத்தால் பதிவின் நீளம் பாதிக்கவில்லை. இவ்வளவு ஆர்வம் இருந்தும், மதிப்பெண் இருந்தும், படிக்க முடியாமல் போவதன் பாதிப்பு கொடுமையானது.

    உங்கள் மகனுக்கு இனிமேல் நடப்பது நல்லதாக நடக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் ஸ்ரீ ராம் ! தங்களின் கருத்திற்கு.

      நீக்கு
  8. வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வளித்து மண்ணிற்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்பும் தங்கள் மகனுக்கு நல்லதே நடக்கும். அஞ்சற்க!..

    பதிலளிநீக்கு
  9. சாதி ஒழியப்போவதும் இல்லை...
    நாம் அதை ஒழிக்கப் போவதுமில்லை...
    தங்களது அனுபவத்தை விரிவாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  10. அரசாங்கம் நம்ம பிரட்சினையை சரி செய்யாது
    ஒரு கவிஞன் எழுதினான் இப்படி...
    ஓ,,, மனிதர்களே...
    ஜாதி மதம் ஒழிய
    ஜாதி விட்டு ஜாதி காதலியுங்கள்
    மதம் விட்டு மதம் காதலியுங்கள்
    ஜாதி, மதம் என்ற கொடிய நோய் ஒழியட்டும்
    இந்நிலை வந்தால்தான் ஒழியுமோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி ! தங்களின் கருத்திற்கு. நீங்க சொல்வது சரிதான். காதல் திருமணங்களும் இதற்கொரு முடிவு காணும் என்று நம்புவோம்.

      நீக்கு
  11. வணக்கம் ஆசானே!
    உண்மை ஊற்றாக உருவெடுத்து வலை உலா வந்த உங்களது
    "சாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா? அம்மா"
    இந்த பதிவை படித்த போது,
    எனது மனம் மண்குடம் நீர் சுமந்து வந்து வெந்து தணிந்த தங்களது ஆதங்கத்தை குளிர்விக்க வேண்டும் என்று!
    உண்மை அனுபவத்தை உறை வாள் எடுத்து ரத்தம் சிந்தாமல், காயமின்றி, கடும்போர் செய்து இதுபோன்ற சமூக ஏற்றத்தாழ்வு அவலங்கள் சாதிய அடிப்படையில் அமைந்துள்ளதை சுட்டிக் காட்டிய துணிவுமிக்க மனிதராக ஆசானை அடையாளம் காண்கிறேன்.

    வளர்ந்த நாடுகளில் பொருளாதாரத்தின்/வருமானத்தின் அடிப்படையில்தான்
    இதுபோன்ற கருத்துக்கள் சிந்திக்கப் படுகிறது.

    நல்லதோர் வீணை செய்து அதை நலம்பட வழங்கிய ஆசானை போற்றுகிறோம்.

    உண்மை பதிவு உறங்காது
    நன்மை செய்ய விழித்திருக்கும்
    நாட்டில் நன்கு செழித்திருக்கும்.

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  12. //இந்த சாதி நம் இந்தியாவில் மட்டும்தான் உயிர் வாழ்ந்து பலரது உயிரையும் எடுத்துக் கொண்டிருக்கின்றது//

    அப்பட்டமான உண்மை ..ஐந்து வருடங்கள் முன் இந்தியாவுக்கே போக செட்டிலாக இருந்தோம் ..நிறைய தடைகள் .thanks to God !
    இப்போ நினைக்கும்ம்போது ..நாளை எங்க மகளும் கஷ்டபட்டிருப்பா ! .. மகள் பிறப்பு சான்றிதழில் இந்திய /கிறிஸ்துவர் என்று மட்டுமே இருக்கு ....சாதி ஒழியணும்னு சொல்லிட்டு சா-தீயை அரசாங்கமே பரப்புது .

    திறமை ,மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யணும் உயர் படிப்புக்கு ..
    கவலைபடாதீங்க உங்க மகன் நிச்சயம் சாதனை புரிவார் ..
    முன்பு என் தமிழ் புத்தக முதல் பக்கத்தில் //சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்// என்ற அச்சிட்டு வரும் நான் நினைப்பேன் அப்போ எதுக்கு சாதி சான்றிதல் கேக்கரங்கனு :(
    எல்லா சாதி சான்றிதழ்களையும் வாங்கி கொளுத்தணும் ...அதில் பாதி திருட்டு சான்றிதழும் இருக்கும் ..
    இங்கே வெளிநாடுகளில் BENEFITS கிடைக்கும் ஊதியம் அடிப்படையில் ..ஒருவர் உடல் குறை இருந்தா அவருக்கு சலுகை எல்லாமுண்டு .எல்லா சலுகையும் ஒருவரது ஹெல்த் /financial ABILITY பொறுத்தே அளிக்கப்படும்..
    என் பொண்ணுக்கு caste ,இதெல்லாம் தெரியாமலே போகட்டும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி ! தங்களின் கருத்திற்கும், தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கும்.

      நீக்கு
  13. அந்த கேள்விற்கு பதிலில்லை...

    தங்களின் மகன் சிறப்பாக வருவார்...

    பதிலளிநீக்கு
  14. படித்துவிட்டுப் பல நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தேன்...பல கடந்த கால சிந்தனைகள்...இந்தியா வரவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நான் இதை எப்படி மறந்தேன் என்று...என் பிள்ளைகளுக்கும் இதே நிலைதானே வரும்!
    உங்கள் மகனுக்கு H1B விசா கிடைத்து அவர் விரும்பியபடியே படிக்க வேண்டிக்கொள்கிறேன். அவர் விருப்பம் போல அனைத்தும் நன்றாக அமைய வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கும், தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கும். வாழ்த்துக்கும்

      நீக்கு
  15. இந்தியாவில் சாதி வேறுபாடு மட்டும் அல்ல மத வேறுபாடுகளும் மிக அழமாக தோன்ற ஆரம்பித்துவிட்டன. மற்ற மாநிலங்கள் பற்றி எனக்கு தெரியாது ஆனால் தமிழகத்தில் வேற்று மதமாக இருந்தாலும் எல்லோரும் வேறுபாடுகள் இன்றி வளர்ந்தனர் ஆனால் இப்போது அது மிகவும் மாறி வருகிறது.. இது மிகவும் வருந்ததக்கது.

    உங்கள் மகனிடம் சொல்லுங்கள் தடைகள் ஏற்படும் போது அதை தாண்டி அல்லது அதுக்கு மாற்றான வழிகள் தோன்ற ஆரம்பிக்கும். வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் உங்கள் மகனின் எண்ணம் எல்லாத்தடைகளையும் சுக்கு நூறாக உடைத்துவிடும். அவரது கடும் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மதுரைத் தமிழா தங்களின் கருத்திற்கும், தங்களின் பாராட்டிற்கும்

      நீக்கு
  16. படித்துவிட்டேன். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள்..
    உங்கள் இருவரின் சாதிகடந்த மனித நேயத்திற்கு என் தலைதாழ்ந்த வணக்கங்கள்.
    (உங்களைப் போலவே வளர்ந்துவரும் உங்கள் மகனுக்கும் என் அன்பு)
    உடனடியாகப் பின்னூட்டமிட இயலாத சூழல். சாதிபற்றிய புரிதல் அவ்வளவு எளிதல்ல..
    விரைவில் வந்து பின்னூட்டமிடுவேன். நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  17. சாதியை கொண்டு மதிப்பிட்டு திறமையை காண மறுப்பது மிகவும் வருந்ததக்கது .....
    திறமையான உங்க மகன் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கும், தங்களின் வாழ்த்துக்கும்.

      நீக்கு
  18. பின்னூட்டம் பகுதி –(1) அன்புச் சகோதரிக்கு வணக்கம். தங்களின் கவலையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். 'முற்பட்டோர், பிற்பட்டோர் என்று இந்த ஒதுக்கீடு நியாயமானதே. ஆனால், அது சாதி சார்ந்ததாகிப் போனதுதான் மிகவும் வேதனை' எனும் வரிகளில் உங்கள் சமூகப் பொறுப்பு தெரிகிறது. மேலும் தொடர்ந்து வரும் - ''இன்டெர்ன்ஷிப் ரிசல்ட் அறிய நானும் காத்திருக்கின்றேன்! அவன் பலவற்றைக் கற்றுக் கொண்டு, அவனது கனவான, மிகவும் உயர்வாகக் கருதப்படும் டிப்ளமேட் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் வெட்னரி சர்ஜரி (DACVS) மற்றும், டிப்ளமேட் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் வெட்னரி அனஸ்தீசியா அண்ட் அனல்ஜீசியா (DACVAA) பட்டங்களைப் பெற்று, இங்குள்ள மாடுகளுக்குச் சிசிச்சை செய்வான் என்றும், பல மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பான் என்ற நம்பிக்கையிலும்!' - எனும் வரிகளில் உங்கள் மகனின் எதிர்கால லட்சியம் பற்றிய கவலை தெரிகிறது.
    உங்கள் கவலையை நானும் பகிர்ந்துகொண்டு இப்பின்னூட்டத்தை இடுகிறேன்.
    நம் நாட்டுச் சாதி அடுக்குகள் மிகக் கேவலமானவை. இவற்றை உருவாக்கிய சுயநல அறிவுஜீவிகள் ஓரிரு நாளில் உருவாக்கிவிட வில்லை. அடுத்தடுத்த அன்றைய உயர்சாதிக்காரர் மட்டுமின்றி சந்ததிகளும் உழைக்காமல் அதிகாரம் செய்துகொண்டே உட்கார்ந்து சாப்பிடுவதற்கான நிரந்தர ஏற்பாடுதான் சாதி அடுக்கு.
    இதில் பகவானின் நெற்றியில் பிறந்த பிராமணரும், மார்பில் பிறந்த சத்திரியரும் “யார் பெரியவர்“ என நடத்திய உள்குத்துகளே நம் நாட்டு வரலாறு! மன்னர்களின் வரலாறுதானே இந்திய வரலாறாகக் கடந்த நூற்றாண்டுவரை அறியப்பட்டிருந்தது! எல்லா மன்னரோடும் –பொன்னியின் செல்வனில் வரும் ஆழ்வார்க்கடியான் போலும், சிவகாமியின் சபதத்தில் வரும்- நாகநந்தி போலவும் பல சாமியார்கள் வருவார்கள்..இன்றைய ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஆளுங்கட்சியான பா.ஜக.வை ஆட்டிவைப்பது வரை இது நீள்கிறது. சாதி அடுக்குகளைப் பத்திரமாகப் பாதுகாத்து வருவோர் இந்த வரலாற்றின் கொடுமைகளை நியாயப்படுத்தியதுதான் மகாபாரதமும், இராமாயணமும், தொடர்ச்சியை காளிதாசனிலிருந்து கண்ணதாசன் வரை காணலாம்.
    மனித சமூக வரலாற்றில் முதல் அடிமைத்தனம் ஆணுக்குப் பெண் அடிமை என்று வந்த நிலை. அதுவரை -வேட்டைச் சமூகத்தில் இருந்தவரை- பெண்தான் தலைமையேற்றாள். பின்னர் ஓரிடத்தில் பெரும்பாலும் நதிக்கரையில் இருந்து பயிரிடும் வேலைகளைத் தெரிந்துகொண்டபின் –உணவு பயிரிடும் காலத்தில்- வெளியுலகம் ஆணுக்கும் வீட்டுவேலை பெண்ணுக்கும் ஆனது. அப்போது உணவு பயிரிடுவதோடு, ஓரிடத்தில் தங்கத் தொடங்கியதால், சமூகத்தில் வேலைப் பிரிவினை தோன்றியது. உடல் உழைப்பு வேலைகளைச் செய்தவர்கள் தாழ்ந்த சாதியாகவும் உட்கார்ந்து மூளைவழி வேலை செய்தவர்கள் உயர்சாதியினராகவும் பிரிவுகள் தோன்றின. இதை நேரடியாகச் செய்தால் புரிந்துவிடும் என்பதால் சாதிகளைக் கடவுளோடு சேர்த்து, “நான்கு வர்ணங்களையும் நான்தான் படைத்தேன், அததற்குரிய வர்ணாசிரம தர்மத்தை மீற என்னாலும் முடியாது” என்று பகவான் கிருஷ்ணன் சொன்னதாக எழுதினார்கள் எழுதாத சட்டமாக இது இன்றுவரை அரசியல் சட்டத்தையும்விட வலிமையாக சாதியச் சமூகத்தில் இன்றைய கிராமங்களில் அமலாவதைக் காணலாம்.
    இதை நடைமுறைப் படுத்தவே வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், கதைகள் காவியங்கள் அனைத்தும் இந்தச் சாதிச்சனியனை நியாயப்படுத்தியே வந்தன. ஆயினும் சாதிக்கு ஒரு நீதி என்பது தவறானது என்னும் குரல் அப்போதே கேட்கத் துவங்கியது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்“ என்றான் வள்ளுவன், “சாதியாவது ஏதடா? மதங்களாவது ஏதடா?” –எனச் சித்தர்கள் முழங்கினார்கள்.
    “குகனொடும் ஐவரானோம்” என்றது கம்ப இராமனின் குரல். “சூத்திரனுக்கொரு நீதி -தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் - அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்” என்று பாரதி முழங்கினான். (தொடரும்)

