வியாழன், 27 பிப்ரவரி, 2014

வாழ நினைத்தால் வாழலாம்.........வழியா இல்லை பூமியில்


நானும், எனது நண்பர் பிஜுவும், மம்மூட்டியின் "இம்மானுவல்" எனும் படத்தை டி.வியில் பார்த்துக் கொண்டிருந்த போது அருணும், சரவணவினாயக்கும் பதட்டத்துடன் "போலீஸ்" "போலீஸ்" என்று சொல்லியபடி வரவேற்பறைக்குள் ஓடி வந்தார்கள்.  புட்டுக்க்கான காம்பினேஷன் பழம் வாங்க கடைக்குப் போனவர்கள். 15 வயது அண்ணனும், 13 வயது தம்பியும் அவர்களது சைக்கிளை எடுக்காமல், என் பைக்கை எடுத்து ஓட்டிக்கொண்டுப் போயிருந்திருக்கிறார்கள். 




 இப்படி, நான் யாருடனாவது பேசிக்கொண்டோ, டி.வி. பார்த்துக் கொண்டோ இருக்கும் போது, என் கவனம் அவர்கள் மேல் அதிகம் பதியாது என்பது உறுதியானால், எனக்குத் தெரியாமல், 1/2 கி.மீ. தொலைவிலுள்ள கடைக்கு பைக் எடுத்துக் கொண்டு போய்விடுவது வழக்கம். (வீட்டின் முகப்பிலிருந்து (போர்ச்), வாயிற் கதவு வரை பைக்கைத் தள்ளிக் கொண்டு போய்)



பள்ளி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டி விபத்துக்கள் இடையிடையெ ஏற்படுவதால், காவல் துறையினர் எப்போதும் அப்பகுதியைக் கண்காணிப்பது உண்டு.  உரிமம் இல்லாமல் பைக் ஓட்டும் மாணவர்கள் பிடிபட்டால், அவர்களது பெற்றோர்களுக்குக், குறிப்பாக அப்பாவுக்கு, அவருடைய உருவம், தகுதி, வயதுக் கேற்ப திட்டும், அபராதமும் உண்டு.  எனவே, காவலர்களை எதிர்பார்த்து பரிதாபகரமாக மாறிப் போன முகத்தை வைத்துக் கொண்டு காவலர்களின் திட்டுக்களை வாங்கத் தயாராகி சிட் அவுட்டைத் தாண்டி வாயில் முகப்பில் இறங்கி நடந்தேன்.




வாயிற் கதவிற்கு வெளியே, சாலையில் ஒரு காவலர் ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது.  இரண்டு போலீஸார் நிற்க, இருவர் - ஒரு பெண் காவலதிகாரி முன்னே வர அவர் பின்னே ஒரு ஆண் காவலரும்  வாயிற் கதவைத் தாண்டி உள்ளெ வந்து கொண்டிருந்தனர்.  அருண், கேட்டுக்கும், வீட்டின் முகப்புக்கும் இடையே நிறுத்தியிருந்த பைக்குக்கு அருகே வந்திருந்தார்கள்.

"ஹெல்மெட்டும், லைசன்சும் இல்லாம, 2 பேரு பைக்குல வந்தானுங்களே, எங்க அவனுங்க?" என்று சிரித்துக் கொண்டே நடந்து வரும் அந்தப் பெண் காவலர் யார்?.....சுதாவா?.....


"ஆம், சுதாவேதான்"! கோபால் அண்ணனின் (என் பெரியப்பா மகன்) மனைவி விமலாவின் தங்கை சுதா.  எர்ணாகுளம், ஆலுவாவில் சர்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தவர்.  