    பதிலளிநீக்கு
  19. பின்னூட்டம் பகுதி (1)இன் தொடர்ச்சி –
    ஆயினும் இந்துத்துவத் தந்திரம் சாதி ஒழிப்பை நடைமுறைப்படுத்த விடவில்லை. “மனுதர்மம்” என்பது இன்றும் சாதிக்கு ஒரு நீதி சொல்லும் தர்மம்தான். சாதிகளைக் கடவுளின் கைப்பாசமாக இறுக்கிக் கட்டியது மதம்... கடவுளின் கை ஆயுதமாய், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு நெறிமுறைகள், சமூகஏற்றத்தாழ்வுகள்.. “இதை இவர்கள்தான் செய்ய வேண்டும்” என்ற கட்டுப்பாடுகளை இன்றும் மீறமுடிகிறதா என்ன? மீறவிடாமல் செய்வதுதான் சாதியம்.
    சுமார் நாலாயிரம் ஆண்டுகளாகப் படிப்பு வாசமே அறியாதவர்களுக்குப் படிக்க வாய்ப்புத் தரவேண்டும் என்று எழுந்ததுதான் அம்பேத்கர், பெரியாரின் இடஒதுக்கீட்டுக் கோரிக்கைகளும் போராட்டங்களும்.
    எழுதிய அம்பேத்கரையே இழிவு படுத்தியது அரசியல். அந்த அரசியல் சட்டத்தை முதன்முதலாகத் திருத்தியது பெரியாரின் கைத்தடிதான்! ஆனாலும் பின்வந்த கைத்தடிகள் இடஒதுக்கீட்டைச் சாதிஅரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டதும் நடந்தது. இப்போது – தொடங்கியுள்ள இருபத்தோராம் நூற்றாண்டில்கூட - ஓரிரு தலைமுறையே படித்திருந்தாலும், பெரும்பாலும் முதல்தலை முறை மாணவர்களே இன்றும் அதிகம் என்பதைச் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
    எத்தனை நீண்ட ரத்த வரலாறு இது? இதில் இன்றைய நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியும், சமூகநிலையில் உயர்ந்தும் இருக்கும் நிலைதான் உங்கள் மகனைத் தாக்கியிருக்கிறது. சாதி ஒழியவேண்டும் என்று மனசார நினைப்பவர்கள் உயர்சாதியிலும் பற்பலர் உண்டு. ஏ.பாலசுப்பிரமணியன் எனும் ஐயர்தான் மதுரை மீனாட்சியம்மை கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவரை அழைத்துப் போகும் போராட்டத்தை, முத்துராமலிங்கருடன் சேர்ந்து முதலில் நடத்தினார். ஆனாலும்...
    இடஒதுக்கீ்ட்டுக்காக நடந்த போராட்ட வரலாற்றை அறிந்திராமல் அதன் பலனை மட்டும் அனுபவித்துவரும் இன்றைய தலைமுறை, ஒரு “நீயா நானா“ நிகழ்ச்சியில் அதையே வெறுத்துப் பேசியதைக் கண்டு அதிர்ந்து போனேன் நான். அப்பொழுது, கோபிநாத் சமூக ஆர்வலர்களைப் பார்த்துச் சொன்னார் “உங்கள் வேலைகள் இந்தத் தலைமுறைக்குச் சரியாகப் புரியும் வகையில் இல்லை பார்த்தீர்களா?” என்று... அதுதான் இன்றைய சுயநல அரசியல் குழப்பத்தின் விளைவு.
    அம்பேத்காரை மட்டுமல்ல பெரியாரையும் சரியாக இந்தத் தலைமுறையிடம் கொண்டுசேர்க்கும் வேலையில் எவ்வளவு பெரிய இடைவெளி.. இதன் விளைவுகளைத்தான் இப்பொழுதைய சமூகம் சந்திக்கிறது... அதுதான் உங்கள் கவலையை அதிகப்படுத்தியிருக்கிறது.
    “தகுதி-திறமை” என்பது பல தலைமுறை ஜீன்களின் கூட்டுவிளைவு! இன்றைய தலைமுறையே சாதித்தால் அது உழைப்பின் விளைவு!
    அதற்காக “போன ஜென்ம பலன்களை அனுபவிக்கறோம் அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும்“ என்பது சரியான பார்வையல்ல... நமது சமூக முரண்பாடுகளைப் புரிந்துகொண்டு இதன் இழிவுகளைக் களைய அதற்கான சரியான சக்திகள் எவை என்பதைப் புரிந்து இணைந்து செயல்படுவதுதான் சரியான மாற்று. மற்றவை ஆகுல நீர பிற.
    இது புரிய இன்றைய இந்தியாவின் அரசியல் கட்சிகளின் வரலாற்றுப் பின்னணியும் கொஞ்சம் புரிய வேண்டும் பாடநூல் வரலாறு போதாது.
    (இன்றைய 9,10ஆம் வகுப்புகளின் பாடநூல் வரலாற்றில் எத்தனை பிழைகள் உள்ளன என்ற “தமிழ் இந்து“ கட்டுரை பார்த்தீர்களா?)
    எல்லார்க்கும் அவரவர் விரும்பும் படிப்பு, அதன்பின், எல்லாருக்கும் அவரவர் தகுதிக்கான வேலை, எல்லாருக்கும் அவரவர் தேவைக்கான வாழ்வு என்னும் ஒரு சமத்துவ உலகை நோக்கிய நம்பயணம் இந்தப் புரிதல்களோடு தொடரட்டும். சாதி மதங்களை அதுவரை பார்ப்போம்!
    உங்கள் அன்பு மகனின் லட்சியமான விலங்கியல் உயர் மருத்துவ நிபுணருக்கானஉயர் கல்வி நிச்சயமாகக் கிடைக்க என் இதயபூர்வமான வாழ்த்துகள். அதைத் தொடர்ந்து இங்குவந்து, ஐந்தறிவு விலங்குகளுக்கு மட்டுமின்றி ஆறறிவு இந்திய விலங்குகள் பலலட்சம் இருக்கின்றனவே! அவற்றுக்கும் மருத்துவம் செய்ய வாழ்த்துகள் சகோதரீ.
    சாதியின் நீண்ட வரலாறு போலவே, உங்கள் பதிவு மட்டுமல்ல எனது பின்னூட்டமும் நீண்டுவிட்டது. தவிர்க்க முடியாததும் கூட. நன்றி. வணகக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பு மகனுக்குச் சொல்லுங்கள்.. அவசியம் இந்தியாவிற்கு வந்து இங்கு உன்னைப் பாதித்த சாதிய ஏற்றத்தாழ்வே இல்லாத உலகம் உருவாக நீயும் பணியாற்ற வேண்டும் என்று சொல்லுங்கள். நோயிருக்கும் இடத்தில்தானே மருத்துவருக்கு வேலை? அமெரிக்கா சுகமான (?) பிழைக்கும் இடமாக இருக்கலாம் ஆனால் வாழக்கூடிய வாழவேண்டிய பணியாற்றவேண்டிய இடம் இந்தியாதான். என்பதை அவருக்கு விளக்கமாகச் சொல்லுங்கள். புரிந்துகொள்வார் என நம்புகிறேன்

      நீக்கு
    2. மிக்க நன்றி ஐயா! தங்களின் ஆழமான , வலுவான சிந்திக்க வைக்கும் பின்னூட்டக்க கருத்திற்கு மிக்க நன்றி ஐயா. இதில் ஒரு சில கருத்துக்களை நாங்கள் எங்கள் சாதி பற்றிய இடுகைகளில் சொல்லியும் இருக்கின்றோம் ஐயா.

      எனக்கு, ஒரு தாயாக என் மகனின் உணர்வுகளை உ ணர்ந்ததால் தான் இப்படி ஒரு பதிவு. இட ஒதுக்கீடால் விளைந்த நன்மைகளை நாம் மறக்கவில்லை. அது மிகவும் அவசியமானதே. இந்த இடுகை ஒரு தனிப்பட்ட அனுபவம்தானே அல்லாமல் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது அல்ல .

      //இடஒதுக்கீ்ட்டுக்காக நடந்த போராட்ட வரலாற்றை அறிந்திராமல் அதன் பலனை மட்டும் அனுபவித்துவரும் இன்றைய தலைமுறை, ஒரு “நீயா நானா“ நிகழ்ச்சியில் அதையே வெறுத்துப் பேசியதைக் கண்டு அதிர்ந்து போனேன் நான். அப்பொழுது, கோபிநாத் சமூக ஆர்வலர்களைப் பார்த்துச் சொன்னார் “உங்கள் வேலைகள் இந்தத் தலைமுறைக்குச் சரியாகப் புரியும் வகையில் இல்லை பார்த்தீர்களா?” என்று... அதுதான் இன்றைய சுயநல அரசியல் குழப்பத்தின் விளைவு. அம்பேத்காரை மட்டுமல்ல பெரியாரையும் சரியாக இந்தத் தலைமுறையிடம் கொண்டுசேர்க்கும் வேலையில் எவ்வளவு பெரிய இடைவெளி.. இதன் விளைவுகளைத்தான் இப்பொழுதைய சமூகம் சந்திக்கிறது... //


      சிந்திக்க வேண்டிய மிக அருமையான கருத்து ஐயா!

      என் மகனை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி! தாங்கள் என் மகனிற்குச் சொல்லியதை நானும் சொல்லி வருகின்றேன் ஐயா. அவனுக்கும் மனதில் அது உள்ளது.


      நீக்கு
  20. இந்த அளவுக்கு மோசமான ஒரு பதிவை நான் இந்தத் தளத்தில் எதிர்பார்க்கவில்லை! பொய்யான, தவறான தகவல்களோடு முழுக்க முழுக்கப் பார்ப்பனியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரையும், இதை ஒரு வார்த்தை கூடக் கண்டிக்காமல் இத்தனை பேரும் பாராட்டி மட்டுமே கருத்திட்டிருப்பதும் திகைப்பளிக்கின்றன!

    திறமை இருந்தும் உங்கள் மகன் தனக்குண்டான கல்வியைப் பெற முடியாமல், குறிப்பிட்ட சாதியில் பிறந்ததற்காக ஏறத்தாழ நாட்டை விட்டே துரத்தப்பட்டிருக்கிறார் என்பது வேதனைக்குரிய ஒன்றுதான். அதற்காக நான் ஆழ்ந்த வருத்தத்தை அடையவே செய்கிறேன். ஆனால், அதற்காக நீங்கள் இட ஒதுக்கீடு என்கிற அமைப்பையே குற்றம் கூறுவது நியாயமில்லை. உலகில் உள்ள ஒவ்வொரு விதயம் பற்றியும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கும், சார்பாகவோ எதிராகவோ. அவ்வகையில் இட ஒதுக்கீடு பற்றியும் உங்களுக்கு என ஒரு கருத்து இருக்கும்; அதை நீங்கள் கூறுகிறீர்கள் என்பது சரி. ஆனால், உங்கள் கருத்தை வலுவூட்டுவதற்காகக் குறிப்பிட்ட விதயம் பற்றித் தவறான, பொய்யான ஒரு தகவலைத் தர உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

    பொருளாதாரப் பின்னணியின் அடிப்படையில்தான் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டன என்றும், அவை சாதி சார்ந்தவையாக மாறிப் போயின என்றும் நீங்கள் கூறியிருப்பது முழுக்க முழுக்கத் தவறான, உண்மைக்குப் புறம்பான தகவல்! சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் தேவை கருதித்தான் இட ஒதுக்கீட்டுச் சட்டமே இயற்றப்பட்டது; அதுதான் உண்மை; அதுவும் சாதாரணமாக, நாட்டில் எல்லோரும் அறிந்த உண்மை. அதை நீங்கள் இப்படித் திரித்து, தவறாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியிருப்பது பெருந்தவறு! வேண்டுமானால் தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாக்களில் பாருங்கள்! சட்ட இணையத்தளங்களின் விளக்கங்களைப் படித்துப் பாருங்கள்!

    மேலும், இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரரீதியில் இருப்பதுதான் நியாயம் என்றும், சாதிய அடிப்படையில் இருப்பது தவறு என்றும் கூறி, அதற்குக் காலங்காலமாகப் பார்ப்பனியச் சிந்தனையாளர்கள் முன்வைக்கும் அதே வாதங்களை எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். என்னை விட மெத்தப் படித்த, நாட்டு நடப்பைக் கூர்ந்து கவனிக்கிற, ஆசிரியப் பெரும்பணி செய்கிற உங்களுக்கு நாட்டில் நடக்கும் சாதிய அவலங்கள் உண்மையிலேயே தெரியாதா?

    பதிலளிநீக்கு
  21. ஒருவன் பொருளாதாரரீதியாக எவ்வளவுதான் முன்னேறினாலும், தன்னை விடப் பொருளாதாரத்தில் கீழாகவோ அல்லது தனக்குச் சமமாகவோ இருக்கும் மேல்சாதிக்காரனிடம் போய்ப் பெண் கேட்க முடியுமா?...

    ஒருவன் எவ்வளவுதான் படித்து, பட்டம் பெற்று, மாவட்டத்துக்கே ஆட்சியாளரானாலும் இரட்டைச் சுடுகாட்டு முறை கடைப்பிடிக்கப்படும் தன் பகுதியில், இறந்த பிறகு அவன் மேல்சாதிக்காரர்கள் சுடுகாட்டில் எரிக்கப்பட முடியுமா?

    இந்த இரண்டில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லி விடுங்கள், நீங்கள் கூறுகிறபடி இட ஒதுக்கீடு பொருளாதாரரீதியில்தான் இருக்க வேண்டும், சாதிய அடிப்படையில் இருக்கக்கூடாது என்கிற உங்கள் வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

    'நாட்டாமை' படம் பார்த்திருப்பீர்கள். அதில், பெரிய வணிகராகவும், ஆளுநர் முதலானோர் மதிக்கும் அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவராகவும் உள்ள ஜெய்கணேஷ் அவர்கள் கிராமத்து நாட்டாமையான சரத்குமாரிடம் கைகட்டிக் குனிந்து பணிந்து பேசும் காட்சி ஒன்று வரும். அதுதான் இன்றும் இந்திய கிராமங்களின் நிலைமை. ஒருவர் எவ்வளவுதான் படித்திருந்தாலும், பெருஞ்செல்வந்தராக ஆனாலும், அதிகாரமட்டத்தைக் கைப்பற்றினாலும் தன் ஊருக்குச் செல்லும்பொழுது அந்த ஊர்ச் சாதி வழக்கங்களை அடக்குமுறைகளைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த அளவுக்குச் சாதி வேறுபாடு இல்லாவிட்டாலும், இங்கும் பொதுமக்கள் வாழும் பகுதியும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியான சேரிகளும் தனித்தனியாகப் பிரித்துத்தான் வைக்கப்பட்டுள்ளன என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. பன்னாட்டு நிறுவனங்களிலும், தகவல்தொழில்நுட்பப் பெருநிறுவனங்களிலும் கூட உள்ளுக்குள் சாதிப் பாகுபாடு மிக நாசுக்காகக் கடைப்பிடிக்கப்படுவதும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அதனால் குமுறுவதும் தாங்கள் அறியாததா?

    பொருளாதாரரீதியாலான இட ஒதுக்கீடுதான் நியாயம் என்கிற இந்த வாதத்தை நீங்கள் எங்கே உட்கார்ந்து கொண்டு சொல்கிறீர்கள் தெரியுமா? தாழ்த்தப்பட்டோர் வளர்க்கும் நாய் தங்கள் எல்லைக்குள் நுழையக்கூடாது எனப் பட்டப் பகலில் வெட்ட வெளிப்படையாகப் பலகை மாட்டியிருக்கும் கிராமங்களை இன்றும் கொண்டிருக்கும் இதே நாட்டிலிருந்து!...

    தாழ்த்தப்பட்டவனை மணந்ததற்காக, கருச் சுமந்து நிற்கும் பெற்ற மகளைத் தாயே நஞ்சூட்டிக் கொல்லும் இதே சமூகத்திலிருந்து!...

    அண்மையில், இளவரசன்-திவ்யா கொலை நிகழ்வில் கூட, அவர்கள் இருவரும் வீட்டைத் துறந்து சென்றதை அறிந்ததும், தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் அந்தப் பகுதியில் வேண்டுமென்றே அவர்களின் உடைமைகளையும் சேகரிப்புகளையும் சொத்துக்களையும் குறி வைத்து நாசமாக்கினார்கள் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றம் பொறுக்காத அந்தப் பகுதி உயர்த்தப்பட்டவர்கள்!

    இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து கொண்டு நீங்கள் எல்லாரும் கூறுகிறீர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முன்னுக்கு வர இருக்கும் அந்த ஒரு வழியான இட ஒதுக்கீட்டையும் அடைக்க வேண்டும் என்று. இதற்குப் பெயர்தான் சாதிய எதிர்ப்பா?

    பதிலளிநீக்கு
  22. ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் மதிப்பெண், கட்டணம் முதலான எல்லாவற்றிலும் சலுகைகள் வழங்கி அவர்களை மேலே கொண்டு வரத் தனிச் சட்டம் கடைப்பிடிப்பது இங்கு மட்டுமில்லை; உலகின் பல நாடுகளிலும் உண்டு; அமெரிக்காவிலும் உண்டு; வேறு பல நாடுகளிலும் உண்டு. அப்படியிருக்க, இந்தியாவில் மட்டும்தான் இட ஒதுக்கீடு இருப்பது போல நீங்களும், இங்கு கருத்துத் தெரிவித்துள்ள மற்றவர்களும் கூறுவது அநியாயம்!

    பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனுக்குச் சமூக மதிப்பைப் பெற்றுத் தந்து விடுவதில்லை. சாதிய அமைப்பு எப்படி மனிதர்களை ஒரு சமூகத்துக்குக் கீழ் இன்னொன்று என அடுக்குமுறையில் பிரித்து வைத்துள்ளதோ, அதே அடிப்படையில் அதை முறியடிப்பதற்காக, அதே முறையில் இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுகிறது. திறமை உள்ள பலர் இதனால் பாதிக்கப்படுகிறார்களே என்பது உங்கள் கேள்வி. திறமை இருக்கிறதா இல்லையா என்பதைத் தாங்களே அறிந்து கொள்ள வாய்ப்புக் கூட இல்லாமல் இங்கு பல சமூகங்களே இருக்கின்றனவே அதற்கு உங்கள் பதில் என்ன? அப்படிப்பட்டவர்களை மேலே கொண்டு வரத்தான் இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு எனும் இந்த ஒரு வசதி மட்டும் இருந்திரா விட்டால் இன்று தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களில் இத்தனை பேர் ஆட்சியாளர்களாகவும், காவல்துறை உயரவலுவலர்களாகவும், வழக்குரைஞர்களாகவும், நீதிபதிகளாகவும், மருத்துவர்களாகவும், அறிவியலாளர்களாகவும் ஆகியே இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

    வீட்டிலிருக்கும் பல குழந்தைகளில் மாற்றுத்திறனாளிக் குழந்தைக்கு மட்டும் எல்லாவற்றிலும் சலுகை தரப்படுவதும், இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உணவு வழங்கச் செல்லும்பொழுது சீற்றத்தால் பாதிக்கப்பட்டுக் கை கால் இழந்தவர்கள், முதியவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை தரப்படுவதும் போன்றதுதான் இட ஒதுக்கீடும். அதைப் புரிந்து கொள்ளாமல், மாற்றுத்திறனாளிக் குழந்தை மீது மற்ற குழந்தைகள் பொறாமை கொண்டால், முதலில் உணவு கிடைத்துவிட்டவர்களைப் பார்த்துச் சீற்றத்தில் பாதிக்கப்பட்ட மற்றவர்கள் "எங்களுக்கு மட்டும் பசியில்லையா?" என்று கேட்டால் அஃது எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டதுதான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பார்வையும். ஆனால், அந்த இரண்டையும் விட இட ஒதுக்கீட்டு எதிர்ப்பில் உள்ள கூடுதல் கொடுமை என்னவென்று கேட்டால், சாதியை உருவாக்கியவர்களே சாதியால் தாழ்த்தப்பவர்களுக்குத் தரப்படும் முன்னுரிமை தங்களை பாதிக்கிறது என்று கூறுவது! :-(

    (பி.கு: பார்ப்பனியம் என்கிற சொல் பார்ப்பனர்களைக் குறிப்பது இல்லை. பார்ப்பனியச் சிந்தனைகள் கொண்ட எல்லாச் சாதியினரையும் குறிக்கும் பொதுச் சொல்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான விளக்கங்கள், கேள்விகள் !

      நீக்கு
    2. மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவள் அல்ல. நீங்கள் சொல்லுவது போல் பார்ப்பனீயத்திற்கு ஆதரவாக எழுதிய ஒரு இடுகையல்ல இது. நான் ஒரு தாயாக என் மகனின் உணர்வுகளை உணர்ந்ததால் தான் இப்படி ஒரு பதிவு. இட ஒதுக்கீடால் விளைந்த நன்மைகளை நான் மறக்கவில்லை. அது மிகவும் அவசியமானதே. இந்த இடுகை ஒரு தனிப்பட்ட அனுபவம்தானே அல்லாமல் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானதே அல்ல .



      நான் பிறந்தது முதல் சாதி பார்த்து, சாதி பேசியது இல்லை. அதைத்தான் மகனுக்கும் உணர்த்தியிருக்கிறேன். முன்னோர்கள் செய்த தவறுகளுக்கு, இந்தத் தலைமுறையைச் சேர்ந்த தன்னைப் போன்றவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கின்றதே என்பதால்தான் தனக்கு சாதியில்லை என்று சொல்லல மட்டும் செய்யாமல் சாதிக் குறியீடான வொயிட் க்ராசையே எடுத்துவிட்டான்.



      அதனால் தயவு செய்து என்னைத் தவறாக புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன் நண்பரே! நாங்களும் தங்களது கருத்துக்களை, விவாதங்களை எங்களது கருத்துக்களைச் செம்மைப்படுத்த இதற்கு முன்னும் உபயோகித்தது போல் இனியும் உபயோகிப்போம். நீங்கள் எத்தனையோ முறை ஒத்த கருத்துக்களையும், சிந்தனைகளையும், பாராட்டி எழுதியதை மறக்க முடியாதே.



      மாறுபட்ட கருத்துக்கள் ஒரு போதும் நம் நட்பையோ, அன்பையோ பாதிக்காது. நண்பரே !

      நீக்கு
    3. மிக்க நன்றி அம்மணி!

      உங்கள் மகன் பூணூலை அறுத்தெறிந்திருப்பது கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மேலும், நீங்கள் பதிவில் கூறியிருப்பது போல, உங்களைப் போல், சாதி பார்க்கக்கூடாது என்றெல்லாம் தங்கள் பிள்ளைக்கு யாரும் சொல்லி வளர்க்க மாட்டார்கள். சொல்லப் போனால், சாதி பார்க்கக் கற்றுக் கொடுத்து வளர்ப்பவர்கள்தான் நாட்டில் கூடுதல். அந்த வகையில் நீங்கள் வணங்கத்தக்க பெற்றோர்!

      எனது மேற்கண்ட கருத்துக்கு நீங்கள் ஏதேனும் பதிலளிப்பீர்கள், அப்பொழுது இன்னும் ஓரிரண்டு கருத்துக்களைச் சொல்லிக் கடைசியாக இந்தப் பாராட்டைத் தெரிவிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் பிறகு, இதைச் சொன்னால், முதலில் மாறுபாடாகப் பேசியதை ஈடுகட்ட இப்பொழுது இப்படிச் சொல்கிறான் என யாராவது தவறாக நினைப்பார்களோ என்று நினைத்தேன். ஆனால், நீங்களே தவறாக நினைக்காமல், என் மாற்றுக்கருத்தை ஏற்று விவாதிப்பதாகவெல்லாம் சொன்னதால், இப்பொழுது மனதிலிருப்பதைத் தாராளமாகத் தெரிவித்து விட்டேன்!

      நீக்கு
  23. நாங்களெல்லாம் மொய் விசயத்துலே ஜென்டில்மேன்
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ்ஹஹா...நாங்களும்தான் ஜி! நாங்களும் இப்ப கூட மொய் வைச்சுட்டோம். என்ன கருத்து போட முடியாம இருந்துச்சு/இருக்குது. இன்னும் சரியாகவில்லை. இது வேறு கணினியில்...அதுவும் ப்ளாகரில் இருந்து....தமிழ் எழுத்துரு இந்தக் கணினி ஏற்கவில்லை,

      நீக்கு
  24. அடர்தியும் ஆழமும் நிறைந்த பதிவு.
    காலையில் நேரமின்மை காரணமாக முழுமையாக படிக்க இயலவில்லை.
    எங்கே இது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பதிவு என்ற பார்வை வந்துவிடப்போகிறதோ
    என்ற யோசைனையில் மீண்டும் திறந்தால் அப்படியும் ஒரு பார்வை. த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! உங்கள் கருத்திற்கு! இந்த இடுகை இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது அல்ல நண்பரே!

      நீக்கு
  25. //தகவல்தொழில்நுட்பப் பெருநிறுவனங்களிலும் கூட உள்ளுக்குள் சாதிப் பாகுபாடு மிக நாசுக்காகக் கடைப்பிடிக்கப்படுவதும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அதனால் குமுறுவதும் தாங்கள் அறியாததா?// சரி நண்பரே ..அவர்கள் குமுறுகிறார்கள் ..ஆனால் இவர்கள் சாதி பிறருக்கு எப்படி தெரிந்தது ? அந்த certificate இனால்தானே ..அதைதான் நான் வெறுக்கிறேன் .பொருளாதார அடிப்படையில் உதவி அனைவருக்கும் கிடைத்தால் அனைவருக்கும் நல்லது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I too am passionate with the plea to issue certificate for students without the mention of their castes so that education and jobs will be given based only on merits of the certificate holder. Suppose it is done - then? Everywhere only the meritorious will be getting jobs and in professional colleges? What will happen then? It is simple to imagine that because it was already the scene before the introduction of reservations: only the meritorious were there. Merits came from genes. Do you accept that? If you do, the world will be for those born with the lucky genes. If you don't, and say merits come from correct and ideal circumstances of upbringing, the world will be for those born to such circumstances. In both scenarios, many others will be eliminated. When the eliminated groups preponderate in society (i.e. increase in number), there will be sociological unrest whose negative effects the meritorious will have to face. The meritorious don't live in islands marooned from main society. If the society outside is restive, the mertiorious inside can't have their peace. Living in society is much interlinked. Therefore, the eliminated groups - for no fault of their own because lack of circumstances, lack of nutrition, lack of good parentage, and so many wants and deprivations + the cruel religious legacy of lower caste labels - all these are not one own's making. So, no one can't be held responsible for his misery imposed from outsid - the eliminated groups will sulk and suffer; they may be pushed to extreme steps; or fall into the hands of politicians as playthings! In whichever way, the danger is for the meritorious groups! Have you thought about all these? It is simple to say 'Remove castes from Certificate"'. But difficult to face the ramifications.

      Society will always be uneven. In our society, the religion also plays villain to make it more uneven. As long as it is uneven, good people will continue their attempts to even it; if not possible, to neutralise its baleful effects on the innocent (I mean, no fault of their own cases)

      I would suggest the matter get deeper attention from you. Lets ponder over the bitter possibilities..

      நீக்கு
    2. Society will always be uneven. In our society, the religion also plays villain to make it more uneven. As long as it is uneven, good people will continue their attempts to even it; if not possible, to neutralise its baleful effects on the innocent (I mean, no fault of their own cases)//

      Well said. Thanks a lot!

      நீக்கு
  26. //பல பணக்காரர்களும், அரசியல்வாதிகளும், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மருத்துவப் படிப்பிலும், பொறியியல் படிப்பிலும், தங்கள் பதவியையும், சாதியையும் காட்டி பல சலுகைகள் பெற்றுவிடுகின்றனர். இறுதியில் எஞ்சுபவர்கள் முற்பட்டோர் பிரிவினைச் சேர்ந்தவர்கள். இந்த முற்பட்டோரில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர ஏனையோரில் பலர், தங்களுக்குள் இருக்கின்ற உப பிரிவுகளில் எது பிற்பட்டோர் பட்டியலில் வருகின்றதோ அதைத் தேர்ந்தெடுத்து அந்தச் சாதிப் பிரிவு சான்றிதழ் பெற்றுவிடுகின்றனர். சான்றிதழில் இருப்பது ஒரு சாதி-கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு உதவும் ஒன்று. வேறு தருணங்களில், திருமணம் என்று வரும் போது சொல்லப்படுவது அவர்களது உண்மையான சாதி.//

    இதே கருத்தை முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் தெரிவித்திருக்கிறேன்.
    //தங்களுக்கான பிரிவில் கிடைக்கவில்லை என்றால், ஓசி கேட்டகிரியுடன் போட்டி போடலாம்.//
    அதிக மதிப்பெண் பெற்றுள்ள இதர வகுப்பை சேர்ந்தவர்கள் ஓசி (Open competion) இல் விரும்பும் இடம் கிடைக்கவில்லை என்றால்தானே தங்கள் இனத்துக்குரிய பிரிவில் வேண்டும் இடத்தை தேர்ந்தெடுக்க முயற்சி செய்வார்கள்? 200க்கு 200 மதிப்பெண் எடுப்பவர் எந்தப் பிரிவினர் ஆயினும் பொதுப் பிரிவிலேயே விரும்பும் இடங்களை தக்க வைத்துக் கொள்ள முடியும்

    பதிலளிநீக்கு
  27. நீங்க மனதைத் திறந்து கொட்டிட்டீங்க. உங்களைப் போல் பலர் (இதுபோல் பாதிக்கப் பட்டவர்கள்) மனதிலேயே வச்சு பொருமிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களூக்கு உங்க பதிவு ஒரு ஆறுதல்தான்

    ரிசெர்வேஷன் தப்பு. மூளையுள்ளவர்களுக்குத்தான் வாய்ப்புக் கொடுக்கணும். சாதியெல்லாம் நாங்க பார்ப்பதில்லை, எல்லோரையும் நாங்க சமமாகத்தான் மதிக்கிறோம். எங்களுக்கு ஏன் இந்த நிலை? என்கிற உண்மையான உணர்வுகளை அப்படியே சொல்லியிருக்கீங்க.