நிலம்பூருக்கு மாற்றலாகி 2 நாட்கள்தான் ஆகிறதாம். அமைச்சரவையில் வரும் மாற்றங்கள் இது போன்ற இடமாற்றங்களைக் காவல் துறையில் ஏற்படுத்துமாம்.  உள்துறை, திருவஞ்சியூர் ராதாகிருஷ்ணன் கையிலிருந்து, ரமேஷ் சென்னித்தலையின் கையில் வந்ததுதான் காரணமாம்.  சுதாவின் குடும்பம் எர்ணாகுளத்தில்.  மகனுக்குத் துபாயில் வேலை.  மகள் எர்ணாகுளத்தில் படித்துக் கொண்டிருப்பதால், எர்ணாகுளம் ஜில்லாவில் எங்கேனும் மாற்றலாகிப் போக முயல்வதாகவும், விரைவில் போக வாய்ப்புண்டு என்றும் சொன்னார். 




 கோபால் அண்ணனின் ஆரோக்கிய நிலை பற்றியும், குமுளி அருகே உள்ள உறவினர் பற்றியும் பேசியபின், பேச்சு நிலம்பூரில் சில நாட்களுக்கு முன் அமைச்சரான திரு ஆரியாடன் முகம்மதுவின், உதவியாளரான கே.எம்.பிஜு என்பவர், கட்சி அலுவலகத்தில் பணி புரிந்த ஸ்வீப்பர் சிறக்கல் ராதா என்பவரைக் கொன்று சாக்கில் கட்டிக் குளத்தில் இட்ட சம்பவத்திற்குத் திரும்பியது.



கொலைக்குப் பின் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை அப்புறப்படுத்த கொலையாளிகளுக்கு, மோஹன்லால் நடித்த "த்ருஷ்யம்" என்னும் படம் உதவியாக இருந்ததாம்.  





கொடுமையைப் பாருங்கள்!  நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினி சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயில் கவ்வி, இளைஞர்களை ஒரு காலத்தில் ஈர்த்து சிகரெட் பிடிக்கக் காரணாமானது போல், மோஹன்லால் கொலைகாரர்கள் உருவாகக் காரணமாகிறாராம், எப்படிப் போகிறது கதை! 

மிகவும் சாமர்த்தியமாகக் கொல்லப்பட்ட உடலை மறைத்து, கொலைக் குற்றத்திலிருந்து தன் மகளைக் காப்பாற்றுவதுதான் படத்தின் கதை. (அருமையான படம்!. மோஹன்லாலின் அற்புதமான நடிப்பு!  அழகாகச் சொல்லப்பட்டத் திரைக்கதை! எடிட்டிங்க்!-இதைச் சொல்லியே ஆக வேண்டும்...சொல்லாவிட்டால் என் தலை வெடித்துவிடும் என்பதால் சொல்கிறேன்!  மன்னிக்கவும்!)

இந்த நிலம்பூர் கொலை காரணமாக, தான் நிலம்பூரில் எப்போதும் இருக்க வேண்டிய நிர்பந்தம் என்றார். அரசியல் தலைவர்களும், மேலதிகாரிகளும், எப்போதும் நேரில் வரவும், தொலைபேசியில் அழைக்கவும் வாய்ப்புண்டாம். இதை, அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே, இடையிடையே தொலைபேசி அழைப்பு வந்து கொண்டிருந்தது. 1/2 மணி நேரம் இப்படிக் கதைகளைப் பேசிய பின், சுதா, அருண் மற்றும் வினாயக்கிடம், 

"ரெண்டு பேரும் முதல்ல க்ரவுண்டுல ஓட்டிப் பழகுங்க, போதும். லைசன்ஸ் எடுத்தப்புறம்தான் ரோட்ல ஓட்டணும்.  அப்புறம் ஹெல்மெட் போட்டுட்டுத்தான் ஓட்டணும்...புரிஞ்சுச்சா"  என்று அறிவுரை சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

இதற்கிடையில், என்னுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த நண்பர் பிஜு எப்போதோ கிளம்பிச் சென்றிருந்திருக்கிறார்.  எனக்கும் ஆர்வம் போய்விட்டதால்,  என் மனத்திரையில்  27  ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் ஃப்ளஷ்பேக்காக ஓடத் தொடங்கியது (வெறும் வாயை மெல்லும் எனக்கு அவல் கிடைத்தால் எப்படி இருக்கும்!)

1986-ல் நான் "மாதவன் மாமாவின்"(இடுகை-) மகன் "இஸபெல்லா விஜயன்" எர்ணாகுளத்தில் நிறுவிய நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த காலம்.  ஒரு நாள் மாலை நான் இந்து அக்காவின் வீட்டை அடைந்த போது, அங்கே கோபால் அண்ணன் சுதாவுடன் வந்திருந்தார்.  அப்போது சுதாவின் திருமணம் நடந்து 8 மாதங்களே ஆகியிருந்தது! கணவன் குடியும், கூட்டாளிகளுடன் கூத்தும், சீட்டாட்டமுமாம்.  இடையிடையே கோபம் வரும் போதும், சந்தோஷம் கூடும் போதும் சுதாவுக்கு, அடி, உதை உறுதியாம். சுதா சொன்னதிலிருந்து, பெண்களை வேதனைப் படுத்தி இன்பம் காணும் ஒரு ஜென்மம் போலத் தெரிந்தது!

"எனக்கு அவரப் பாத்தாலே பயமாருக்குது", என்று சுதா சொன்னதை முதலில் பொருட்படுத்தாத சுதாவின் வீட்டார், விரைவிலேயே சுதாவின் துயர வாழ்க்கையை நேரில் கண்டு, புரிந்து கொண்டு, சுதாவைத் தங்கள் வீட்டிற்கு அழத்துக் கொண்டு வந்து விட்டார்களாம்.  விவாகரத்து வாங்கியபின், சுதாவை M.A.  படிக்க வைக்க முடிவும் செய்திருந்தார்களாம். வீட்டுத் தொலைபேசிக்கு அந்த குடிகாரக் கணவனின் மிரட்டல்கள் இடையிடையே வந்து சுதாவை நிம்மதி இழக்கச் செய்ததாம்.  அதனால் சுதா பயந்து எங்கும் வெளியில் தனியே போவதைத் தவிர்த்திருந்திருக்கிறார்.  

இடையே ஒரு நாள் தன் தோழியின் குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றுத் திரும்பும் போது, திரைப்படத்தில் காட்டப்படும் சம்பவம் போல், ஒரு ஜீப், நடந்து சென்று கொண்டிருந்த சுதா அருகே நிற்க, அதிலிருந்து இறங்கிய கயவனானக் கணவன் சுதாவைத் தூக்கி ஜீப்பில் போட, சுதாவின் கூச்சல் கேட்டு, நடந்து சென்ற சிலர் உதவிக்கு வரும் முன் ஜீப் பறந்திருக்கிறது.  எப்படியோ இடையே ஒரு பஸ் எதிரே வர, ஜீப்பின் வேகம் குறைய, சுதா கூச்சலிட்டுக் கொண்டே ஜீப்பிலிருந்து வெளியே குதித்து ஓட, பேருந்தும், எதிரே வந்த வாகனங்களும் நின்றிருந்திருக்கின்றன. இரையைத் தன் பிடியிலிருந்துத் தவற விட்ட வேட்டை மிருகத்தைப் போல் ஆன கணவன் திகைத்துச் சிறிது நேரம் நின்று, பின்னர் வேறு வழியின்றி அங்கிருந்து போக, மரணத்தின் பிடியிலிருந்து தப்பி உயிர் பிழைத்த மானைப் போல் சுதா ஓடி அருகில் நின்றிருந்த பேருந்தில் ஏறி அந்த மனித மிருகத்திடமிருந்து தப்பியிருந்திருக்கிறார். 

இந்தச் சம்பவம் சுதாவையும், அவர் குடும்பதினரையும் உலுக்கிவிட்டிருந்திருக்கிறது. இனி எப்படி அங்கு நிம்மதியாக வாழ்வது என்ற பயம் அவர்களுக்கு வந்திருக்கிறது. போலீசார் கயவனானக் கணவனை எச்சரித்திருந்தாலும், சுதாவைச் சற்றுத் தொலை தூர இடத்தில் எங்கேனும் சில நாட்கள் தங்க வைக்க முடிவு செய்திருந்திருக்கிறார்கள். அப்படித்தான், எர்ணாகுளத்தில் உள்ள திரு. விஜயனின் நிறுவனத்தில் வேலையும், நிறுவனத்தின் அருகிலிருந்த ஒரு பெண்கள் விடுதியில் தங்கவும் ஏற்பாடு செய்வதற்காக கோபால் அண்ணனும், சுதாவும், நான் அன்று இந்து அக்காவின் வீட்டிற்குச்  சென்றிருந்த சமயம், அங்கு வந்திருந்தார்கள். 