    அமெரிக்கா போய்விட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்பது உண்மையல்ல. இங்கே வந்து வாழ்பவர்களும் இதேபோல் இனப் பிரச்சினையால் எங்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் ஒரு வெள்ளைக்காரன்/கருப்பரை எடுத்துட்டாங்கனு சொல்லத்தான் செய்றாங்க. அதனால் அமெரிக்கா வந்துவிட்டால் எல்லாரும் சரி சமம் என்பதெல்லாம் ஆகப்போவதில்லை.

    அமெரிக்காவில் ரிசெர்வேஷன் என்பது இந்தியா அளவுக்கு கிடையாது என்பதே உண்மை. இங்கே உள்ள கருப்பர்கள், அடிமையாக இருந்தவர்கள் இன்னும் வறுமைக்கோட்டுக்கு கீழேயேதான் இருக்காங்க. அவர்கள் வாழ்க்கைத்தரம் முன்னேறாமல்த்தான் இருக்கு. காரணம்? போதுமான அளவு "ரிசெர்வேஷன்" அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இன்னும் 100 ஆண்டுகள் ஆனால்க்கூட இன்னிலை இங்கு சரியாகப் போவதில்லை.

    Recently immigrated Indians NEVER CARE about BLACKS who were slaves ones. They think they are superior to them because they have "lighter skin" and "better cultural background". Indians care about they themselves. They will complain only about "whites" who are looking down on them..

    கருப்பர்கள் வெள்ளையர்களை சுத்தமாக நம்புவது இல்லை. வெள்ளையர்கள் கருப்பர்களை அறவே வெறுக்கிறார்கள் என்பதே உண்மை. ஆனால் சட்டம் என்று ஒன்று உள்ளதால், எல்லோரும் வேலைக்கு வரும் ஒரு இடத்தில் மட்டும் "அன்பு பாராட்டுவது" போல் நடிப்பார்கள், நடிக்கிறார்கள். நம்ம ஊரைவிட இங்கே மோசம்.

    அதேபோல் சைனீஷ், இந்தியர்கள், வெள்ளைக்காரர்கள்னு பலவிதமான பாலிட்டிக்ஸ் இருக்கத்தான் செய்யுது. காலேஜ் அட்மிஷனில்கூட ஐ வி லீக்ஸ் பள்ளிகளில், ஏசியன்ஸை இவர்கள் கவனமாக புறக்கணிப்பதாகவும், இவர்களைவிட திறமை கம்மியாக உள்ள வெள்ளையர்களை செலெக்ட் பண்ணுவதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அது உண்மையும் கூட.

    ஆக, அமெரிக்கா போய்விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பதெல்லாம் உண்மை இல்லை. ஜாதிப் பிரச்சினை, ஜாதி அடிப்படையில் "ரிவேர்ஸ் டிஸ்க்ரிமினேஷன்" இருக்காது. இருந்தாலும், பாலசுப்பிரமணியன் என்று பெயர் வைத்திருந்த ஒரு இந்தியன், அமெரிக்கா குடிபுகுந்து குடியுரிமைபெற்றவுடன், பாலசுப்பிரமணியன் ஐயர் னு மாற்றிக் கொண்டு வாழ்வதையும் நான் பார்க்கிறேன். இது மிகைப்படுத்தப்படாத உண்மை. அதேபோல் கவுதம் ஐயர் என்கிற உயர்சாதி ஃபேக்கல்ட்டியை வெள்ளையர்கள் மெஜாரிட்டியாக உள்ள டிப்பார்ட்மெண்டில், ஒரு மனுஷனாவே மதிக்காமல். இவனும் இவன் ரிசேர்ச்சும்"னு ட்ரீட் பண்ணுவதும் நடந்துகொண்டுதான் இருக்கு. கவுதம் ஐயரிடம் போயி பேசிப்பார்த்தீங்கன்னா தெரியும்.. அவர் எப்படி எல்லாம் கண்ணீர் வடிக்கிறார் என்று. இந்தியன் பெயர் உள்ளதால்தான் எனக்கு கிராண்ட் கிடைக்கவில்லை. என்னைவிட மட்டமான ரிசேர்ச் ஐடியா உள்ள இந்த வெள்ளைக்காரனுக்கு கிராண்ட் கிடைத்துவிட்டது என்று புலம்பிக்கொண்டு இருப்பார்..

    இதையெல்லாம் பார்க்கும்போது உலகம்னா என்ன? மனிதர்கள்னா என்ன? என்கிற ஒரு பெரிய கேள்விக்கு பதில் கிடைக்கும்.

    அவரவர் பிரச்சினை அவரவருக்கு. இப்போதைக்கு உங்க மகனுக்கு எச்1 பி விசா கிடைக்கணும். அதன்பிறகு க்ரீன் கார்ட் கிடைக்கணும், அதன் பிறகு அமெரிக்க குடியுரிமை கிடைக்கணும்.

    எல்லாம் கிடைத்த பிறகு?

    He will start missing the India which he has been complaining about now. and he will be complaining about America and how he has been discriminated because he is an "indian" with a "darker skin! This is what happening here among the Indians who immigrated here!

    Well, it never ends. I am honest here! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சபாஷ் வருண். துல்லியமான பார்வை. நிதர்சனமான உண்மை!

      நீக்கு
    2. வெளிநாடுகளில் உள்ள இட ஒதுக்கீட்டு முறை பற்றி இங்கு பெரும்பாலோர் அறியாத அரிய பல தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி! இது பலருக்கும் உதவும்.

      நீக்கு
    3. Yes, it will never come to an end. Wherever one goes, one is subjected to discrimination, overtly or covertly, or both. Might is right even in the so-called civilised societies. Therefore, the powers that be in democracies need to go to the rescue of the week and the vulnerable. Reservation is one such form of help.

      To the question, Should I come back to India of castes, Mummy?, the reply may be: Stay put there. Indian origin Americans may group themselves and join them to get protected from the discrimination there.

      I can say that to him. but the pity is Wherever Indians go to live, they carry the baggage of castes. Soon, there will be divisions among them. As pointed out by you, Indians don't treat the blacks as their equals. When India of castes is replicated in the US, there will be some among Indians who will be like dalits denied equality and they will join the blacks and others. It is already happening in UK Gujarati society.

      India may be far away: Indian-ness never leaves us.

      But I have found Netherlands a heaven to live. The Dutch are the most lovely people who live with all on equality. It is a haven for vets.

      Germany for Engineering, UK for Auditing, US for management, Netherlands for veterinary sciences. Your son can move to Netherlands and get the life he dreams of. He will be valued there.

      நீக்கு
    4. Varun, I agree fully with your reply. Because we happened to be in US for sometime, 12 years back. And now my son is there and almost all relatives are settled there. So we know what is what. but our aim is not to settle dwon in US or canada or in any other may be he may stay there for professional development and earn to invest in india to train poor students as a service. he has lot of dreams....that is what i intend to mention in this. may be certain words might have turned it the other way....but my intention was not that.

      Here I would like to mention one thing, varun. My son, in fact has gone there for his professional development. As you know in Indian villages there is not much good treatment for cattle. Most of the farmers are very very poor and they live quite far away from a public veterinary clinic/hospital. They cant bring them to the far away clinic except in punjab where the farmers are very rich. My son had been to the punjab veterinary college and observed their treatment, clinical facilities which are on par with international standard and farmers bringing their cattle in big trucks, the owners in BMW!!! is it possible in tamilnadu or any southern states? or even northern states? He had been to tamil nadu villages too. So when he observed the facilities in punjab college he wanted to do his higher studies in large animals/ surgery, medicine at punjab. When that did not happen though he was eligible, he broke down. So he chose the next path which he did not want to take after completing his undergradugation with a hope to get at punjab college and this path is very expensive involving a huge sum and tiresome as you know. but since his hope got shattered he had to choose this path for his further porfessional development. in future, he wants to set up a training centre for the students in india to treat cattle and establish a network of all villages, if everything goes on well! when he becomes eligible to train, we hope that there will be villages and cattle in our country hahhaa...

      Thanks a lot varun for your valuable comment

      நீக்கு
    5. To oru friend malaranban

      But I have found Netherlands a heaven to live. The Dutch are the most lovely people who live with all on equality. It is a haven for vets.

      Germany for Engineering, UK for Auditing, US for management, Netherlands for veterinary sciences. //

      yes we tried that too. till two years/one year back all countries accepted american veterinay council's license but recently ther european countries specify royal veterinary college licensure/UK to work there which again involves a huge sum and process. So he is trying in other countries where Americna veterinaty licensure is accepted. But anyhow he is trying there too.

      Thanks a lot sir for your kind advice

      நீக்கு
  28. ஒரு நல்ல கால்நடை மருத்துவரை தாயகம் இழந்துவிடும் அளவிற்கு சாதி அடிப்படையிலான ஒதுக்கீடுகள் அமைந்துவிட்டது வருத்தமான விஷயம்! நாம் எவ்வளவுதான் பேசினாலும் மாறுதல்கள் வருமென்று தோன்றவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  29. வெகு நாட்களுக்குப் பிறகு ஜாதிப் பாகுபாடுகளினால் விளைந்த ஒரு துயரச்சம்பவம் குறித்த பதிவு. பதிவும் நீளம் தான் என்றாலும் விஷயம் முக்கியம் வாய்ந்தது என்பதனால் அந்தக்குறை பெரிதாக தெரியவில்லை. பின்னூட்டங்களும் பெரியதாக வந்திருக்கின்றன. இன்னொரு முறை ஆழ்ந்து படிக்க வேண்டும். படித்தபின் மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் கவிப்ரியன்! நீங்கள் வந்து கருத்திடலாம்.