சுதாவின் பிரச்சினைகளை அறிந்த விஜயன், எர்ணாகுளத்திலுள்ளத் தன் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சுதாவுக்கு வேலை கொடுக்க, சுதாவும் அதன் அடுத்திருந்த விடுதியில் தங்கிப் பணிபுரியத் தொடங்கினார்.  ஆனால், 6 மாதங்களுக்குப் பின் விஜயன் தன் நிறுவனத்தின் நஷ்டங்களைக் குறைக்க பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  அவ்வேளையில் சுதாவுக்கு மிகவும் ஆறுதலாக இருந்த வேலை அவரது கைவிட்டுப் போனது.  அதை அறிந்து அதிர்ந்த நான், அன்று மாலை சுதாவைக் காண அவரது விடுதிக்குப் போன போது, கதறி அழுத சுதாவின் முகம் என் மனத்திரையில் இப்போதும் அழியாமல் நிலைத்திருக்கிறது!

மறுநாளே, கோபால் அண்ணன் சுதாவை குமுளிக்குக் கூட்டிப் போனார்.  இதற்கிடையில், சுதாவின் நிலைமையைப் புரிந்து கொண்டு, சுதாவுக்கு மறுவாழ்வு கொடுக்கத் தயாராக, தயாநந்தன் என்னும் ஒரு இளைஞர் முன்வந்தார்.  மறுமணச் சடங்குகள் நடத்த குமுளியை விட எர்ணாகுளமே ஏற்றது என்பதால் (கயவன் கணவன் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுத்த வாய்ப்புண்டு என்பதால்) சுதாவின் மறுமணம் வைக்கம் அருகே உள்ள ஒரு கோயிலில் நடத்தப்பட்டது.  இருவரும் இந்து அக்காவின் வீட்டருகே ஒரு வாடகை வீட்டில் தங்கி, தங்கள் புது வாழ்வைத் தொடங்கினார்கள்.  வாழ்வில்  நேர்ந்த துன்பங்களும், துயரங்களும், சுதாவிற்கு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.  தனக்குத் தன் சொந்தக் காலில் நிற்க ஒரு வேலை அவசியம் என்று புரிந்து கொண்டு, அதற்கானத் தீவிர முயற்சியை மேற் கொண்டார். 



கேரள அரசு காவல்துறையில் மகளிர் காவல்துறைப் பிரிவு ஆரம்பிக்க தீர்மானித்திருந்த நேரம் அது.  "Where There is a will there is a Way".  சாதிக்க வேண்டும் என்ற மனம் இருந்தால், அதற்கான வழி உண்டு என்பது போல், சுதாவின் முயற்சி வீண் போகவில்லை.  பெண் கவலராகப் பதவியேற்று, அவர் விரைவிலேயே (முதல் Batch ஆனதாலும், சுதா ஒரு க்ராஜுவேட்  என்பதாலும்) பதவி உயர்வு கிடைக்கப் பெற்று, சர்கிள் இன்ஸ்பெக்டராகப் பணி புரிகிறார்.  48 வயதாகும் அவருக்கு இனி 8 வருட சேவை பாக்கி உள்ளது.  எப்படியும் ஒரு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதால் DSP ஆகி ஓய்வு பெறக் காத்திருக்கிறார் சுதா.

அவரது மூத்த மகன் துபாயில் மென்பொருள் பொறியாளராகப் பணி புரிகின்றார்.  இளைய மகள் கல்லூரி மாணவி.    கணவன் தயாநந்தன் ஒரு ஹார்ட்வேர் கடை நடத்துகிறார்.  மாஜி கணவன் குமுளிக்குக் "குட்பை" சொல்லிவிட்டு, கர்நாடகாவில், உடுப்பி அருகே உள்ள எங்கோ ஓரிடத்திற்குப் போய்விட்டதாகக் கேள்வி.  (போலீஸ் அதிகாரியான மாஜி மனைவி தன்னை அடிக்கவும், உதைக்கவும் வாய்ப்புண்டு என்ற பயத்தாலோ என்னவோ!).

சுதாவை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது! பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.  துன்பம் வரும் வேளையில் தளர்ந்து விடக் கூடாது.  தன் எதிர்காலத்தைத் தகர்க்க எவரையும் அனுமதிக்கவும் கூடாது. 

வாழ்க்கை என்றால் இப்படித்தான்.  கல்லும், முள்ளும் நிறைந்த காட்டுப் பாதை போல் சிலசமயங்களில் மாறிவிடும். எதிர்பாராமல் ஏற்படும் துன்பங்களையும், துயரங்களையும் கண்டு துவளாமல், சிந்தித்து செயல்பட்டு எதிர்நீச்சல் போட்டுப் போராடினால் சுதா வாழ்வது போல் சுகமான வாழ்க்கை வாழலாம்.

வாழ நினைத்தால் வாழலாம்.......வழிகளா இல்லை பூமியில்?!!!?!



26 கருத்துகள்:

  1. சுதாவின் வீட்டார் உடனே வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தும் சரி... அதே சமயம் கணவன் அயோக்கியன் என்று தெரிந்தவுடன், அதைப் பற்றி நினைத்து நொந்து வாழ்க்கையை வீணடிக்காமல், DSP ஆகும் அளவிற்கு எதிர்க்காலத்தை நிர்ணயம் செய்து கொண்டது சிறப்பு...

    தயாநந்தன் அவர்களும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்...

    இங்கும் இது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது வேறு விதத்தில்...!

    பதிலளிநீக்கு
  2. காலை நேரத்தில் வாசித்த எனக்கு மிகவும் உற்சாகத்தை தந்த பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மனதில் உறுதியோடு போராடி வென்ற சுதா அவர்கள் போற்றப்பட வேண்டியவர்.
    வாழ்த்துவோம்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. போராட்டம்தான் வாழ்க்கையே அதை எப்படி கையாள்வது என்று தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் வெற்றிதான்

    பதிலளிநீக்கு
  5. திருமதி சுதாவின் வெற்றி மற்ற பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் ,அவருக்கு என் பாராட்டை சொல்லுங்கள் !
    த ம 5

    பதிலளிநீக்கு
  6. நெகிழ்ச்சியான அதே சமயம் பெருமை கொள்ளத்தக்கதாக இருந்தது சுதா அவர்களின் வாழ்க்கை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான்! மிக்க நன்றி ஆவி! தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  7. ஒரு முக்கியமான பிரச்சினையில் நான் இருக்கும் இந்த நிமிடத்தில் உங்கள் கட்டுரை எனக்கு மிகவும் தெளிவினை தந்தது. வாழ்க்கையின் சோதனைகளில் இருந்து மீண்டு வந்து வெற்றிக் கொடி நாட்டிய சுதாவுக்கு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்! தங்கள் பிரச்சினைக்கு எங்கள் இந்தப் பதிவு தெளிவு தந்தது என்று தாங்கள் கூறியிருப்பது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது! எங்கள் இடுகைகள் ஏதோ நல்லதும் செய்கின்றனவே! மிக்க நன்றி! சார்!