      நீக்கு
  30. நெஞ்சை உறையவைத்த பதிவு. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. உங்கள் மகன், உலக சாதனையாளர்களில் ஒருவராக நிச்சயம் வருவார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் வாழ்த்திற்கு ! நிச்சயமாக என்றாவது ஒரு நாள் நீங்கள் சொல்லியுள்ள படி வருவான் என்ற நம்பிக்கை உள்ளது.

      நீக்கு
  31. மிகவும் கலக்கமடைய வைத்து விட்டது. திறமைக்கு முதலிடம் கொடுக்கும் போது தான் நாட்டிற்கு நல்ல வருங்காலம் இருக்கும். திறமையானவர்கள் எதை செய்தாலும் அது சிறப்பாக இருக்கும். முக்கியமாக யாருக்கு என்ன பிடித்து இருக்கிறதோ அதை படிக்கும் உரிமை கூட நம் நாட்டில் இல்லாமல் போய் விட்டது. எதையோ படித்து, எப்படியோ வேலை செய்து...எப்படியும் வாழலாம் என ஆகிவிட்டது. சாதியை முதலில் பிறப்புச்சான்றில் அகற்றப்பட வேண்டும். அடுத்து பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட வேண்டும். இந்தியன் என்பதைத்தவிற பிற தேவையில்லாமல் இருந்தால் தேவலை என நினைக்கிறேன்.

    உங்கள் மகன் நன்றாக வருவார்....அவரின் ஆசை நிறைவேறும். நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்குமன்பான வார்த்தைகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் மிக்க மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  32. இரண்டாவது முறையாகப் படித்திட, உங்கள் வலைத்தளம் வந்தபோது இந்த பதிவினை நீங்கள் நீக்கி இருந்தீர்கள். மீண்டும் ஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மறுபடியும் இணைத்தமைக்கு நன்றி.

    வலைப்பதிவில் ஜாதியைப் பற்றிய கருத்துரை என்றாலே அது இருபுறமும் தீட்டப்பட்ட கத்தி என்றாகி விடுகிறது. நீங்கள் உங்கள் கருத்தைச் சொன்னீர்கள். எப்படி மென்மையாகச் சொன்னாலும் இங்கே உள்ள சிலர் திசைதிருப்பி விடுவார்கள்.

    இப்போது எல்லா ஜாதியிலும் கல்வி ஆனாலும், வேலை வாய்ப்புகள் ஆனாலும் போட்டியாளர்கள் அதிகம். இதுவே உங்கள் மகனுக்கும் நேர்ந்துள்ளது.

    த.ம.9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு. நீங்கள் சொல்லுவதும் சரிதான் ஐயா. போட்டிகள் நிறைந்த உலகம்தான் இது.



      மிக்க நன்றி தங்களின் மேலான கருத்திற்கு.

      நீக்கு
  33. Very emotional blog post from you. But motions are always suspect as they attempt to blackmail minds in their favor.. Blood is thicker than water; so you have been upset with the scheme of things affecting your family. Earlier, same stories were heard from the Brahmins, the FC. Other castes of TN under FC didn't complain; only brahmins did, as they relied on education too much. Others have other concerns, lucrative and long lasting.

    More and more colleges of engineering have made such complaints die naturally. Today seats in engg colleges go a-begging making reservations redundant. Same should have happened in vet sciences too. More privatisation, less need for reservations. The private players will provide quality education which the reservation groups, mostly SC and STs, can't afford. While the SC and STs are in government schools and colleges receiving an education only on paper, the unreservation group will do well in private colleges. It is happening. When this is extended to all types of education - medical, engg, vet sciences,the most sought after ones - there will be no room for complaint from FCs. They will be kept happy.

    The more the things change, the more they remain the same. One people will be happy; while other unhappy. Politicians will sit back and wonder what went wrong. Even after keeping castes on certificate, things remain unchanged. How?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yes Sir! agree your reply fully. your question i a valid one.

      But sir there are no private colleges in vet science except two in rajasthan. but in our country the government colleges are better than private in vet science. Pondichery college is not a private college sir. since my son had to compete in NRI sponsored quota as pondy is not a part of tamilnadu govt we had to shed money. there are already a number of private colleges in medicine and engineering making money and have become commercial.

      The more the things change, the more they remain the same. One people will be happy; while other unhappy. Politicians will sit back and wonder what went wrong. Even after keeping castes on certificate, things remain unchanged. How? // valid question sir. but who will tie the bell?

      நீக்கு
  34. முள்ளை முள்ளால் மட்டும்தான் எடுக்க முடியும் என்று
    முட்டாள்தான் சொல்வான்.
    முயன்றால்தான் முள் எனும் ச(சா) தியிலிருந்து
    மனித நேயமேனும் மலரை ப(றி)டிக்க படித்தால் மட்டுமே முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு! ஆம் மனிதநேயம் !!

      நீக்கு
  35. பலர் விரிவாக பின்னூட்டங்களை தந்துவிட்டதால் நானும் செப்ப விரும்பவில்லை..
    ஒரு முறை ஒரு தலித் மாணவருக்கு உதவி கேட்டபொழுது எனது நண்பன் வெடித்துக் கதறினான். அவன் தங்கைக்கும் இதே பிரச்னை ...
    இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது மருத்துவப் படிப்பினை பரவலாக்கம் செய்வதில் என்ன தடை இருக்கிறது... அதை செய்ய மறுப்பவர்கள் யாரு? இந்த நூலைப் பிடித்துக்கொண்டு போனால் உண்மையான குற்றவாளிகளை நாம் காண முடியும்.. அது உங்களுக்கு மீண்டும் அதிர்ச்சியாக இருக்கலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு! ஆம் மிகவும் சரியான கோணம். அதிர்ச்சிதான் புறம் வரும்~!

      நீக்கு
  36. இந்த பதிவினை நீங்கள் நீக்கி, பிறகு மீன்டும் பதிந்ததை பற்றி முதலில் என் கருத்தை முன்வைக்க விரும்புகிறேன்... எனது வார்த்தைகளில் தவறிருந்தால் மன்னிக்கவும்.

    பிரபல எழுத்தாளாரோ அல்லது வலைப்பூ நடுத்துபவரோ யாராக இருந்தாலும் படைப்பாளி படைப்பாளிதான் ! படைப்பாளி என்ற பெரிய வார்த்தை வேண்டாம் என்றால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை சொல்ல கடைக்கோடி மனிதனுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. உங்கள் கருத்துடன் ஒரு சாரார் ஒத்துபோகாமல் இருக்கலாம் அல்லது வேறொரு கோணத்தில் உங்கள் கருத்தே தவறாகவும் படலாம். எப்படி இருந்தாலும் ஒரு பதிவை பற்றியோ, படைப்பை பற்றியோ எவ்வளவு வாத பிரதிவாதங்கள் வேண்டுமானாலும் நடத்தலாம். தர்க்கத்தில் இறங்கலாம். ஆனால் பிரசுரித்த பதிவை திரும்ப பெறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இது ஒரு மிக தவறான முன்னுதாரணம்.

    எத்தனையோ ஆழமான, சமூக அக்கறையுள்ள பதிவுகளை கொடுத்த நீங்கள் இந்த ஒரு பதிவினால் மனம் சோர்ந்துவிடக்கூடாது என்பதால் இதனை குறிப்பிடுகிறேன். தவறென்றால் மன்னிக்கவும்.

    இனி பதிவை பற்றி...

    நான் பெரும்பாலும் பின்னூட்டங்களை படிப்பது கிடையாது. பின்னூட்டங்களின் மூலம் பதிவு பற்றிய எனது கருத்து சில நேரங்களில் நீர்த்து போய்விடுவதால் அப்படி ! ஆனால் இந்த பதிவின் பின்னூட்டங்களை, முக்கியமாய் இ.பு.ஞானபிரகாசன் அவர்களின் பின்னூட்டங்களையும் படித்துவிட்டே இதை பதிகிறேன்...


    பாதிக்கப்பட் நிலையிலிருந்து உங்களின் கண்ணோட்டமும் ஆதங்கமும் சரிதான். அதே போல ஞானபிரகாசன் அவர்களின் இட ஒதுக்கீடு பற்றிய விளக்கமும் உண்மையே.

    இதில் பிரச்சனை என்னவென்றால் உணர்ச்சி வசப்பட்டு இட ஒதுக்கீட்டுக்கு கீழும் மேலும் அமர்ந்துகொண்டு விவாதிக்கிறோமே தவிர நிதர்சனமான உண்மைகள் சிலவற்றை தொடர்ந்து மறந்து விடுகிறோம்.

    இட ஒதுக்கீட்டினால் பிரச்சனை என்பதைவிட அந்த இட ஒதுக்கீடுபெரும்பாலும் தவறாக பயன்படுத்தப்படுவது தான் பிரச்சனை.

    " எஸ் சீன்னு சர்டிபிகேட் வாங்கி கோட்டாவில ட்ரை பண்ணுங்க ! "

    என அறிவுரை கூறுபவர்கள் இல்லை என மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அத்துடன் இதனை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் லஞ்சம் புரையோடிய அமைப்புகள் !

    இந்த இட ஒதுக்கீடு தொடங்கிய அன்றே பாலர் பருவம் தொடங்கி அடிப்படை கல்வி முறையின் தரத்தையும் உயர்த்தியிருந்தால் இத்தனை வருடத்தில் எதோ ஒரு கட்டத்தில் அனைத்து சமூகத்தவரும் கல்வி திறனில் சம நிலையை அடைந்திருப்பார்கள். இந்த ஜாதிய அடிப்படை ஒதுக்கீட்டுக்கு தேவை இல்லாமல் கூட போயிருக்கலாம். ஆனால் நம் அரசியல்வாதிகளின் ஓட்டு ஆசை சுயசிந்தனை முன்னேற்றத்துக்கு தொடர்ந்து வேட்டு வைத்துகொண்டிருக்கிறது !

    பார்ப்பனியம் என்பது ஒரு குறியீடு என்பது உண்மையே ! ஆனால் அந்த் குறியீட்டை பிடித்திருக்கும் நாம் இன்றும் அதனை பார்ப்பனர்களை நோக்கி மட்டுமே நீட்டிக்கொண்டிருக்கிறோமே தவிர, பிற்படுத்தப்பட்ட ஜாதி எனப்படுபவர்கள் கூட அவர்களுக்கும் கீழான ஒரு ஜாதியை ஏற்படுத்தி வைத்திருப்பதை சில பல வேலைகளில் மறந்து விடுகிறோம் !

    ஜாதி மறுப்புக்காக கொடி பிடிப்பவர்கள் கூட என்றாவது தேவைப்படும் என்று ஜாதி சான்றிதழ் எடுத்து வைத்திருக்கும் வரையிலும்... " ஜாதிகள் இருக்குமடி பாப்பா !!! "

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதே போல ஞானபிரகாசன் அவர்களின் இட ஒதுக்கீடு பற்றிய விளக்கமும் உண்மையே// - நன்றி ஐயா!

      //பார்ப்பனியம் என்பது ஒரு குறியீடு என்பது உண்மையே ! ஆனால் அந்த் குறியீட்டை பிடித்திருக்கும் நாம் இன்றும் அதனை பார்ப்பனர்களை நோக்கி மட்டுமே நீட்டிக்கொண்டிருக்கிறோமே தவிர, பிற்படுத்தப்பட்ட ஜாதி எனப்படுபவர்கள் கூட அவர்களுக்கும் கீழான ஒரு ஜாதியை ஏற்படுத்தி வைத்திருப்பதை சில பல வேலைகளில் மறந்து விடுகிறோம் !// - நான் அப்படி மறப்பதில்லை ஐயா! சாதியை எதிர்த்து நான் வலைப்பூவில் எழுதிய முதல் பதிவே பா.ம.க-வையும், விடுதலைச் சிறுத்தைகளையும் எதிர்த்துத்தானே தவிர, சோ-வையோ பா.ஜ.க-வையோ எதிர்த்து இல்லை. மேற்கண்ட அந்த என் கருத்தில் கூட, பார்ப்பனியம் என்கிற சொல்லுக்கு இறுதியில் நான் அத்தகைய விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது இல்லையா? ஆனாலும் கொடுத்திருக்கிறேன் என்றால், யாரும் அதைக் குறிப்பிட்ட சாதியினருக்கு எதிரானதாக மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தானே?

      நீக்கு
    2. பார்ப்பனியம் என்பது ஒரு குறியீடு என்பது உண்மையே ! ஆனால் அந்த் குறியீட்டை பிடித்திருக்கும் நாம் இன்றும் அதனை பார்ப்பனர்களை நோக்கி மட்டுமே நீட்டிக்கொண்டிருக்கிறோமே தவிர, பிற்படுத்தப்பட்ட ஜாதி எனப்படுபவர்கள் கூட அவர்களுக்கும் கீழான ஒரு ஜாதியை ஏற்படுத்தி வைத்திருப்பதை சில பல வேலைகளில் மறந்து விடுகிறோம் !//

      நண்பரே! நான் நீக்கியதன் காரணம் ஒரு வேளை விவாதத்திற்கு வழி வகுத்து விட்டதோ அதுவும் சாதி பற்றி, சாதி விரும்பாத எனது இடுகையால். அதனால்தான் நீக்கிவிட்டேன் ஒரு சிறு பயத்தினால்.



      ஆம் உண்மையே நண்பரே! ஆனால் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான இடுகை அல்ல இது. அல்லது ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்த அதற்கு ஆதரவான இடுகையும் அல்ல இது. ஒரு தனிப்பட்ட அனுபவத்தின், உணர்வுபூர்வமான இடுகையே. எனக்கு, ஒரு தாயாக என் மகனின் உணர்வுகளை உ ணர்ந்ததால் தான் இப்படி ஒரு பதிவு. இட ஒதுக்கீடால் விளைந்த நன்மைகளை நாம் மறக்கவில்லை. அது மிகவும் அவசியமானதே. இந்த இடுகை ஒரு தனிப்பட்ட அனுபவம்தானே அல்லாமல் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது அல்ல .
      உங்கள் கருத்தையும் ஏற்கின்றோம் நண்பரே! இனி நீக்குதல் என்பது இருக்காது.

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  37. *****நாம் இன்றும் அதனை பார்ப்பனர்களை நோக்கி மட்டுமே நீட்டிக்கொண்டிருக்கிறோமே தவிர, பிற்படுத்தப்பட்ட ஜாதி எனப்படுபவர்கள் கூட அவர்களுக்கும் கீழான ஒரு ஜாதியை ஏற்படுத்தி வைத்திருப்பதை சில பல வேலைகளில் மறந்து விடுகிறோம் !****

    சாம்:

    "பெருமாள் முருகன்" சாதீய அடையாளங்களை தவிர்த்து இருக்கணும்னு ஏன் சொல்லுறோம்?

    அவர் பார்ப்பனரா? இல்லையே?

    அவரையும் இஷ்டத்துக்கு விமர்சிக்கத்தான் செய்தோம். இல்லையா??

    அப்புறம் எப்படி பார்ப்பனரை மட்டுமே எதற்கெடுத்தாலும் கையைக் காட்டுறோம்னு நீங்கள் சொல்ல முடியும்?

    பெருமாள் முருகன் செய்தால் அதை இலக்கியச்சேவைனு சொல்றீங்க.. சாதீயச் அறுசுவையையும் ரசிக்கக் கத்துக்கணும்னு அதுதான் உண்மையான இலக்கியம்னு சொல்லாமல் சொல்லுறீங்க.

    பார்ப்பீனியம்னு சொல்லவேண்டிய இடத்தில் ஒருவர் சொன்னால் உடனே பார்ப்பனைரையே இகழ்றோம்னு சொல்றீங்க. அப்போ எப்படித்தான் விவாதிப்பது??

    ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க! சாதிச் சான்றிதழை அகற்றணும்னு சொல்வதெல்லாம் வெட்டிப்பேச்சு!

    ஏன்னு கேளுங்க!

    ஏன் என்றால் அதை சராசரி தாழ்த்தப்பாட்டவர்களும், மிகவும் பிறபடுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களும் செய்யப்போவதில்லை!

    அது எப்படினா..

    பார்ப்பனர்களை பூனூலை கழட்டி எறிங்கனு சொல்வது போல! அதையும் சராசரி பார்ப்பனர்கள் செய்யப் போவதில்லை! நீங்க சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

    ரெண்டும் வேற வேறனு ஆரம்பிக்காதீங்க. அவரவர் வீக்னெஸ் அவரவருக்கு விளங்குவதில்லை என்பதற்காக இவ்வாதம்..

    இதில் நீங்களும் நானும் ரெண்டையும் செய்யத் தயாராக இருக்கலாம். ஆனால் சராசரி தாழ்த்தப்பட்டவர்களும், சராசரி பார்ப்பனர்களும் அதை செய்யப் போவதில்லை என்கிற உண்மையை இன்னும் நீங்க உணரவில்லையா???

    ஆக, ரெண்டுமே நடக்கப் போவதில்லை! ஏன் செய்தால் என்ன? என்கிற கேள்விகூட இருவருக்குமே பிடிக்காது. நீங்க சொல்வதைக் கேக்கப் போவதில்லை! அப்புறம் ஏன் அதை திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு??

    சாதியைச் சொல்லி பள்ளியிலிருந்தும், கோயில்ல இருந்தும் தூக்கி எறியப்பட்டவர்கள், அதே சாதியைச் சொல்லித்தான் இன்று பள்ளிக்கூடம் நுழைய முடியும். இல்லையா? அவங்க மூதாதையார் பட்ட அவலங்களை எல்லாம் கனவுபோல் மறந்துட்டு இன்னைக்கு நடக்க வேண்டியதைப் பாரு என்பது எப்படி சரியாகும்?

    Geniuses born in every community. இப்போ சொல்லுங்க, இன்று கீதா அவர்கள் மகன் அழும்போது உங்களுக்கு புரியுது, இதேபோல் பழங்காலத்தில் எத்தனை தாழ்த்தப்பட்ட ஜீனியஸ்கள் பள்ளி செல்ல முடியாமல் அழுது இருப்பார்கள்?? அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பிறந்த ஜாதியை சொல்லி அவர்களைப் பள்ளிக்குள் அனுப்பாமல் எப்படியெல்லாம் வீணடிக்கப் பட்டிருக்கு? உங்களால் அப்படி கொஞ்சம் "முன்னாளில்" சென்று அவர்கள் அழுத அழுகையைப் பார்க்க முடியவில்லை என்றால் உங்களுடைய இயலாமை. அவ்ளோதான். தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தவர்கள் பள்ளிக்குள் செல்லமுடியாமல் தன் தலை எழுத்துனு கண்ணீர்விட்டு அழுதவர்கள் நிச்சயம் வாழ்ந்து செத்துத்தான் இருப்பார்கள். புரிந்து கொள்ளுங்கள்.

    செத்தவர்களைப் பத்தி என்ன பேச்சுனு சொல்லாதீங்க. நீங்களும் நானும்கூட நாளைக்கு "செத்தவர்கள்" தாம்! அதனால் நாம் முக்கியமானவர்கள் அல்ல என்று ஏற்றுக் கொள்வோமா??

    கறுப்பர்களை அடிமையாக வைத்து தன்னை உயர்த்தீக்கொண்ட வெள்ளையர்கள் இன்றும் அவர்களை முன்னேறவிடமாட்டேன் என்கிறார்கள். அவர்கள் பேசும் நியாயம் என்னனா.. ஒரு காலத்தில் உங்களை அடிமையாக வைத்திருந்தோம்.. அதனால் என்ன? இப்போ இல்லையே? என்கிறார்கள். அடிமைகளாக வாழ்ந்துவந்த கறுப்பர்களின் வாழ்க்கைத்தரம் "சொர்க்க பூமியான" அமெரிக்காவில் இன்றும் எப்படி இருக்குனு வந்து பாருங்க!

    நம்ம பிரச்சினைதான் நமக்குப் புரியுது. நம்மை பிறர் நிலையில் நிறுத்தி எத்தனைபேர் பார்க்கிறார்கள்? அப்படி பார்ப்பதில்லை! அதனால்தான் பிறரின் வலி நமக்குப் புரிவதும் இல்லை. அது புரியாமலே வாழ்ந்து முடித்து செத்துக் கொண்டு இருக்கிறோம்..

    பிகுறிப்பு: சாம்!! இது உங்களுக்கான லெக்ச்சர் இல்லை. பொதுவாக எல்லோரையும் "சாம்" ஆக வைத்து எழுதியதுதான்..அதனால் உங்களுக்கு கொடுக்கப் பட்ட ஒரு லெக்ச்சராக எடுத்துக்காதீங்க.

    பதிலளிநீக்கு
  38. 100 சதவீத உண்மை ! ஏற்றத்தாழ்வு / அரசு உதவி என்பது வருமானத்தின் அளவு கோள் முலமாகவே இருத்தல் வேண்டும் !