      நீக்கு
  8. சினிமாவில் வருவது போல், "அப்போ சுதாவுடைய மாஜி கணவன் பழிவாங்கப் படவில்லையா?" என்ற ஏமாற்றத்துடன் முடிந்த மாதிரி இருந்தாலும்... நிஜ வாழ்க்கையில் அது போன்ற ஈனப் பிறவிகளுக்கு பயத்தை மட்டும் உண்டு பண்ணிவிட்டு விலகியிருத்தலே நலம்...
    சுதாவிற்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. ஆம் உண்மைதான் DD! மிக்க நன்றி! தங்கள் அருமையான கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  10. ஜோதிஜி திருப்பூர்

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது தங்கள் வருகைக்கும், வாசித்துக் கருத்து தெரிவித்ததற்கும்! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  11. ஆச்ரிய நண்பருக்கு மிக்க நன்றி! ஆம்! தங்கள் கருத்து சரியே! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. சரிதான்! மதுரைத் தமிழனே! அதைக் காய்யாளத் தெரியாமல்தான் பலர் வாழ்வில் சறுக்கிவிடுகின்றனர்! ஆனால் சுதா வெற்றி அடைந்தார்!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  13. ஆம் ஜி! கண்டிப்பாகச் சொல்லிவிட்டால் போச்சு! ஜி!

    மிக்க நன்றி! ஜி!

    பதிலளிநீக்கு
  14. வாங்க மலர், அதுக்கென்ன.....சினிமாவே எடுத்துட்டாப் போச்சு! ஆமாங்க...நிஜ வாழ்வும் சினிமாவும் சற்று வேறுதான்!...நாமெல்லாம் ஹீரோவாக முடியுமா சொல்லுங்க!...

    பதிலளிநீக்கு
  15. +5
    சினிமாவைப் பார்த்து கெட்டு போறார்கள் என்று சொல்பவர்களுக்கு, நான் என்றும் சொல்வது, "எம்ஜீயார் படங்களைப் பார்த்து, நீயும் ரிக்க்ஷாகாரனுக்கு மழைக்கோட்டு வாங்கிக்கொடு" என்பேன்.

    பதிலளிநீக்கு
  16. மிகவும் நல்ல கருத்து! நம்பள்கி! மிகச் சரியான கருத்தும் கூட!

    சினிமாவைப் பார்த்தா ஆதிமனிதன் வாழ்க்கையைத் தொடங்கினான்? இதோ நாமெல்லாம் எப்படி வந்தோமாம்?!!!! நம்பள்கி!?!

    நன்றி நம்பள்கி!

    பதிலளிநீக்கு
  17. தன்னம்பிக்கை பெண்மணி சுதாவின் கதை சிலிர்க்க வைத்தது! பகிர்வுக்கு நன்றி! சினிமாதான் மக்களை கெடுக்கிறது என்று சொல்ல முடியாது! நம்மில் குறைகளை வைத்துக் கொண்டு ஊடகங்களை சாடுதல் கூடாது. ஊடகங்கள் எந்த விசயத்தையும் வேகமாக பரப்புவதால் வேண்டுமானால் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு! சிறப்பான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  18. ஒரு உண்மையா சொல்லட்டா சகோ
    பதிவோட நீளத்தை பார்த்து பயமா இருக்கு
    too long!!இருங்க படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
  19. இவ்வளோ நீளம் இதற்கு வொர்த் சகோ!
    சுதா மேடம் பெண்களுக்கு ஒரு எடுத்துகாட்டு !

    பதிலளிநீக்கு
  20. ஆம்! நீங்கள் சொல்லுவது சரியே! மிக்க நன்றி இந்த அருமையான பின்னூட்டத்திற்கு!

    பதிலளிநீக்கு
  21. சகோதரி! என்ன செய்ய? சில சமயம் சில உண்மைச் சம்பவங்களைக் கதையாகப் புனையும் போது நீள் பதிவைத் தவிர்க்க முடியாமல் போகின்றது! என்றாலும் தாங்கள் lengthy என்று சொல்லவிலையே அதுவே போதும்! (ஹாஹஹ) வாசித்து நேர்மையுடன் கருத்து தெரிவித்ததற்கு! நன்றி!

    தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி!

    பதிலளிநீக்கு
  22. வளவள னு இருந்தா அப்பிடி சொல்லிருக்கலாம் but கொஞ்சம் நீளம் என்றாலும் சுவாரஸ்யமா இருந்தது!:)))

    பதிலளிநீக்கு
  23. வாழ நினைத்தால் வாழலாம்...... திருமதி சுதா ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு.

    பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!

    பதிலளிநீக்கு