    சாதி அன்றும், இன்றும், பொதுவாகத் துன்பத்தை மட்டுமே தருகின்றது. அன்று திறமையுள்ளவர்கள் பலரையும் பிற்பட்டவர்கள் என்று முத்திரை குத்தி அவர்களைத் தள்ளி வைத்தது. இன்றும், தொழில் நுட்ப வளர்ச்சிகள் விண்ணை எட்டினாலும், அதே சாதி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பல திறமை மிக்கவர்களைத் தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சாதி நம் இந்தியாவில் மட்டும்தான் உயிர் வாழ்ந்து பலரது உயிரையும் எடுத்துக் கொண்டிருக்கின்றது. இது எங்கள் அனுபவம் மட்டுமல்ல. பலருக்கும். திறமைக்கு மதிப்பில்லாத காரணத்தினாலும், சாதியினாலும் தான் பல மாணவர்கள் வெளிநாடு செல்ல முற்படுவது. என்று தணியும் இந்தச் சாதிக் கொடுமை?

    பதிலளிநீக்கு
  39. எதற்குமே நீங்கள் இன்னும் பதிலிடாமலே இத்தனை பின்னூட்டங்கள் (இதுவரை 47!) வந்துள்ளன பாருங்கள்.. இந்தப் பதிவு, வலைப்பக்க வரலாற்றில், சமூகநீதிக் கருத்துகளுக்கான ஒரு முக்கியமான ஆவணமாகத் திகழும் என்பது என் கருத்து. நீங்கள் சாதிய ஆதரவாளர் அல்ல என்றாலும், இன்றைய நிலையில் சாதியத்தால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்பது நெஞ்சைத் தொடும் உண்மை. (அருண்ஷோரி, மற்றும் குருமூர்த்தி வகையறாக்களின் வாதம் வேறு நோக்கம் கொண்டது) என்பதாலேயே இந்தப் பதிவு தனது உண்மைத் தன்மையால் முக்கியத்துவம் பெறுகிறது. இதனாலேயே இதை நீக்கவேண்டாம் என்று வேண்டினேன். மாற்றுக் கருத்துகள் வரும், வரவேண்டும், வரட்டும். சரியான புரிதலுக்கு முதல் படியே குழப்பம்தான். இது விரைவில் தீரும். மௌனமாக இருப்பதுதான் ஆபத்தானது மட்டுமல்ல, தீர்வுக்கு எதிரானது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! இதோ கொடுத்திருக்கின்றோம் ஐயா பின்னூட்டக் கருத்துக்கள்!

      நீக்கு
  40. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பதிவர்கள் இருவருக்கும் நேச வணக்கம்!

    இந்தப் பதிவை மற்ற யாருக்கும் முன் முதலில் பார்த்தவன் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். காரணம், நானும் இந்தப் பதிவு வெளியிடப்பட்ட அதே நாளில் சில மணி நேர இடைவெளியில்தான் காலையில் என் பதிவை வெளியிட்டேன். என் பதிவை வெளியிட்டுவிட்டு மீண்டும் பிளாகர் முகப்புக்கு வந்தபொழுது, இங்கே சாதி பற்றி சற்று முன் அடுத்த பதிவு வெளியிடப்பட்டிருப்பது கண்டு ஆவலுடன் ஓடி வந்தேன். ஆனால், பதிவின் முதல் பத்தியே தவறான தகவலுடன் இருந்தது கண்டு, அதற்கடுத்தும் சில தவறான கருத்துக்கள் கண்டு மிகவும் மன உளைச்சல் அடைந்தேன். மேற்கொண்டு படித்து அப்பொழுதே கருத்திட்டால் அந்தச் சீற்றத்தில் சூடாக ஏதும் எழுதிவிடுவேனோ என்பதற்காக, அப்பொழுது வெளியேறிவிட்டு, பிற்பகல் வந்து பொறுமையாகப் படித்து, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துத்தான் நான் அந்தக் கருத்துக்களை எழுதினேன்.

    தேர்ந்தெடுத்து எழுதியதே இப்படியா என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தெரிந்தவர்களே, தமிழுக்காகச் சேவை செய்பவர்களே இப்படி எழுதுகிறார்களே என்கிற ஆறா வருத்தம். இன்னொன்று, நான் கருத்திடும் வரை யாருமே அதைக் கண்டிக்காமல் இருந்தது. முத்து நிலவன் ஐயா எனக்கு முன்பே கருத்திட்டிருந்தாலும், நான் கருத்திட வரும்பொழுது அது வெளியிடப்படவில்லை. ஜோதிஜி அவர்களும் மென்மையாகத்தான் இதை அணுகியிருந்தார். எனவே, இஃது எந்த அளவுக்குத் தவறான கருத்து என்பதை அழுத்தமாகப் புரிய வைப்பதற்காகவும், இதற்குச் சார்பாகவே எல்லோரும் கருத்திடுவதைக் கண்டு தங்கள் கருத்தில் பதிவர்கள் மேலும் உறுதிகொண்டு விடக்கூடாது என்பதற்காகவும்தான் அப்படிக் கொஞ்சம் காரமான சொல்லாடல்களைப் பயன்படுத்தியிருந்தேனே தவிர, பெரியவர்களும் நண்பர்களுமான உங்களைப் புண்படுத்தும் நோக்கில் இல்லை. என்னுடைய கருத்துக்கள் உங்கள் மனதை மிக மிக மிக வேதனைக்குள்ளாக்கியது கண்டு வருந்துகிறேன்! எதை எழுதினாலும், எப்படி எழுதினாலும் மிகவும் அன்பான அடக்கமான சொற்களையே ஆளும் பக்குவம் மிக்க நீங்கள் சிறியேனின் கருத்தில் உள்ள அந்தக் காரத்தைக் கொண்டு அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வீர்கள்; அதைத் தவறாக நினைக்காமல் கருத்தின் சாரத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்பித்தான் அப்படி எழுதினேன். நீங்கள் இப்படி நினைத்துக் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. கைகூப்பி வணங்குகிறேன், அதற்காக என்னை மன்னியுங்கள்!

    பதிவையே நீக்கும் அளவுக்கு நீங்கள் போவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் இட்ட கருத்துக்களுக்கு நீங்கள் பதிலளிப்பீர்கள், அப்பொழுது மேலும் சில கருத்துக்களைச் சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால், அவற்றுள் சிலவற்றை முத்து நிலவன் ஐயா அவர்களும் வருண் அவர்களும் என்னைவிடச் சிறப்பாகவும் மென்மையாகவும் கூறிவிட்டார்கள். நானும் இப்படி மென்மையான வார்த்தைகளால் கூறியிருக்கலாம்; அறிவு போதவில்லை! எனக்கு இது பற்றி இன்னும் சில கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால், நான் அவற்றை இனி கூறப் போவதில்லை. அதே நேரம், கூறிய கருத்துக்களிலிருந்து நான் பின்வாங்கப் போவதுமில்லை. நன்றி! வணக்கம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! மேலே எல்லாவற்றிற்கும் சேர்த்து கருத்து சொல்லி இருக்கின்றேன்.



      நீக்கியது உங்கள் மீதுள்ள தனிப்பட்ட கருத்தினால் இல்லை. என்ன நண்பரே உங்களுக்கு நினைவிருக்கின்றதா? தாங்கள்தான் எங்கள் இடுகையில் இருந்த எழுத்துப் பிழைகளை முதன் முதலாகச் சுட்டிக் காட்டினீர்கள். தவறாக எடுத்துக் கொள்ளவில்லை! மிகவும் மகிழ்ந்தோம். ஒரு நல்ல நண்பர் கிடைத்தார். இப்போதும் அதே! அந்த நல்ல நண்பர் இதைத் தவறாக நினைத்து விட்டாரே என்றும் , ஒரு வேளை சாதி விரும்பாத எங்கள் தளம் ஒரு விவாதத்திற்கு வழிவகுத்துவிட்டதோ என்றும் தான் முதலில் நீக்கம்.



      மற்றபடி தங்கள் கருத்திற்காக இல்லை. நானும் என் மகனும் சாதி, சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவர்கள், இறையுணர்வு உள்ளவர்கள் என்றாலும். கமலைப் போல் சாதி வேண்டாம் என்று தான் தன் நூலை எடுத்தவன். அல்லாமல் .கல்வியில் ஏற்பட்ட விரக்தியால் அல்ல.



      தங்களிடமும், தங்களின் கருத்திலும் எந்த வருத்தமும் இல்லை நண்பரே !

      நீக்கு
    2. //என்ன நண்பரே உங்களுக்கு நினைவிருக்கின்றதா? தாங்கள்தான் எங்கள் இடுகையில் இருந்த எழுத்துப் பிழைகளை முதன் முதலாகச் சுட்டிக் காட்டினீர்கள். தவறாக எடுத்துக் கொள்ளவில்லை! மிகவும் மகிழ்ந்தோம். ஒரு நல்ல நண்பர் கிடைத்தார்// - அதனால்தான் நானும் அடுத்த கட்டத்துக்குச் சென்றேன். முதலில், எழுத்துப்பிழை சுட்டியவன், இப்பொழுது பொருட்பிழை சுட்ட முனைந்தேன். :-)

      //ஒரு வேளை சாதி விரும்பாத எங்கள் தளம் ஒரு விவாதத்திற்கு வழிவகுத்துவிட்டதோ என்றும் தான் முதலில் நீக்கம்// - விவாதங்கள் எழுவது நல்லதுதானே! ஒருவேளை நீங்கள் இதைச் 'சர்ச்சை' என்கிற பொருளில் ஆள்கிறீர்களோ? சரி சரி!

      //நாங்களும் தங்களது கருத்துக்களை, விவாதங்களை எங்களது கருத்துக்களைச் செம்மைப்படுத்த இதற்கு முன்னும் உபயோகித்தது போல் இனியும் உபயோகிப்போம். நீங்கள் எத்தனையோ முறை ஒத்த கருத்துக்களையும், சிந்தனைகளையும், பாராட்டி எழுதியதை மறக்க முடியாதே. மாறுபட்ட கருத்துக்கள் ஒரு போதும் நம் நட்பையோ, அன்பையோ பாதிக்காது. நண்பரே! தங்களிடமும், தங்களின் கருத்திலும் எந்த வருத்தமும் இல்லை நண்பரே!// -
      தங்கள் பெருந்தன்மைக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள் அம்மணி!

      நீக்கு
    3. ஆம்! நண்பரே! //விவாதங்கள் எழுவது நல்லதுதானே! ஒருவேளை நீங்கள் இதைச் 'சர்ச்சை' என்கிற பொருளில் ஆள்கிறீர்களோ? சரி சரி! // சர்ச்சை என்ற அர்த்தத்தில் தெரியாமல் விவாதம் என்று எழுதிவிட்டேன். விவாதத்திலும் நல்ல விவ்வதாம், வேண்டாத விவாதம் என்று இருக்கின்றதே! ஹஹ்ஹ...

      மிக்க நன்றி நண்பரே! நீங்கள் இனி அடுத்த கட்டத்திற்கும் செல்லலாம். நீக்கம் எதுவும் இருக்காது.....சரியா...

      நீக்கு